என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 63
அம்மா உணவகம் மூலம் சுவையான உணவு கொடுக்கப்படுகிறது என்றாலும், அந்த இடம் சுகாதாரமாகவும், சுற்றுச்சூழலுக்கு இனியதாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் மேயர் சைதை துரைசாமி. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் இடம் என்பதால், அதனை சிறப்பாகப் பராமரிப்பதற்கு திட்டங்களை வகுத்துக் கொடுத்தார்.
அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்கவும், விநியோகம் செய்யவும் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஒரே அளவில், ஒரே தரத்தில் இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார். அம்மா உணவகத்திற்குத் தேவைப்படும் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் நேரடியாக கொள்முதல் செய்வதை கூட்டுறவு அங்காடிகள், தன்னார்வ தோட்டக்கலை விவசாயிகள் மூலம் மேற்கொள்ளவும் ஆலோசனை தெரிவித்தார்.
அதேபோன்று அம்மா உணவகத்தில் உணவுக் கழிவுகளை உடனுக்குடன் அகற்றவும், அவற்றை சேகரித்து, எரிவாயு தயாரிக்கும் பரிட்சார்த்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக அம்மா உணவகத்திற்கு அருகில் குப்பைத்தொட்டி, கழிவறைகள் இல்லாத வகையில் திட்டமிடப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கும் உடன் வருபவர்களுக்கும் அம்மா உணவகத்தின் சேவை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதேபோன்று நெடுஞ்சாலை ஓரங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மேயர் சைதை துரைசாமிக்கு வந்தது. பொதுவாக நீண்ட தூரம் பேருந்துகளில் பயணம் செல்பவர்கள், அதிக விலை கொடுத்து சுகாதாரமற்ற உணவை வாங்கவேண்டிய நிலையே இருக்கிறது.
ஆகவே, நெடுஞ்சாலைகளில் கிராமப் பஞ்சாயத்துக்கள், பேருராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்பு மூலம் தமிழகம் எங்கும் அம்மா உணவகம் தொடங்கப்பட்டால், பயணிகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று திட்டம் போட்டார் மேயர் சைதை துரைசாமி. இதனை முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு எடுத்துச்சென்று ஒப்புதலும் பெற்றார். ஆனாலும், தன்னுடைய பதவிக் காலத்தில் இதனை திறக்க முடியவில்லை என்ற வருத்தம் இன்றும் சைதை துரைசாமிக்கு இருக்கிறது.
- நாளை பார்க்கலாம்.