புதுசா ஒரு கணக்கு சொல்றாங்க.
இப்போது விஜய் கட்சியினர் சொல்லிவரும் கருத்து ஒன்றே ஒன்றுதான். அதாவது, 2026 தேர்தலில் விஜய் கட்சிக்கு 20% ஓட்டு தனித்து கிடைக்கும். ஆகவே, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் ஆட்சி நிச்சயம் என்கிறார்கள்.
ஆமாம், இந்த கணக்கு எப்படி சொல்கிறார்கள்..?
விஜய் ஆதரவாளர்கள், ‘’தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்களில் 4.34 கோடி பேர் தான் ஓட்டு போட்டார்கள். 1.84 கோடி பேர் ஓட்டு போடவில்லை. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு. எல்லா தேர்தலிலும் இப்படி ஒரு கூட்டம் இருக்கிறது. இப்பொழுது இருக்கும் கட்சிகள் மீது 1% கூட நம்பிக்கை இல்லாதவர்கள். பல வருடங்களுக்கு பிறகு ஒரு புது அலை வருவதால் அவர்களில் கணிசமானோர் மாற்றத்தை எதிர்பார்த்து விஜய்க்கு ஆதரவளிக்க ஓட்டு போடுவார்கள்.
ரஜினி கமலுக்கு பிறகு மூன்றாவது இடத்தில் இருந்து வந்த விஜயகாந்த் 10% வாக்கு வாங்கினார். அதுவும் அப்பொழுது கருணாநிதி ஜெயலலிதா என்று பெரிய தலைவர்கள் இருந்தார்கள். இன்று சினிமாவில் எம்ஜியாருக்கு பிறகு நம்பர் 1 இடத்தில் இருந்து அரசியலுக்கு வரும் விஜய் அதை விட இரட்டிப்பாக வாங்குவார். முக்கிய காரணம் கருணாநிதி ஜெயலலிதா போன்று இன்று பெரிய தலைவர் இல்லை. அதனால் தான் சங்கி பாஜகவை எல்லாம் 11% வாங்கவிட்டு வேடிக்கை பார்க்கிறது கையாலாகாத திமுக.
மேலும் அன்று வீட்டுக்கு வீடு விஜயகாந்த் ரசிகர்கள் இல்லை. ரஜினி கமல் விஜயகாந்த் என்று இருந்தது. வீட்டுக்கு வீடு விஜயகாந்த் ரசிகர்கள் இருந்திருந்தால் அவர் 20% வாங்கி இருப்பார். இப்பொழுது வீட்டுக்கு வீடு விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம். சீமான் 8%(தனித்து) அண்ணாமலை 11%(பல கட்சிகளின் ஆதரவில்) இவர்கள் இருவருக்கும் வீட்டுக்கு வீடு ஆதரவாளர்கள் இல்லை. வீட்டுக்கு வீடு ஓட்டு இல்லாத இவர்கள் 8%, 11% எடுக்கும்பொழுது வீட்டுக்கு வீடு ரசிகர்கள் வைத்திருக்கும் விஜய் இவர்களை விட இரட்டிப்பாக எடுப்பார்.
ஆக சினிமாவில் மூன்றாம் இடத்தில் இருந்து வந்த விஜயகாந்த் 10%, வீட்டுக்கு வீடு ஆதரவாளர்கள் இல்லாத சீமான் 8% அண்ணாமலை 11% இவர்களை விட சினிமாவில் முதல் இடத்தில் இருந்து வரும் விஜய், வீட்டுக்கு வீடு ஆதரவாளர்கள் வைத்திருக்கும் விஜய் இரண்டு மடங்கு 20% வாக்கு வாங்குவார்.
மேலும் வேங்கைவயல், கள்ளச்சாராய சாவு என்று நிர்வாக திறனற்ற ஒரு மோசமான ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது. எதிரே சிதறிய அதிமுக. சின்ன சின்ன கட்சிகள். சரியான திடமான பலமான மாற்று சக்தி யாரும் இல்லை. விஜய் மட்டுமே அந்த இடத்தை நிரப்ப முடியும்.
தமிழ்நாட்டில் செண்டிமெண்ட் எப்பொழுதும் பயங்கரமாக வேலை செய்யும். எம்ஜியாரை கட்சியை விட்டு தூக்கி எறிந்த கருணாநிதியை ஆட்சியை விட்டே அகற்றியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். ஒருமுறை இருமுறை அல்ல மூன்று முறை. இப்பொழுது பல்லாயிரம் கோடியில் புரளும் பணக்கார திமுகவை, குடும்பமாக ஆக்டோபஸ் கரங்களை விரித்து நிற்கும் திமுகவை ஒரு தனி மனிதனாக விஜய் எதிரே நின்று எதிர்க்கும்பொழுது மக்களின் அனுதாபம் விஜய்க்கு கிடைக்கும்.
மேலும் 18-39 வயது வரை இருக்கும் 2.50 கோடி இளைஞர்கள் ஓட்டில் கணிசமான ஓட்டுகள் விஜய்க்கு கிடைக்கும். இளைஞர்களை ஈர்க்கும் அளவு உதயநிதி எதுவும் செய்யவில்லை. நீட் நாடகத்தால் வெறுப்பையே சம்பாரித்து இருக்கிறார். இங்கே ஸ்டாலினே ஊதி பெரிதாக்கப்பட்ட சராசரி பிம்பம். கூட்டணி இல்லாமல் வெற்றி பெறவே முடியாத பலவனீமான கட்சி இன்றைய திமுக. சிந்திக்கும் திறனற்ற திமுக ஆதரவாளர்களிடம் கேட்க விரும்புவது உங்களுக்கு எதிராக சீமான் அண்ணாமலை இருக்க வேண்டுமா அல்லது விஜய் இருக்க வேண்டுமா? மூளை இருந்தால் எது தமிழ்நாட்டிற்கு நல்லது என்று புரிந்துக் கொள்வீர்கள்.
மேலும் 2026 அதிமுகவோடு விஜய் கூட்டணி போனால் 200 வெற்றி பெறுவோம் என்று சொன்ன ஸ்டாலினின் கட்சி 20 சீட் கூட வெற்றி பெற முடியாது. விஜய் துணை முதல்வர் ஆவார். எங்களுக்கு ஆட பல திட்டம் இருக்கிறது. ஆனால் நாங்கள் எங்கள் பலத்தை நிரூபிப்போம். 20% மேல் வாங்குவோம் அல்லது ஆட்சி அமைப்போம். மாற்று சக்தியாக உருவெடுப்போம். திமுகவால் கீழே வீசப்பட்ட பெரியாரிய அம்பேத்கரிய சமூகநீதி ஆயுதத்தை பட்டைத் தீட்டி இப்பொழுது நாங்கள் எடுத்து வருகிறோம். சமரசம் இல்லாமல் சண்டை செய்வோம்’’ என்று சொல்கிறார்கள். இதெல்லாம் நம்புற மாதிரி இல்லைன்னாலும் கதை நல்லாத்தான் இருக்கு