• Home
  • உறவுகள்
  • குறைகளை ஏற்றுக்கொண்டு காதல் செய்யுங்கள்..!

குறைகளை ஏற்றுக்கொண்டு காதல் செய்யுங்கள்..!

Image

போனால் கிடைக்காது உறவு

தன்னை யாருமே முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, எல்லோருக்கும் எத்தனை முறை சொல்லிக்கொடுத்தாலும் திரும்பத் திரும்ப தப்பு செய்கிறார்கள் என்ற எண்ணம்தான் நிறைய மனிதர்களுக்கு இருக்கிறது. அதனால்தான், உறவுகளையும் நண்பர்களையும் குறைகளுடன் ஏற்றுக்கொள்வதில் தயக்கம் நிலவுகிறது.

ஒவ்வொரு நபருக்கும் பலம் இருப்பது போலவே, பலவீனமும் இருக்கிறது. நூறு சதவீதம் முழுமையான ஆணும், பெண்ணும் இந்த உலகில் யாருமே இல்லை என்பதுதான் உண்மை. கடவுளாக இருந்தாலும், அவரிடமும் சில குறைகளை கண்டுபிடித்துவிட முடியும். எனவே எப்போது குறைகளுடன் பிறரை ஏற்றுக்கொள்வதற்கு தயாராகிறீர்களோ, அப்போது தான் வாழ்க்கை மகிழ்ச்சிக்கு மாறுகிறது. 

மனைவி அழகாக இருப்பதை எப்படி விரும்புகிறீர்களோ அப்படியே அவருடைய சமையல் குறைகளையும் விரும்ப முடியும். கணவனின் தைரியத்தை மெச்சுவது போலவே, அவரது சோம்பேறித்தனத்தையும் ஏற்பது சுலபம்தான்.  

பலத்தையும் பலவீனத்தையும் ஒருசேர ரசிக்க முடியாதவர்களுக்கு, வாழ்க்கை மோசமான பாடத்தை கற்றுக்கொடுத்துவிடும். அப்போது, நீங்கள் ரசிக்க நினைத்தாலும் முடியாமல் போய்விடும் என்பதை சொல்வதற்கான கதை இது.

ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்திருந்தது… கணவர் இறந்திருந்தார். பல வருடங்களாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே சில காலம் அவதிப்பட்டு, பிறகு அந்த நபர் இறந்து போனார்.  கணவர் நோய் தாக்குதலுக்கு ஆளாகி படுக்கையில் விழுந்த நேரத்தில், அவரது மனைவி குடும்பத்தின் சுமைகளை சுமக்க வேண்டியிருந்தது. அவரையும் குழந்தைகளையும் பராமரித்தல், வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் மட்டுமன்றி வருமானத்தை பற்றியும் யோசிக்க வேண்டியிருந்தது.

படுக்கையிலேயே சுயநினைவின்றி கழிவகற்றும் நிலை ஏற்பட்ட போது அவள் மிகுத்த அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதன் துர்நாற்றம் அந்த வீட்டையே தலைகீழாக மாற்றத் தொடங்கியிருந்தது. யாரும் முகம் சுளித்துவிடக் கூடாது என்று அஞ்சி வீட்டை சுத்திகரித்துக் கொண்டேயிருந்தாள். திரும்ப திரும்ப வீட்டை கழுவினாள். ஆடைகளை கழுவினாள். மெத்தையை, தலையணையை அடிக்கடி வெயிலில் காய வைத்தாள். அவளது மனம் திருப்தியடையும் வரை தரையைத் துடைத்துக் கொண்டேயிருந்தாள். 

இவ்வாறாக ஒரு நாளில் கணவர் இறந்தும் போனார். இறுதி சடங்குகள் முடிவடைந்த பின், நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர். அவர்களிடம் பேசத் தொடங்கினாள் மனைவி.  

“நான் அவரைச் சந்தித்தபோது அவர் மிகவும் அழகான நேர்த்தியான இளைஞன். எனவே நான் அவரை ஒரே பார்வையில் விரும்பினேன். நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.  எமது தாம்பத்யம் இனிமையானது. குழந்தைகளை உருவாக்கியது. ஆனால் நான் அவரை மணந்ததிலிருந்து, ஒரு இரவேனும் நிம்மதியாக தூங்கியதில்லை. ஏனென்றால் அவரது குறட்டை சத்தம் மிகவும் இம்சைப்படுத்தியது. 

அது விசித்திரமான குறட்டை.  ஒரு தொழிற்சாலையின் மொத்த இயந்திரங்களின் ஓசையை விடவும் இரைச்சலாய் இருக்கும். நான் 35 ஆண்டுகளாக இந்த பிரச்சினையை அனுபவித்தேன்.. எனக்கு  இப்போது 60 வயது.  25 முதல் 60 ஆண்டுகள் வரை நான் தூக்கமின்மையால் அவதிப்பட்டேன். இவ்வாறான துன்புறுத்தலை எந்தப் பெண்ணும் பொறுத்துக்கொள்ள மாட்டாள்.

இவ்வாறாக இறுதியில் அவர் நோய்வாய்ப்பட்டார். வழக்கம் போல அவரது குறட்டையும் தொடர்ந்தது. ஆனால் அப்போது அந்த இரைச்சல் எனக்கு ஆச்சரியமான ஆறுதலைக் கொடுத்தது. அவர் இன்னும் உயிருடன் இருப்பதை அதை கொண்டே நான் அறிந்து கொண்டேன். குறட்டை சத்தம் சிறிது நேரம் நின்றுவிட்டால் நான் விழித்து விடுவேன். குறட்டை இரைச்சலின்றி என்னால் தூங்க முடியவில்லை. குறட்டை சத்தம் வரவில்லையென்றால் அவரை உலுக்கிப் பார்த்தேன்.  சுவாசிக்கிறாரா என மூக்கில் கைவைத்துப் பார்ப்பேன்.

இப்போது அவர் இறந்து விட்டார். அவர் இனி ஒருபோதும் குறட்டை விட மாட்டார். அந்த இரைச்சலை நான் இனி கேட்கவே மாட்டேன் என நினைக்கும் போது ஏற்படும் வேதனையை என்னால் தாங்க முடியவில்லை.  அந்த ஒலியை மீண்டும் கேட்க மாட்டேனா? என மனம் ஏங்குகிறது. எல்லாவாற்றையும் யாரோ திருடிச் சென்றது போல இருக்கிறது.

எனவே நான் உங்களுக்கு சொல்வதெல்லாம்..  நாம் நேசிப்பவர்களிடம் உள்ள பலவீனங்கள் நமக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.  ஆனால் அது அற்புதமான நினைவாக தோன்றுவது அவர்களை இழந்த பின்னர்தான். எனவே அவர்களின் சிறிய பலவீனங்களை மன்னியுங்கள்.  அவர்களை விட்டு விடுங்கள். அந்த பலவீனங்களை பொறுத்துக்கொள்ளுங்கள், அவற்றை ரசிக்கத் தொடங்குங்கள். நீங்கள் ஒரு கட்டத்தில் அதை ஒரு இன்பமாக உணருவீர்கள் … ” என்று அந்தப் பெண் முடித்தார்.

கணவர் சாப்பிட்ட தட்டை கழுவாமல் போகும்போது, டீ கப்பை அப்படியே வைத்துவிட்டுப் போகும் போது., தலை துவட்டிய ஈரத்துண்டை கட்டிலில் போட்டுச் செல்லும்போது, அவையெல்லாம் பெரிய தொந்தரவாகவே இருக்கும். ஆனால் ஒரு நாள் அதுவே உங்களுக்கு அற்புதமான நினைவாய் தெரியும். அதை திரும்ப அடைய முடியாதா? என மனம் ஏங்கும்.

அதேபோல் ரசத்தில் அடிக்கடி உப்பு போடுவதை மனைவி மறந்து போவதை, உங்கள் வெள்ளை சட்டையில் சாயம் பட்டுவிடுவதை, வெளியே கிளம்புவதற்கு தாமதமாவதை ஒரு சிக்கலாக கருதாதீர்கள். அவை எல்லாம் சிக்கல்கள், பலவீனங்கள் அல்ல. வாய்ப்புகள் மட்டுமே. நாம் விரும்பும் ரம்மியமான உலகம் நம்மிடம் இல்லையென்றாலும், நாம் பெறும் உலகில் மகிழ்ச்சியைக் காண முடியுமென்றால் வெற்றியை அடைவது அத்தனை சிரமமாக இருக்காது.

வாழ்வை மீட்டிக் கொள்ள முயற்சிப்பதற்குப் பதிலாக, நாமே நம்மை சோகத்தில் ஆழ்த்தி, அதிக தோல்வியை அனுபவிக்கிறோம். வாழ்வை போர்க்களமாக மாற்றிவிடுகிறோம்.

எனவே பலவீனங்களும் மிகவும் அழகானவை, அர்த்தபூர்வமானவை…  அதனை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனம்தான் வேண்டும். அப்போதுதான் உங்களைச் சுற்றிலும் உறவுகளும் நட்புகளும் நிலைத்து நிற்பார்கள்.

Leave a Comment