• Home
  • சினிமா
  • அமரனின் ஐயங்காருக்கு பா.ஜ.க.வுக்குள் கும்மாங்குத்து

அமரனின் ஐயங்காருக்கு பா.ஜ.க.வுக்குள் கும்மாங்குத்து

Image

அண்ணாமலையின் நைனா பாலிடிக்ஸ்

சூர்யா நடித்த சூரனைப் போற்று படத்தில் பிராமணரை ஒரு இடைஜாதியினராகக் காட்டியிருந்தார்கள். அதேபோன்று அமரன் படத்திலும் ஐயங்கார் ஜாதியை மறைத்திருக்கிறார்கள் என்று பா.ஜ.க.வினர் அனைவரும் பொங்கிய தருணத்தில், அதெல்லாம் பரவாயில்லை என்று அண்ணாமலை இழுத்து மூடவே, கட்சிக்குள் கும்மாங்குத்து நடக்கிறது.

அமரன் படத்தில் ஜாதியை திட்டமிட்டுப் புறக்கணித்ததாக பிராமணர்கள் கொதிக்கிறார்கள்.  இதையடுத்து அமரன் படத்தில் நைனா என்று மேஜர் முகுந்த் தன்னுடைய அப்பாவை கூப்பிடுவது சர்ச்சையாக்கப்பட்டிருக்கிறது. நைனா என்பது சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு , விழுப்புரம் வரை பல சாதியினர், தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் பயன்படுத்தும் சொல். முகுந்த் அவரது அப்பாவை அப்படித்தான் அழைத்தார், அதையே படத்தில் வைத்திருக்கிறோம் என்று சிவகார்த்திகேயன் சமாதானம் பேசினாலும் அதனை பா.ஜ.க.வினர் ஏற்கவில்லை.

முகுந்தை பிராமணராகக் கூட காட்ட வேண்டாம் அவருடைய தந்தை அவருக்கு இறுதிச்சடங்கு செய்யும்பொழுது சட்டையில்லாமல் தான் காட்சிப்படுத்தியிருப்பார்கள் , அதில் அவர் பூணூல் அணிந்திருப்பது போல காட்டியிருக்கலாமே. தேவையில்லாத சீனில் அக்னி கலசத்தை காண்பித்து ஒரு சாதியை தவறாக சித்தரிப்பதும் தேவையான சீனில் பூணூலை காண்பிக்காமல் ஒரு சாதியை மழுங்கடிக்கலாமா? என்று கொதித்தார்கள்.

ஆனால், அண்ணாமலை திடீரென களத்தில் குதித்து, தேசப்பற்று காட்டினால் போதும், ஜாதி என்னாத்துக்கு என்று பா.ஜ.க.வினர் வாயை மூட வைத்துவிட்டார். இதையடுத்து பா.ஜக.வின் நாராயணன், ‘’மேஜர் முகுந்தின் ஜாதியை மறைத்து விட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்களை பார்க்க முடிகிறது. அப்படி சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றே நான் கருதுகிறேன். அது படைப்பாளிகளின் உரிமை. ஒரு ஜாதியை சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்த தேவையில்லை.  

இந்த முடிவு முழுக்க முழுக்க வர்த்தகம் தொடர்பானது. ‘அமரன்’ படத்திற்கு வரி விலக்கோ அல்லது சலுகைகளோ எதுவும் இல்லை. லாபம் அடைந்தாலும், நஷ்டம் ஏற்பட்டாலும் அது முதலீடு செய்தவர்களுக்கே. மேலும், முகுந்த் வரதராஜன் அவர்களின் ஜாதி குறித்த உண்மைகளை மறைப்பது என்பது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வே. இதனால் சமுதாயத்தில் எந்த மாற்றமோ/ தாக்கமோ ஏற்படப் போவதில்லை என்பதால் அவற்றை நாம் வழக்கம் போல் கடந்து சென்று விட வேண்டும்’’ என்று பஞ்சாயத்தை முடித்து வைத்திருக்கிறார்.

அதாவது பதவியே தங்களுக்கு முக்கியம் என்பதை நாராயணன் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துவிட்டார் என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் குஷியாகிறார்கள். அதோடு, அமரன் திரைப்படம் இந்திய ராணுவம் மற்றும் அதன் தியாகத்தைப் பற்றியது மட்டுமே தவிர, அவரது ஜாதிக்கு இல்லை என்பதை அனைவரும் தான் புரிந்துகொள்ள வேண்டும்.

Leave a Comment