சபாஷ் மனு பக்கர்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுக் கொடுத்திருக்கிறார் மனு பக்கர். இந்த வெற்றிக்குப் பின் இருக்கும் ஒரு சோகக் கதை நிறைய பேருக்குத் தெரியாதது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனு பக்கர்,2002 ல் பிறந்தவர்.மிக இளம் வயதிலேயே அதாவது 15 வயதிலேயே தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டவர்.2017ல் கேரளாவில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்களை வென்றார்.
2018ல் மெக்சிகோவில் நடந்த உலக துப்பாக்கி சுடும் போட்டிகளில் தங்கம் வென்று மிக இளம் வயதில் அதாவது 16 வயதில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைச் செய்தார்.
இப்படி பல சர்வதேச போட்டிகளில் தங்கம் வென்ற மனு பக்கர் 2020 ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார்.10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பக்கர் உறுதியாக தங்கம் வெல்வார் என அனைவருமே எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மனு பக்கரும் அந்த போட்டியில் தங்கம் வென்றுவிட முடியும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார்.
போட்டி தொடங்கிய நேரத்தில் மிகச்சரியாக மனு பக்கரின் துப்பாக்கி திடீரென வேலை செய்ய வில்லை. அவரால் அதை உடனடியாக சரி செய்ய முடியவில்லை. எனவே வெளியே வந்து துப்பாக்கியை சரி செய்து கொண்டு மீண்டும் உள்ளே வருகையில் நேரம் கடந்து விட்டது.
36 நிமிடங்களில் 44 ஷாட் சுட வேண்டும்..என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த அவசரத்தில் மனு பக்கரால் சரியாக செயல்பட முடியாமல் போனது. சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்ற அவரால்,அந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல முடியாமல் தோற்று, உடைந்து வெளியே வந்தார். இந்தியாவுக்கும் அது பெருத்த ஏமாற்றம்.
சோர்ந்துபோன மனு பக்கரால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த கசப்பான நினைவில் இருந்து வெளிவர முடிந்தது. அதன் பிறகு தீவிரமாகப் பயிற்சி எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கி, பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை மனு பக்கர் வென்று விட்டார்.
இதன் மூலமாக ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்று சாதனையை மிக இளம் வயதில் செய்திருக்கிறார் மனு பக்கர்.
இன்னும் நிறைய பதக்கங்கள் மனுவுக்குக் காத்திருக்கின்றன.