• Home
  • சக்சஸ்
  • சாவி இன்றி பூட்டு தயாரிக்கப்படுவதில்லை

சாவி இன்றி பூட்டு தயாரிக்கப்படுவதில்லை

Image

தீர்வு தேடுங்கள்



வாழ்க்கையில் பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை. எல்லா மனிதனுக்கும் ஏதேனும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். ஒரு பிரச்னை முடிந்தால் இன்னொரு பிரச்னை வரத்தான் செய்யும். எத்தனை பிரச்னைகள் வந்தாலும், அவற்றை சமாளிப்பதில்தான் அதன் வெற்றியே அடங்கியிருக்கிறது.

சொல்வதைப் போன்று பிரச்னைகளை  சமாளிப்பது என்பது சாதாரண காரியமல்ல. ஆம்,  ஒரு பிரச்னை எழும்போது  மனதில் ஆயிரத்தெட்டு கேள்விகள் எழுவது சகஜம். அது மட்டுமின்றி, தீராத தலைவலியை உண்டு செய்யும். பிரச்னை எங்கிருந்து, யாரால், எதனால் உருவாகிறது, அது  எதை நோக்கிச் செல்கிறது என்பவை அந்தப் பட்டியலில் அடக்கம். தவிர, ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து நிற்கும். இதனால், தீர்வுப் பாதைகள் அனைத்தும் குழப்ப முடிச்சுகளாகவே வந்து நிற்கும்.

ஆனால், எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஒன்று இருக்கிறது என்பதை உறுதியுடன் நம்பவேண்டும். அந்த நம்பிக்கையை திறம்படச் செயல்படுத்துவது  உங்கள் கைகளில்தான் இருக்கிறது என்கிறது வாழ்வியல். ஆம், எத்தகைய சமாளிக்கவே முடியாத பிரச்னையாக இருந்தாலும்,  கொஞ்சம் கவனமாக யோசித்தால் மிகச் சாதாரணமாக தீர்வுகாண முடியும்.  சாவி தயாரிக்காமல் பூட்டு மட்டும் தயாரிக்கப்படுவதில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பிரச்னையாக நீங்கள் கருதக்கூடிய ஒன்றை முதலில் நிதானமாக அலச வேண்டும். பிரச்னைக்கு நீங்கள் முழுப் பொறுப்பு எடுத்துக்கொண்டவராக பிரச்னையை புரிந்துகொண்டு மாற்றிக்கொண்டால் பிரச்னையும் மாறிவிடும் என்ற நம்பிக்கை வரும்.

பிரச்னைகள் என்பது நம் வாழ்வில் அன்றாடம் நிகழக்கூடியது; எதிர்பாராமல் வரக்கூடியது. அது, தவிர்க்க முடியாதது. ஆனால், அதைச் சுலபமாகத்  தீர்த்துவிடலாம் என்கிற மன தைரியம் முதலில்  வரவேண்டும். மகாத்மா காந்திஜி,  ‘திறமையான மனிதன் பிரச்னையை வாய்ப்பாகக் கருதி, அதைத் தீர்க்கப் போராடி வெற்றி காண்பான். ஆனால், முட்டாள் வாய்ப்பையே பிரச்னையாக நினைத்துக்கொள்வான்’ என்கிறார். ஆம், நாட்டில் பலபேர்தான் அப்படித்தான் இருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு அவசர வேலையாக வெளியில் செல்ல புறப்படும் நபர்கள் வெயில், போக்குவரத்து நெரிசல்,  தொற்று போன்றவற்றின் பாதிப்புகளால் நமக்கும் பிரச்னை வந்துவிடும் எனப் பயப்படுகிறார்கள். இப்படி, எதிர்மறை எண்ணத்துடன் நினைத்தால் நாம் செயல்படுத்த வேண்டிய காரியம் எப்படி நடந்தேறும்? பிரச்னை எதுவானால் என்ன? அதை, முறியடிக்கத்தானே பிறந்திருக்கிறோம் என்ற தீர்வுடன் சென்று பாருங்கள். இதன்மூலம் வரிசைகட்டி நிற்கும் வேறு பல பிரச்னைகளும் களைய வாய்ப்பிருக்கிறது. ஆகையால், எந்தப் பிரச்னையையும் அதை வாழ்வின் இயல்பு என்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே, அதற்குத் தகுந்தபடி நம்மால் வாழமுடியும்; பிரச்னையை எதிர்கொள்ள முடியும்; வெற்றி பெறமுடியும்.


உண்மையில் மனித மனம் ஆற்றல் வாய்ந்தது. அது, தன் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காணக்கூடியது. இருந்தும் ஒருவன் சாதாரணமாக தன் மூளையின் 10 சதவீதம் அளவையே பயன்படுத்துகிறான் என்கிறது மனஇயல். வாழ்வியல் பட்டறைகளில் எந்த பிரச்னை என்றாலும் தேங்கிவிடாமல் அதன் தீர்வுகளை பல கோணங்களில் சிந்திக்கச் செய்வதற்காக பல்வேறு கேள்விகளை கேட்டு, அதற்கு சாத்தியமான பதில்களை அலச செய்வார்கள். பெரும்பாலும் எந்த பிரச்னையையும் ஒன்று மிகப் பெரிதாக எடுத்துக் கொண்டு மனம் தடுமாறுகிறது அல்லது மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அதன் தீர்வை பற்றி யோசிக்கவே செய்யாமல் பிரச்னைகளை பெரிதாக ஆக்கி பின்னால் மிகச் சிரமப்படுகிறது.
இதற்கு ஓர் சிறிய உதாரணம் சொல்லலாம்.

சிறையில் இருந்த நெப்போலியனை சந்தித்தார், அவரது நண்பர். அப்போது அவரிடம், ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து,  ‘இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும்; தனிமையை போக்கும். இதை திறந்து விளையாடுங்கள்’ என்றார், நண்பர். சிறையில் அடைபட்ட விரக்தியால், அந்த சதுரங்க அட்டையை தூக்கி எறிந்ததுடன், எதற்காக அதை நண்பர்  நமக்கு இப்போது கொடுக்க வேண்டும் என்கிற சிந்தனைகூட நெப்போலியனுக்கு வரவில்லை. மேலும், அவர், தன் பிரச்னைக்கான தீர்வைப் பற்றி யோசிக்காததால் கொஞ்ச காலத்தில் இறந்தும்போகிறார்.


பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம்விட, அதை ஆய்வு செய்தது. அப்போது அந்த அட்டையின் நடுப்பக்கத்தில், சிறைச்சாலையில் இருந்து வெளியேறுவதற்கான ரகசியக்  குறிப்பு ஒன்று இடம்பெற்றிருந்ததாம். அவரின் மன உளைச்சலும், பதற்றமுமே அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கிவைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடிவிட்டது. அவர் தன் பிரச்னைக்கான  தீர்வை வேறு வழியே இல்லை என முடிந்துபோன ஒன்றாக நினைத்து செயலற்றுப் போகாமல், ஏதாவது வழி தென்படலாம் என அந்த சதுரங்கத்தில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்தால், வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கலாம்.
பிரிஸ்டல் என்ற அறிஞர்,  ‘பிரச்னைகளின்போது துவண்டுவிடாமல் எழுந்து நின்று செயல்படுபவர்களே வெற்றிபெறுவர்’ என்கிறார்.

உண்மைதான். நெப்போலியனைப்போல பலர், பிரச்னைகளைக் கண்டு துவண்டுபோய் விடுகிறார்கள். ஆகையால், எந்த சூழலிலும் பிரச்னைக்கான தீர்வை மனஅழுத்தம் இல்லாமல் நாம் நிதானமாக சிந்தித்தால் வெற்றி நிச்சயம்.

Leave a Comment