கவுன்சிலிங் கதை
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதை மறைப்பதற்காக வேறு ஏதேனும் ஒரு செயலில் அதி தீவிரம் காட்டுவதுண்டு. அவர்களின் செயலால் ஏற்படும் சிக்கல் மட்டுமே எல்லொருடைய கண்ணுக்கும் தெரியுமே தவிர, உண்மையான காரணம் தெரியாது. இதை கண்டறிவதே மனவள ஆலோசகர்களுக்கு மிகப்பெரும் சவால்.
சில நபர்களின் உளவியல் சிக்கலுக்கான உண்மையான காரணத்தை பல நேரம் சம்பந்தப்பட்ட நபர்களே மறந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு ஆழமாக மனதுக்குள் புதைந்துகிடக்கும் உண்மையை வெளியே கொண்டுவருவதற்கு நிறைய நேரம் பேச வேண்டியிருக்கும். யாரேனும் சிலருக்கு சட்டென காரணம் புரிபட்டுவிடும். அப்படி ஒரே நாள் கவுன்சிலிங் மூலம் இயல்பு வாழ்வுக்குத் திரும்பியவர் துர்கா. அவரது கணவரே துர்காவை அழைத்துவந்தார்.

‘’நான் ஒரு வங்கியில் பணி செய்கிறேன். எங்களுக்கு ஒரு பெண் மட்டுமே. அவள் இப்போது இன்ஜினியரிங் கல்லூரியில் கடைசி வருடம் படித்துவருகிறார். மகள் நிறைய மார்க் எடுத்து பாஸ் ஆக வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்றெல்லாம் ஏதேனும் காரணம் சொல்லி வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் இருக்கிறார். மிகவும் சுத்தம் பார்க்கிறார். வீட்டில் அசைவம் சமைப்பதில்லை. விரதம் இருப்பதால் அடிக்கடி மயங்கிவிழுகிறார். மருத்துவரிடம் போய் அடிக்கடி குளுக்கோஸ் ஏற்றி வருகிறோம்.
சமீபத்தில் என் நண்பர் வீட்டுக்கு வந்த நேரத்தில் ஒரு நடிகையைப் பற்றி ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம். அதை கேட்டு துர்கா கடுமையாக சண்டை போட்டார். அவரது உறவினர்கள் யார் வந்தாலும் ஏதேனும் சண்டை இழுத்து வீட்டை விட்டு அனுப்பிவிடுகிறார். இவரது மாற்றத்தைக் கவனித்த என் நண்பர் தான் கவுன்சிலிங் கூட்டிப் போகச் சொன்னார்…’’
‘’உங்களுக்கு இவரிடம் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரியவில்லையா..?’’
‘’துர்கா எப்போதும் ஜாலியான டைப் கிடையாது. அதேநேரம் சண்டை போடுபவரும் இல்லை. ஆன்மிகத்தில் மிகவும் நாட்டம் உள்ளவரும் இல்லை. என் மகள் +2வில் மார்க் குறைவாக எடுத்துவிட்டார். அப்போது முதலே அம்மாவுக்கும் மகளுக்கும் சண்டை நடக்கிறது. மகளுக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி இன்ஜினியரிங் படிக்க வைத்தோம். அதோடு நீண்ட காலமாகவே மாதவிலக்கு தொடர்பான பிரச்னையில் துர்கா இருந்தார். அதனால் கர்ப்பப்பையை ஆபரேஷன் மூலம் எடுத்துவிட்டோம். என் மகள் நாலைந்து பாடத்தில் அரியர் வைத்திருப்பது எங்களுக்குத் தாமதமாகவே தெரியவந்தது. இது துர்காவுக்கு ரொம்பவே கோபத்தை உண்டாக்கிவிட்டது என்று நினைக்கிறேன்… அதனால் எப்போது பார்த்தாலும் பூஜை, கோயில், விரதம் என்று மாறிவிட்டார். இந்த மாற்றங்கள், சண்டை எல்லாம் அடிக்கடி நடந்ததால் என்னால் எந்த மாற்றத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை….’’
‘’நீங்கள் என்ன சொல்கிறீர்கள்…’’ என்று துர்காவிடம் கேட்டேன்.
‘’நான் எப்போதும் போலவே இருக்கிறேன். இவர் தான் என்னிடம் வேண்டுமென்றே குற்றம் கண்டுபிடிக்கிறார்’’ என்று விட்டேத்தியாகப் பதில் சொன்னார்.
‘’துர்கா கோயிலுக்குப் போறது, விரதம் இருப்பது பிரச்னை. கோபத்தைக் குறைக்கணும், விரதம் இருந்து உடம்பைக் கெடுத்துக்க வேண்டாம், வீட்ல சண்டை போடாம எல்லோரும் நிம்மதியா இருக்கணும்’’ என்றார்.
’’இவங்க நார்மலாவே இருக்காங்க. நீங்க தேவையில்லாம கவலைப்படுறீங்க. எதுக்கும் இவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டுக் கூப்பிடுறேன்’’ என்று கணவரை வெளியே அனுப்பிவைத்தேன். அவர் பேசியதில் இருந்தே துர்காவின் பிரச்னைக்கு உண்மையான காரணத்தை ஓரளவு கண்டுபிடித்திருந்தேன். இருந்தாலும அவரது வாயில் இருந்து கேட்பதற்கு விரும்பினேன்…’’
‘’உங்கள் மகள் படிப்பை நினைத்து ரொம்பவும் வருத்தப்படுகிறீர்களா..?’’
‘’அவளை டாக்டராக்க நினைச்சேன், அது முடியலை, ஐ.டி. இன்ஜினியராக்க நினைச்சேன். அதிலும் ஃபெயிலாகிட்டு நிக்கிறா…’’’
‘’நீங்க என்ன படிச்சீங்க..? வேலைக்குப் போகலையா..?’’
‘’பி.எஸ்.சி. படிச்சேன். படிப்புல பெருசா இண்ட்ரஸ்ட் கிடையாது. அதான், காலேஜ் முடிச்சதும் இவருக்குக் கட்டி வைச்சிட்டாங்க. வேலைக்குப் போறதுக்கு நான் ஆசைப்பட்டதே இல்லை. என் பொண்ணுக்கும் என்னை மாதிரி வாழ்க்கை தான் அமையும் போல இருக்கு…’’
‘’எதுக்காக யூட்ரஸ் ரிமூவ் பண்ணீங்க… எந்த டாக்டர் பண்ணாங்க..’’
‘’அது ரொம்பவும் தொல்லை குடுத்துட்டே இருந்திச்சு. ஆனா, எங்க ஃபேமிலி டாக்டர் எடுக்க வேண்டாம்னு சொன்னாங்க. பக்கத்து வீட்டுக்காரங்க சொன்ன ஒரு டாக்டரை பார்த்தேன். அவங்க தான் இதை எடுத்துட்டா பிரச்னையே இருக்காதுன்னு சொன்னாங்க… எடுத்துட்டேன்.. இப்போ என் உடம்புக்குள்ள ஒரு பெரிய வெற்றிடம் இருக்குது’’ என்று வெறுமையாக சிரித்தார்.
‘’அப்போ உங்களுக்கு கவுன்சிலிங் ஏதாச்சும் குடுத்தாங்களா..?’’
‘’இல்லையே… இது தான் எனக்கு ஃபர்ஸ்ட். ஏதோ பைத்தியம் பிடிச்சவளை கூப்பிட்டு வந்த மாதிரி எனக்கு எப்படியோ இருக்குது…’’
‘’அன்பா… நம்பிக்கையா சும்மா மனம் விட்டுப் பேசிக்கிறது தான் கவுன்சிலிங். சோகத்தைப் பகிர்ந்துக்கிட்டா குறையும்னு சொல்வாங்க. அவ்வளவுதாங்க கவுன்சிலிங்… சரி, ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் உண்மையா பதில் சொல்லுங்க. அது போதும்..’’
‘’கேளுங்க…’’
‘’யூட்ரஸ் ரிமூவ் செய்த பிறகு உங்கள் கணவருடன் உறவு முன்பைப் போலவே இருக்குதா?’’
பதில் சொல்லாமல் அமைதி காத்தார். கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. அவரே பேசட்டும் என்று காத்திருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து கண்களைத் துடைத்துவிட்டு பேசத்தொடங்கினார்.
‘’நான் அதுக்கெல்லாம் லாயக்கி இல்லைங்க. அதான் சொன்னேனே என் உடம்புக்குள் ஓட்டை இருக்கு. அவருக்கு வேற எண்ணம் வரக்கூடாதுன்னுதான் விரதம் பூஜைன்னு செஞ்சிக்கிட்டு இருக்கேன். அதான், யாராவது ஜாலியா பேசுனாலே எனக்கு கோபம் வருது…’’
இதுதான் விஷயம் என்றதும் நிம்மதியானது. நிதானமாகப் பேசத் தொடங்கினேன்.
‘’பொதுவா கர்ப்பப்பை எடுக்குற நேரத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் கவுன்சிலிங் குடுப்பாங்க. உங்களுக்கு தராம விட்டது தான் பிரச்னை. ஏன்னா, கர்ப்பப்பை குழந்தை பெறுவதற்கான உறுப்பு மட்டும் தான். அதற்கும் உறவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது கர்ப்பப்பை இருந்தாலும் இல்லாவிட்டாலும் உறவு கொள்ள முடியும். இதனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது. எப்போதும் போல், இன்னும் சொல்லப்போனால் குழந்தை உருவாகும் என்ற அச்சமே இல்லாமல் உறவு கொள்ளமுடியும்’’
‘’அதெப்படி, யூட்ரஸ் இல்லைன்னா..?’’ என்று மேற்கொண்டு பேசுவதற்குத் தயங்கினார்.
‘’யூட்ரஸ் இல்லையென்றால் என்னவாகும் என்பதை நிறைய மருத்துவர்கள் தெளிவாக விளக்குவார்கள். யூட்ரஸ் எடுத்தவுடன் அந்த இடம் வெற்றிடமாக இருக்காது. மற்ற உறுப்புகள் அந்த இடத்தை நிரப்பிவிடும். உறவுப் பாதைக்கும் கர்ப்பப்பைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கணவரின் உயிரணுக்கள் இப்போது வெளியே வந்துவிடும். அவ்வளவு தான் வித்தியாசம். அறுவை சிகிச்சை நேரத்தில் நிறைய பெண்கள் மன அழுத்தத்தில் இருப்பதால், மருத்துவர் சொல்வதை சரியாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள். கர்ப்பப்பை இல்லை என்றால் தன்னை பெண் இல்லை என்று நினைக்கும் அளவுக்கு வருத்தம் அடைகிறார்கள். உங்களுக்கும் அதுவே மன அழுத்தமாக மாறியிருக்கிறது. தயவு செய்து அந்த எண்ணத்தில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் இப்போதும் ஒரு முழுமையான பெண். உங்களுக்கு நல்ல கணவர் இருக்கிறார், நல்ல மகள் இருக்கிறார். எனவே, தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் கணவருடன் சந்தோஷாக இருங்கள்…’’
‘’நிஜமாகச் சொல்கிறீர்களா..?’’
‘’உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஒரு முறை இதனை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அதேநேரம் உங்கள் மகள் வாழ்க்கையை நினைத்து அச்சமோ, கவலையோ வேண்டாம். நிறைய மதிப்பெண் எடுக்காதவர்களும் வாழ்க்கையில் பெரிதாக ஜெயித்திருக்கிறார்கள். அவரது வாழ்க்கைக்குத் தேவையான படிப்பைக் கொடுத்திருக்கிறீர்கள். அது போதும். இனி என்ன செய்வது என்பதை அவர் முடிவு செய்யட்டும். பக்தியில் ஆர்வம் இருந்தால் அதில் மனதை செலுத்துங்கள். ஆனால், கடவுளுக்குத் தரும் நேரத்தை கணவனுக்கும் பிள்ளைக்கும் கொடுங்கள். அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள். அழகான சின்ன குடும்பத்தை சண்டை போட்டு சிதைத்துவிடாதீர்கள்…’’ என்றேன்.
மீண்டும் ஒரு முறை அழுதுவிட்டுக் கிளம்பினார். இப்போது அவரது அழுகையில் மிகப்பெரும் நிம்மதி தென்பட்டது.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
தொடர்புக்கு : 9840903586