என்ன செய்தார் சைதை துரைசாமி – 352
சென்னையில் கூவம், அடையாறு உள்ளிட்ட மாசுபடிந்த நீர்நிலைகளை சிறப்பாக மீட்டெடுப்பதற்கு பல்வேறு காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியிலே முடிந்திருக்கின்றன. அதே போன்று தான் முன்னெடுக்கும் திட்டமும் தோற்றுவிடக் கூடாது என்பதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் உறுதியாக இருந்தார். அதனாலே சிங்கப்பூர் சக்சஸ் மாடலை முழுமையாக அறிந்துகொள்வதற்கு அதிக ஆர்வம் காட்டினார். சிங்கப்பூர் போன்ற அழகான நாட்டை சுற்றிப் பார்த்து தான் மகிழ்ச்சி அடைவதை விட, இந்த பயணத்தை முழுக்க முழுக்க சென்னையின் நன்மைக்கே பயன்படுத்தினார்.
சிங்கப்பூர் அரசுத் துறையான பப்ளிக் யுடிலிட்டி போர்டு உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசினார். சிங்கப்பூரில் ஆறுகள் சீரமைப்பு செய்யப்பட்ட நடைமுறைகள் பற்றி அவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். சிங்கப்பூர் ஆறுகளைத் தூய்மைப்படுத்துவதற்கு முதல் கட்டமாக ஆற்றங்கரைகளில் இருந்த சுமார் 45,000 குடிசைகள் அகற்றப்பட்டுள்ளன. அங்கு வசித்தவர்களுக்கு வேறு இடங்களில் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று ஆற்றங்கரையில் இருந்த தொழிற்சாலைகளுக்கும் மாற்று இடங்கள் வழங்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளன. எந்த பாரபட்சமும் காட்டாமல் இந்த முடிவுகள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக ஆற்றில் நேரடியாகக் கலக்கும் கழிவுநீர் கால்வாய் மற்றும் இணைப்புகள் எல்லாம் துண்டிக்கப்பட்டன. கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டாயப்படுத்தப்பட்டன. இந்த வகையில் மிகத் தெளிவாகத் திட்டமிடப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு ஆற்றின் தூய்மை மீட்கப்பட்டுள்ளது.
கழிவு ஆறுகளில் படகுப்பயணம் நடைபெற வேண்டும், மக்கள் மீன் பிடித்து மகிழ வேண்டும் என்ற சிங்கப்பூர் பிரதமரின் கனவு சாத்தியமானதுடன் நில்லாமல் இன்றுவரை, சிங்கப்பூர் ஆறுகள் இயற்கை அழகுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனை முழுமையாகக் கேட்டறிந்த மேயர் சைதை துரைசாமிக்கு முழு நம்பிக்கை கிடைத்தது. தன்னுடைய சிங்கப்பூர் பயணத்தின் நோக்கம் சரியாக நிறைவடைந்தது என்று மகிழ்ச்சி அடைந்தார்.
- நாளை பார்க்கலாம்.