தங்கும் விடுதி எனும் புரட்சிகரத் திட்டம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 152

வரலாற்றில் முதன்முதலாக மாநகராட்சிப் பள்ளியின் +2 மாணவர்களுக்கு தங்கும் விடுதி என்ற ஒரு புரட்சிகரமான திட்டத்தை மேயர் சைதை துரைசாமி தொடங்கிவைத்து மாபெரும் சாதனை படைத்தார். இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் நடைமுறையில் இல்லை. குறிப்பாக அரசு அல்லது மாநகராட்சிப் பள்ளி மாணாக்கர்களுக்கு இப்படி ஒரு விடுதித் திட்டத்தை யாரும் யோசித்தது கூட இல்லை. 

தனியார் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளியில் படிப்பதற்குக் கூடுதல் நேரமும் வசதிகளும் செய்துதரப்படுகின்றன. அதேநேரம், வீட்டிலும் மாணவர்கள் படிப்பதற்குத் தேவையான வசதிகள் பெற்றோரால் செய்து தரப்படுகிறது. ஆனால், மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் பரம ஏழைகள். இன்னும் சொல்லப்போனால் குடிசை வீடுகளில் அல்லது ஒரு படுக்கையறை உள்ள வீடுகளில் வசிக்கிறார்கள். அதனால் படிப்பதற்கு ஆர்வம் இருந்தாலும் கவனம் சிதற நேரிடுகிறது. போதிய திறமை இருந்தும், ஆர்வம் இருந்தும் கவனமுடன் படிப்பதற்கு உகந்த சூழலும் தேவையான வசதிகளும் கிடைப்பதில்லை.

இதன் காரணமாக இந்த மாணவர்களால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவது இயலாத காரியமாகிறது. இப்படியொரு சிக்கல் மாணவர்களுக்கு இருப்பதை அறிந்து ரொம்பவே வருந்தினார் மேயர் சைதை துரைசாமி. ஏழ்மையில் தவிக்கும் மாணவர்களுக்குப் போதிய வசதியுடன் படிப்பதற்கு இடம் கொடுக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை என்று கருதினார் மேயர் சைதை துரைசாமி.

இது குறித்து ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மேயர் சைதை துரைசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அனைவரும், ‘பள்ளியில் நாம் நன்றாக பாடம் சொல்லிக்கொடுக்கலாம், பள்ளி நேரம் முடிந்த பிறகு நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?’ என்று கையை விரித்தார்கள். ஆனாலும், சைதை துரைசாமி மீண்டும் மீண்டும் யோசித்து ஒரு சிறப்பான திட்டத்தை வடிவமைப்பு செய்தார். அது தான், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு தங்கும் விடுதி எனும் புரட்சிகரமானத் திட்டம்.

  • நாளை பர்க்கலாம்.

Leave a Comment