அழகு எனும் வரம்
‘’எந்த பட்டாம்பூச்சியும் அதன் வண்ணத்திற்காக பெருமைப்படுவதில்லை. அழகைக் காட்டி பரிசும் பாராட்டும் கேட்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்த வண்ணத்துப் பூச்சிகளுக்கு, அதனிடம் உள்ள அழகான வண்ணம் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை’’ என்று கல்லூரிப் பெண்ணுக்கு பாடம் நடத்தினார் ஞானகுரு.
‘’அப்படியென்றால் அழகை கொண்டாடக்கூடாதா?’’ கேள்வி கேட்டாள் அந்த அழகி.
‘’உன் அழகை ஏற்றுக்கொள். ரசித்துக்கொள். ஆனால் கொண்டாடத் தேவையில்லை., ஏனென்றால் உடல் அழகு நிரந்தரமானது அல்ல. நீ கோபமாக இருக்கும்போது, வருத்தத்தில், சோகத்தில், ஏக்கத்தில், பொறாமையில் இருக்கும்போது உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா..? அப்போது உன் அழகு காணாமல் போயிருக்கும்.
நீ அழகாக இருக்கிறாய் என்றால், அதில் உன்னுடைய பங்கு எதுவும் இல்லை. உன் அழகு என்பது பெற்றோரின் சொத்து. அதை வரமாக மாற்றிக்கொள்வதும் சாபமாக மாற்றிக்கொள்வதும் உன் கையில்தான் இருக்கிறது.
அழகை தூண்டிலாகப் பயன்படுத்தினால் ஆண் நிச்சயம் மாட்டுவான். அழகை அடைவதற்காக எந்த எல்லைக்கும் போவான். ஆனால், அழகு கிடைத்த பிறகு அதனை ரசிக்க மாட்டான். ஏனென்றால், எல்லா அழகும் இருட்டில் காணாமல் போய்விடும். மேலும், அழகு கைக்கு கிடைத்துவிட்டால், அதன் மதிப்பை அவன் மறந்தே போய்விடுவான்.
தினமும் கடல் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கடற்கரையை ஒட்டி வீடு வாங்குவார்கள். ஆனால், அதன்பிறகு கடல் இருக்கும் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். அப்படித்தான் பெண்ணின் அழகும் மாறிப்போகும். எனவே, அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே…’’
’’ஐஸ்வர்யா ராய் அழகினால் ஜெயித்திருக்கிறாரே..’’
’’ஐஸ்வர்யா ராயை விட எத்தனையோ அழகிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனாலும் அவர் கொண்டாடப்படுகிறார் என்றால், அழகை அவருடைய திறமையாக மாற்றிக்கொண்டார். அந்த திறமையாலே வெற்றி பெற்றவராக இருக்கிறார்.
அதேநேரம், ஐஸ்வர்யா ராய் இப்போது அவரது கணவனுக்கு அழகியாகத் தெரிய மாட்டார். ஒரு மனைவியாக, தோழியாக மாறியிருப்பார். அதுவே வெற்றி.
ஏனென்றால், ஐஸ்வர்யா ராய் வீட்டிலும் அழகியாக இருக்க முடியாது. வயிற்றுப் பசி வரும் நேரத்தில் ஆணுக்கு எந்த பெண்ணும் அழகாகத் தெரியமாட்டாள். உணவே முக்கியமாகத் தெரியும். அவன் மனைவி ஐஸ்வர்யா ராயாக இருந்தாலும், அந்த அழகை அவனால் சாப்பிடவோ, பருகவோ முடியாது. உணவுதான் அப்போது ஐஸ்வர்யா ராயைவிட அழகாகத் தெரியும். எனவே, அவள் மனைவியாக மாறித்தான் ஆகவேண்டும்…’’
‘’அழகினால் நன்மையே இல்லையா..?’’
‘’இருக்கிறது. ஒரு வேலைக்குச் செல்லும் இடத்தில் பெண்ணின் அழகுக்கு முதல் மரியாதை கிடைக்கலாம். அழகுக்காக வேலையும் கிடைக்கலாம். ஆனால், அவளது திறமை மட்டுமே வேலையை நிரந்தரமாக வைத்திருக்கும், முன்னேற வைக்கும். எல்லோருக்கும் அழகு அப்படி பயன் தருவதில்லை. எனவே, பெண்கள் அழகுக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை. ஒவ்வொரு பெண்ணும் அவளுக்கான தனித்தன்மையைக் காட்டியே வெற்றி அடைய வேண்டும்…’’ என்றார் ஞானகுரு.
‘’அப்படியென்றால் நான் அலங்காரம் செய்வதே தவறா..?’’
‘’நிச்சயம் தவறு அல்ல. உன் அழகை பிறர் ரசிக்க வேண்டும் என்று அலங்காரம் செய்வதுதான் தவறு. மலர், மான், யானை மட்டுமல்ல பன்றி, பலாப்பழம் என எல்லாமே இயற்கையாகவே அழகாக இருக்கின்றன. ஒவ்வொரு பெண்ணும் இயல்பாகவே அழகியே. எனவே, உன் அழகைக் காட்டி ஆண்களை மயக்க நினைக்காதே. உன் அன்பை, உன் தனித்தன்மையைக் காட்டு.
ஒருவர் மீது அன்பும் பாசமும் வந்துவிட்டால், அங்கு உடல் அழகுக்கு முக்கியத்துவம் இல்லை. உன் தாயிடமோ, தந்தையிடமோ அழகை எதிர்பார்த்திருக்கிறாயா..? நீ எப்படியிருந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதுபோல் அவர்கள் எப்படியிருந்தாலும் நீயும் ஏற்றுக்கொள்கிறாய். அப்படித்தான் அனைத்து மனிதர்களையும் அன்பால் மதிக்க வேண்டும். அழகைக் கண்டு ஏமாறாதே… ஏமாற்றவும் செய்யாதே…’’
ஞானகுரு பேசி முடித்ததும் தன்னுடைய அழகு பற்றிய பிம்பம் உடைந்துபோனதை உணர்ந்தாள் கல்லூரிப் பெண்.