மொட்டை மாடியில் ஒரு வித்தியாச சாதனை

Image

அமைச்சர் மா.சுப்பிரமணியன்



சாதனை செய்வதற்கு வயது ஒரு தடையல்ல, எந்த வயதிலும் சாதனை செய்யலாம் என்பதற்கு, இளைஞர்களுக்கு வாழும் முன்னோடியாக இருக்கிறார், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.


உடலில் ஆயிரம் பிரச்னைகள் இருந்தபோதும் உள்ளத்தில் வலிமை இருந்துவிட்டால் போதும், உலகைக்கூட வலம்வர முடியும். அப்படி சாதித்தவர்கள் எத்தனையோ பேர் உலகில் இருக்கிறார்கள். அதில் ஒருவராக மா.சுப்பிரமணியனும் இருப்பது வியக்கத்தகுந்த விஷயம். அவர், அரசியலைத் தாண்டி அதிகம் பேரால் நேசிக்கப்படக்கூடியவர். காரணம், இயற்கை மீது பற்று கொண்டவர். மரங்கள் வளர்ப்பதில் ஈடுபாடு உடையவர். இதுதவிர, இளைஞர்களின்  கனவுகளை நனவாக்குபவர்.

இவையெல்லாம்  ஒருபுறமிருக்க, மறுபுறம் சர்க்கரை நோய் அவரை, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக  ஆட்கொண்டிருக்கிறது. இதைவிட, இன்னொரு கொடுமை விபத்து ஒன்றில் அவரின் இடதுகால் மூட்டு நொறுங்கிப்போனது. ஆனாலும், அதற்காகவெல்லாம் அவர் சிறிதும் கவலைப்பட்டது இல்லை. கால் முறிவுக்காக அறுவைச்சிகிச்சை செய்துகொண்ட அவரிடம், ‘இனி வேகமாக நடப்பதோ, சம்மணமிட்டு உட்காருவதோ கூடாது’ என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நாமென்றால்,  மருத்துவர்கள் சொன்னபடி கேட்டு அமைதியாக இருந்திருப்போம். ஆனால், மா.சுப்பிரமணியம் மருத்துவத்தைவிட மனதை நம்புபவர். ஆம், தன்னம்பிக்கையுடன் எழுந்து நடந்தார். மருத்துவ அதிசயமாக ஓடவும் தொடங்கினார். அதன்விளைவாகத்தான், இன்று பல லட்சம் பேர் அவர் பின்னால் எழுந்து நடந்துகொண்டிருக்கின்றனர்.
ஓடும் காலில் ஏற்பட்ட முறிவையும், உடலில் உள்ள சர்க்கரை நோயையும் நினைத்து அவர் வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தால், இன்று, எண்ணற்ற சாதனைப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருக்காது. உள்ளத்தில் வலிமையை ஏற்படுத்திக் கொண்ட அவர், 2014ம் ஆண்டு மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டினார். அதுமுதல் இன்றுவரை உலகில் பல்வேறு இடங்களில் நடைபெறும் மாரத்தான் போட்டிகள் அனைத்திலும் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார். இதுவரை, அவர் 111 மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.  

தொடர்ந்து 25 முறை, 21.1 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்து சான்றிதழும் கேடயமும் பெற்ற அவர், 29  போட்டிகளுக்கு மேல்  பங்கேற்று, ஆசிய புக் ஆஃப் ரெக்கார்டிலும் இடம்பெற்றார். தொடர்ந்து, வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யுனிவர்சிட்டியால் மதிப்புறு முனைவர் பட்டமும், இண்டர்நேஷனல் கோல்டன் டிஸ்க் அவார்டும் பெற்றார்.  2019ம் ஆண்டு பெசன்ட்நகர் ஆல்காட் பள்ளியில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் கலந்துகொண்ட மா.சுப்பிரமணியனுக்கு, அது 100வது போட்டியாக அமைந்தது. இதிலும் 21.1 கிலோ மீட்டர் தூரம் ஓடி சாதனை படைத்தார். இந்த தூரத்தை, அவர் 2.31 மணியில் ஓடி முடித்தார்.


மாரத்தானில் கலந்துகொள்வது குறித்து மா.சுப்பிரமணியன், ‘பொதுவாக  மாரத்தான்  ஓட்டம் என்பது பந்தயம் அல்ல. பல நல்ல விஷயங்களை முன்வைத்து அதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தவே நடத்தப்படுகிறது.  ஆகவேதான், மாரத்தானில் நான் விருப்பமுடன்  கலந்துகொள்கிறேன். மேலும் இளைஞர்களிடையே உடல் ஆரோக்கியத்தைப் பேணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே ஓடுகிறேன். என்னை வேகமாக நடக்கக்கூடாது; சம்மணமிட்டு உட்காரக்கூடாது என்று சொன்ன டாக்டர்கள், இப்போது என்னை உதாரணம் காட்டியே நோயாளிகளை உற்சாகப்படுத்துகின்றனர்.

மாரத்தான் ஓட்டம் இருக்கும் நாள் தவிர, மற்ற நாட்களில் நான் அதிகாலை எழுந்து நடக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.  டயாபடீஸ் காரணமாக ஏற்படும் சோர்வு உள்ளிட்ட எந்த பிரச்னையும் எனக்கு கிடையாது. முப்பது வயது இளைஞனாக நான் என்னை உணர்கிறேன்.  நான் ஓடும் ஒவ்வொரு மாரத்தான் ஓட்டத்திலும், குறைந்தது 20 புதிய இளைஞர்களாவது என்னைச் சந்தித்து,  ‘உங்களைப் பார்த்துதான் நானும் ஓடவந்திருக்கிறேன்’ என்று சொல்வர்.  இந்த ஒன்றுக்காகவாவது ஓடிக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது’ என்கிறார், உற்சாகமாக.

இவர், வீட்டு மொட்டை  மாடியில்  எட்டு வடிவ ஓடுதளத்தை வரைந்து, 4 மணி 8 நிமிடம் 18 நொடிகள் இடைநில்லாமல் 1010 முறை ஓடி, ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர், ‘நான் அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து எம்.ஆர்.சி.  ரேஸ் கோர்ஸ், ஒய்.எம்.சி.ஏ.,  ஐ.ஐ.டி., மெரினா என எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் தினந்தோறும் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறேன். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, மார்ச் மாதத்தில் சென்னையில் உள்ள பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், ஓடுவதறகான பயிற்சி தளங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் என் வீட்டு மொட்டை மாடியிலேயே  ஓடுவதற்கான் பயிற்சியைத் துவங்க நினைத்தேன். அதற்காக, இருக்கும் இடத்திலேயே சிறு அளவில், 27.2 நீளத்துக்கும் 17.5 அகலத்துக்குமான எட்டு வடிவ நடைப்பயிற்சி வட்டத்தை மார்ச் 17ம் தேதியே வரைந்துகொண்டேன். அதிலிருந்து தினந்தோறும் கடந்த மூன்று மாதங்களாக ஓடத் தொடங்கினேன்.

ஒவ்வொரு நாளும் இந்த எட்டு வடிவ வட்டத்தில், முதலில் ஒரு மணி நேரம் என ஓடத் தொடங்கி, கடைசியாக 2 மணி நேரம் ஓடுவதை வாடிக்கையாக வைத்திருந்தேன். ஒருநாள் வெயில் இல்லாத தட்பவெப்ப சூழ்நிலையின்போது, தொடர்ச்சியாக எனக்கே தெரியாமல் தொடர்ந்து மூன்றரை மணி நேரம் ஓடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இதை மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு சாதனையாக  ஆக்க நினைத்தேன். அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, கடந்த மாதம் ஒருநாள் விடியற்காலை 4 மணிக்கு ஓடத்தொடங்கினேன். இறுதியாக,  4 மணி 8 நிமிடம் 18 நொடிகள் இடைநில்லாமல் 1010 முறை ஓடி சாதனை புரிந்தேன்.

111 மாரத்தான்களில்  21.1 கிலோ மீட்டரை  இரண்டரை மணி நேரத்தில் கடந்து  முடித்திருக்கிறேன். ஒவ்வொரு மாரத்தானிலும் இரண்டை கால் மணிநேரத்திலிருந்து இரண்டை முக்கால் மணி நேரத்துக்குள்ளாகவே ஓடிக் கடக்கிறேன். கடைசியாக, கடந்த பிப்ரவரி மாதம் பாண்டிச்சேரியில் நடைபெற்ற 42 கிலோ மீட்டர் மாரத்தானில் கலந்துகொண்டேன். மாரத்தானில் கலந்துகொண்டு சமதளத்தில் ஓடுவது என்பது எளிதான விஷயம். அதேநேரத்தில் குறுகலான எட்டு வடிவ வட்டத்தில் வளைந்து ஓடுவது என்பது சற்று கடினமானது. இதில் முதலில் ஓடியபோது சற்று மயக்கம் வருவதுபோல் இருந்தது. ஆனால், அதையும் கடந்து தினந்தோறும் காலையும், மாலையும் வாய்ப்புகள் கிடைத்தபோதெல்லாம் நடப்பதும் ஓடுவதுமாக இருந்தேன். அப்படிச் செயல்பட்டதன் விளைவே இந்த சாதனை…’’ என்கிறார்.


வெல்டன் சார்….

Leave a Comment