ஐந்து நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர்

Image

மோடியின் அடேங்கப்பா சாதனை

ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களை உருவாக்குவதில் மோடி ஆட்சி சாதனை படைத்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கையில், ’’ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் ஒரு கோடீஸ்வரரை இந்தியா உருவாக்கியிருக்கிறது. 2023 இல் 259 கோடீஸ்வரர்கள் இருந்தனர். பணக்காரர்களின் பட்டியல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 1500-க்கும் மேற்பட்ட தனிநபர்களின் நிகர சொத்து மதிப்பு ஆயிரம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. ஏழாண்டுக்கு முன்பு இருந்ததை விட இது 150 சதவிகித வளர்ச்சியை காட்டுகிறது.

இந்த ஆண்டு ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து மதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 1539 ஆக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த பட்டியலில் 220 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஜூலை 2024 இல், ஹிருன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. 2020 இல் நான்காவது இடத்தில் இருந்த கௌதம் அதானி, முதன்மை இடத்தை பிடித்துள்ளார். அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 95 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூபாய் 10 லட்சத்து 21 ஆயிரத்து 600 கோடி சொத்துகளை அதானி குவித்துள்ளார். முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆக, அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து குவிப்புக்காகத் தான் மோடி ஆட்சி நடத்துகிறாரே தவிர, ஏழை, எளிய மக்களின் நலன் சார்ந்தோ, பசி, பட்டிணியில் உழலும்மக்களை வறுமையிலிருந்து மீட்கவோ உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுத்ததில்லை. இதன்மூலம், மக்கள் நலனில் அக்கறையில்லாத கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதரவு ஆட்சியாகத் தான் மோடி ஆட்சி நடைபெறுகிறது’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment