ஞானகுரு சிந்தனை
‘மனிதர் என்றால் அவருக்கு ஒரு லட்சியம் இருக்க வேண்டும். வாழ்வதற்குள் எதையாவது சாதிக்க வேண்டும். மரணத்துக்குப் பிறகும் அவரை இந்த உலகம் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். அதனால், ஒவ்வொரு நபரும் லட்சியத்தை உருவாக்கி, அதை நோக்கி நடை போடுங்கள்’ என்று பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியப் பெருமக்களும், மேடைகளில் பேச்சாளர்களும் முழங்குவதுண்டு.
இது உண்மைதானா… லட்சியம் இல்லாத மனிதர்களுக்கு இந்த உலகில் வாழ்வதற்கு தகுதி இல்லையா என்று ஞானகுருவிடம் கேட்டார் மகேந்திரன்.
‘’மற்ற உயிர்களுக்கும் மனிதனுக்கும் வாழ்க்கை போராட்டத்தில் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. எல்லா உயிர்களும் பிறக்கின்றன, வாழ்வதற்காக போராடுகின்றன, தங்கள் சந்ததியை பெருக்குகின்றன, அதன்பிறகு இந்த உலகில் இருந்து மறைந்துபோகின்றன. மற்ற உயிரினங்கள் செய்வதைத்தான் மனிதனும் செய்கிறான். பிறகு அவனுக்கு மட்டும் எதற்கு லட்சியம்..?’’
‘’புரியவில்லையே சாமி.. ஆனால் மனிதன் இன்று எத்தகைய நாகரிகமான, எத்தகைய விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ளான். இவை எல்லாமே லட்சியங்களிக் கனவு கண்ட மனிதர்களால் ஏற்பட்டதுதானே..?’’
‘’ம்… மனிதகுலம் பிறந்த நாளில் இருந்து எதையாவது தின்றுதான் வாழ்கிறது, இன்றும் நீ அப்படித்தான் தின்று கொண்டிருக்கிறாய். இன்னும் சொல்லப்போனால் ஆதி மனிதன் போன்று இயற்கையாக விளைந்த பொருட்களை சூடு படுத்தாமல் சாப்பிட வேண்டும் என்ற உணவு பழக்கத்தை மாற்றிக்கொண்டு செல்கிறாய்.
அன்று மனிதன் உணவைத் தேடி அலைந்தான். இன்று, பணத்தை தேடி அலைகிறாய். பணம் என்பது உணவை தாண்டி, ஆடை, தங்குமிடம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்குத் தேவைப்படுகிறது. அதனால், அவனைவிட அதிகம் நீ அலைகிறாய்.
அவன் மருத்துவம் என்பதை அறியாமல் செத்துப்போனான், இன்று நீ மருத்துவம் பார்த்து, நீ சேகரித்த பணத்தை எல்லாம் செலவழித்துவிட்டு செத்துப்போகிறாய். வேறு என்ன வித்தியாசத்தை அடைந்துவிட்டாய்…? இன்று நீ பாதுகாப்பான வீட்டில் குடியிருப்பதாக நினைக்கலாம். அதுவும் தீ பிடிக்கலாம், பூகம்பத்தில் உடையலாம். திருடர்கள் நுழையலாம் என்று அவனைப் போலவே உனக்கும் அச்சம் இருக்கத்தான் செய்கிறது.
அன்றைய மனிதனுக்கு உணவைத் தவிர பெரிய லட்சியம் இல்லை. எனவே, உணவை அடைந்ததும் திருப்தியும், நிம்மதியும் அடைந்திருப்பான். ஆனால், இன்றைய மனிதன் தன்னுடைய உடல், குடும்பம் ஆகியவற்றை திருப்திபடுத்திவிட்டு, ஏதேனும் லட்சியம் நோக்கியும் நடக்க வேண்டும்.
லட்சியம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ.. அதை நோக்கி காலத்தை நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அதனால், இன்றைய தினத்தை அவன் ரசிப்பதில்லை, நிம்மதியாக இருப்பதில்லை. எதிர்காலத்தில் அதாவது லட்சியம் நிறைவேறும் நாளில் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கிறான். ஆனால், அப்போதும் அவன் முன்பு வேறு ஒரு லட்சியம் இருக்குமே தவிர, நிம்மதியோ.. சந்தோஷமோ இருக்காது’’ என்றார்.
’’அப்படியென்றால் லட்சியங்கள் தேவை இல்லையா..?’’
‘’லட்சியத்தை நோக்கி நடைபோடுபவர்களால் இன்றைய நாளில் வாழவே முடியாது. அவர்களுடைய ஆசையும், எதிர்பார்ப்பும் அவர்களை மகிழ்ச்சியாக இருப்பதற்கு அனுமதிப்பதில்லை. மகிழ்ச்சியாக இருந்தால், நிம்மதியாக இருந்தால் லட்சியத்தை அடையமுடியாது என்றே நினைக்கிறார்கள்.
உண்மையில் லட்சியம் என்பது பிறருக்கானது. அதாவது, மற்றவர்களைவிட நான் மேம்பட்டவன். நான் லட்சியத்தை அடைந்துவிட்டேன் என்று பிறருக்கு சொல்லிக்கொள்வதுதான் லட்சியத்தின் நோக்கம். தங்கள் திறமையை மற்றவர்கள் பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதுதான் லட்சியம் என்றால், அதனால் நீ அடையப்போவது எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.
ஒரு சாதனை படைத்தவரிடம் கேட்கப்படும் கேள்வி, அடுத்து என்ன சாதனை படைக்கப் போகிறீர்கள் என்பதைத்தான். அதாவது, சாதனையாளரை நிம்மதியாக வாழவும், இன்றைய தினத்தை அனுபவிக்கவும் இந்த உலகம் விடுவதில்லை. தன்னை சுற்றி இருக்கும் அழகியலை அனுபவிக்க மறந்துபோவார்கள். எனவே, லட்சியம் தேவைதானா..?’’
‘’லட்சியவாதிகள் இல்லையென்றால் மனிதனுக்கு இத்தகைய வசதிகள் கிடைத்திருக்காதே…’’
‘’லட்சியத்துக்கு ஆசைப்பட்டால் அதற்காக வாழ்ந்து, அதையே சந்தோஷமாக எடுத்துக்கொள். ஆனால், அந்த சந்தோஷத்தை லட்சியம் இல்லாத மனிதனால் எளிதில் அடைய முடியும் என்பதை புரிந்துகொள்…’’ என்றபடி நகர்ந்தார் ஞானகுரு.