மகிழ்ச்சி தரும் கிளைமாக்ஸ்

Image

சலங்கை ஒலி

இரண்டாவது வருபவரை உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை என்று ஒரு பொன்மொழி உண்டு. ஏனென்றால் ஜெயித்தவர்கள் கதை மட்டுமே இங்கே படிக்கப்படுகிறது, தோற்றுப் போனவர்களுக்கும் கதை இருக்கிறது. ஆனால், அதை படிக்க யாரும் விரும்புவதில்லை என்பதே நிஜம்.

சினிமா, தொழில், விளையாட்டு என்று சகல துறைகளிலும் தோல்வி அடைந்தவர்கள் எண்ணிக்கை ஏராளம். ஒரே ஒருவரது வெற்றி பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் இந்த உலகத்தில், தோற்றுப்போனவரின் வலி, வேதனை எப்படி இருக்கும் என்பதை யாரும் சித்தரிப்பதில்லை. அரிதிலும் அரிதாக கலையிலும் காதலிலும் வாழ்க்கையிலும் தோற்றுப்போன ஒருவனது வாழ்க்கையை கலாரசனையுடன் சொல்லியிருக்கும் திரைப்படம் சலங்கை ஒலி.

லோகேஷ் கனகராஜின் விக்ரம் பட நாயகன் கமல்ஹாசனின் பிம்பத்தை ரசிக்கும் இன்றைய தலைமுறையினர், ‘சலங்கை ஒலி’ என்ற டப்பிங் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 1983ம் ஆண்டு வெளியான இந்த டப்பிங் படம் நேரடி படம் போலவே வசூலில் சாதனை படைத்தது. அதோடு, படம் பார்த்த அத்தனை ரசிகர்களையும் அழுத்தமாக திரையுடன் கட்டிப் போட்டது. இதற்கு காரணம், தோற்றுப் போன மக்களே இங்கு அதிகம் இருக்கிறார்கள். எல்லோரிடமும் சலங்கை ஒலி படத்தின் நாயகன் பாலுவின் சாயல் இருக்கிறது. அதனாலே தீவிர சினிமா ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான சலங்கை ஒலி.

ஒரே ஒரு பாடலில் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சிம்பிளாக முடிந்துவிடுகிறது. தோற்றுப்போன ஒரு கலைஞனின் ஆசையை அவனுடைய தேவதை நிறைவேற்றி வைப்பது தான் சலங்கை ஒலி படத்தின் ஒருவரிக் கதை. ஒவ்வொரு கலைஞனும் கைதட்டலுக்கும் பூரணத்துவத்துக்குமே ஆசைப்படுகிறார்கள். இரண்டையும் ஒருசேர அனுபவித்து மரணத்தைத் தழுவுகிறான் நாயகன். இந்த கிளைமாக்ஸ் பாடலைப் பார்க்கும் முன்னதாக, கதையை சிம்பிளாகப் பார்த்துவிடலாம்.

முதுமையிலும் வறுமையிலும் காலம் தள்ளும் கமல்ஹாசனிடம் இருந்து படம் தொடங்குகிறது. எல்லா நிறுவனங்களிலும் வயதான ஊழியர்களை ஒரு சுமையாகவே கருதுவார்கள். அப்படித் தான் பாலுவும் அந்த பத்திரிகை அலுவலகத்திற்கு சுமையாக இருக்கிறான். சைலஜா ஆடும் பரதநாட்டியத்தை கடுமையாக விமர்சித்து எழுதுகிறான்.

அபிநய சுந்தரி, நாட்டிய நர்த்தகி என்றெல்லாம் பேரும் புகழுமாகத் திகழும் ஷைலஜாவுக்கு அந்த விமர்சனம் கோபத்தை உண்டாக்குகிறது. நேரடியாகவே பத்திரிகை அலுவலகத்திற்கு வந்து, ‘உனக்கெல்லாம் பரதநாட்டியம் பற்றி என்ன தெரியும்?’ என்று திமிராகக் கேட்கிறாள்.

அப்போது தொடங்குகிறது யாரும் எதிர்பார்க்காத அட்டகாச கச்சேரி. தனக்கு எத்தனை வகை நாட்டியம் தெரியும் என்று ஆடிக் காட்டி அத்தனை பேரையும் மிரள வைத்து, வேலையை விட்டு வெளியே வருகிறான். சினிமாவில் இப்படியொரு அமர்க்களமான காட்சி அமைத்ததற்கு இயக்குநர் விஸ்வநாத்திற்கு ஒரு விழாவே எடுக்கலாம். அப்படியொரு காட்சியமைப்பு.

இந்த விஷயம் ஷைலஜாவின் அம்மா மாதவிக்குத் தெரியவருகிறது. பாலகிருஷ்ணன் என்ற பெயரைக் கேட்டதும் அவள் தன்னுடைய இளமைக் காலத்திற்குப் போகிறாள். அவளுக்குத் தெரிந்த பாலகிருஷ்ணன் மட்டுமே அப்படி நடந்துகொள்வான் என்று நினைக்கிறாள். அந்த பாலகிருஷ்ணனிடம் பரதத்தை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஷைலதாவுக்கு உத்தரவு போடுகிறாள்.

தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கும் ஷைலஜாவுக்கு பாலகிருஷ்ணனை குருவாக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை. அடம் பிடிக்கிறாள். ஆனாலும் அம்மா மாதவி உறுதியாக இருக்கிறாள். பாலகிருஷ்ணன் இருக்கும் ஊருக்கே மகளை அழைத்துவருகிறாள்.

அதன் பிறகே பாலகிருஷ்ணனுக்கும் மாதவிக்குமான உறவு கவிதையாக விரிகிறது.

பரதக் கலையின் மீது பாலு உயிராக இருக்கிறான். பரதம் தொடர்பான அனைத்துக் கலைகளையும் கற்று தன்னுடைய பாணியில் புதுமையாக கலந்து தரவேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து கற்றுக்கொண்டே இருக்கிறான். அவனுக்குத் திறமை இருந்தாலும் வெற்றிக்கு ஏழ்மை குறுக்கே நிற்கிறது. அந்த நேரத்தில், ஒரு தேவதை போன்று அவன் வாழ்வில் அறிமுகமாகிறாள் மாதவி. அவனுக்குள் இருக்கும் கலைத்தன்மையைக் கண்டு வியக்கிறாள். அதை உலகம் முழுக்க கொண்டுசெல்ல ஆசைப்படுகிறாள்.

பாலுவாக கமல்ஹாசன் வாழ்ந்தார் என்று கூட சொல்லமுடியாது. இந்த படத்தில் நடிப்பதற்கும் பரதநாட்டியம் ஆடுவதற்கும் அவதாரம் எடுத்து வந்தவர் போன்றே இருப்பார் கமல். இந்த வேடத்தில் உலகில் வேறு எந்த ஒரு நடிகரையும் பொருத்திக்கூட பார்க்க முடியாது என்பது கமலுக்குக் கிடைக்கும் வெற்றி. கமலுக்கு ஈடு கொடுத்து அவரை விடவும் அற்புதமாக பாவனைகள் காட்டி நடித்திருப்பார் பேரழகி ஜெயப்ரதா.

கிளைமாக்ஸ் காட்சிக்கு ஈடாக இன்னொரு காட்சியும் படத்தில் உண்டு. லோக்கல் மேடை ஏறாத கமல்ஹாசனை டெல்லியில் மிகப்பெரிய கலைஞர்கள் பங்கேற்கும் ஒரு நாட்டிய விழாவில் ஆடுவதற்கு, அவருக்குத் தெரியாமலே ஏற்பாடு செய்திருப்பார் ஜெயப்ரதா.

அந்த அழைப்பிதழுடன் கமல்ஹாசனைப் பார்க்க வருவார். ‘’டெல்லி டான்ஸ் திருவிழா நல்லா இருக்குமா?’’ என்று கேட்டபடி கையில் அந்த அழைப்பிதழைக் கொடுப்பார்.

’’அடேங்கப்பா… இந்த இன்விடேஷனை பார்க்கிறதுக்கே பாக்கியம் செய்திருக்கணும்’’ என்றபடி வரிசையாக அந்த இன்விடேஷனில் இருக்கும் ஒவ்வொரு டான்ஸரையும் பற்றிப் பேசி புகழ்ந்துகொண்டே வருவார். ஒரு பக்கத்தில் கமல்ஹாசன் டான்ஸ் ஆடுவதாக போட்டோவுடன் அறிவிப்பு இருக்கும். அதை கண்டதும் அப்படியே மெய்மறந்து புல்லரித்துப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறும் கமலிடம், ‘’இவரும் பெரிய டான்ஸர் தான்’’ என்று ஜெயப்பிரதா சொன்னதும்… சட்டென அவர் கையைப் பிடித்து முத்தம் கொடுப்பார்.

அதைவிட வேறு எந்த வகையிலும் ஒரு கலைஞனால் தன்னுடைய நன்றியைத் தெரிவிக்க முடியாது. அப்படியொரு உணர்ச்சிப்பிழம்பாகி இருப்பார். அந்த உணர்ச்சிகளை மேலும் மெருகேற்றும் வகையில் இளையராஜாவின் பாடல் ஆரம்பமாகும். ‘நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்… பரம சுகங்கள் தருமே…’ என்ற பாடலுக்கு கமல்ஹாசனும் ஜெயப்ரதாவும் பின்னி பெடலெடுத்திருப்பார்கள்.

இனிமேல் கமல்ஹாசனின் கலை வாழ்வு பிரகாசமாகிவிடும், இதைவிட வேறு என்ன வாய்ப்பு வேண்டியிருக்கிறது என்று மகிழும் நேரத்தில் எதிர்பாராமல் கமல்ஹாசனின் அம்மா மரணம் அடைந்துவிடுகிறார். விழாவில் பங்கேற்க முடியாமல் போகிறது.

அந்த சோகத்துடன் இருப்பவனை தேற்றுகிறார் ஜெயப்ரதா. தன் மனதுக்குள் கோயில் கட்டி வைத்திருக்கும் ஜெயப்பிரதா மீது வந்திருக்கும் காதலை சொல்லிவிடலாம் என்று கமல் நினைக்கும் நேரம், எங்கிருந்தோ வருகிறார் அவரது கணவன். மனம் திருந்தி வந்தவன் ஜெயப்ரதாவை அழைத்துச் சென்றுவிடுகிறார். அவளோடு கமல்ஹாசனின் கலையும் போய்விடுகிறது.

ஒட்டுமொத்த இடியும் தன் தலை மீது விழுந்தது போன்று குழம்பி நிற்கிறான் பாலு. கலையை மறந்து குடிகாரனாகிறான். நண்பன் சரத்பாபுவால் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறான். அவன் வேலையைத் தொலைத்துவிட்டு நிற்கும் நேரம் ஜெயப்ரதா வருகிறார். அவரது கணவன் இறந்துவிட்டார் என்ற செய்தி சரத்பாபுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது.

‘உங்களை இந்த கோலத்தில் பார்த்தால் பாலு தாங்க மாட்டான். அவன் உடல் மிகவும் மோசமாக இருக்கிறது. வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே அவன் குடிக்காமல் இருக்கிறான், அது உங்களுடைய திருமண நாள். எனவே விதவைக் கோலத்தில் அவனை பார்க்க வேண்டாம்’ என்கிறான். அதனால் ஷைலஜா யார் என்று தெரியாமல் பாடம் சொல்லித்தர ஏற்பாடு செய்யப்படுகிறாள்.

கமல்ஹாசன் விருப்பமில்லாமல் பாடம் சொல்லித்தர, ஷைலஜா விருப்பம் இல்லாமல் பாடம் படிக்கிறாள். குடி போதையில் கிணற்றின் மீது நடனம் ஆடும் கமல்ஹாசனைக் காப்பாற்றுவதற்காக பொட்டு வைத்துக்கொண்டு அவன் முன்பு வந்து நிற்கிறாள் ஜெயப்ரதா.

ஒரே நிமிடத்தில் எல்லாம் மாறிவிடுகிறது. மீண்டும் கமல் வாழ்வில் வசந்தம் வருகிறது. தன்னுடைய தேவதையின் மகள் ஷைலஜா என்பதை அறிந்ததும் தன்னையே நொந்துகொள்கிறான்.

அவள் நன்றாக ஆடுகிறாள், சின்னத் தவறு செய்தவளை நான் திட்டிவிட்டேன் என்று வருந்துகிறான். மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு, படுக்கையில் படுத்தபடியே தனக்குத் தெரிந்த அத்தனை கலைகளையும் கற்றுத் தருகிறான்.

தன்னுடைய அம்மாவுக்கும் கமல்ஹாசனுக்கும் தவறான உறவு இருப்பதாக நினைத்து முடிந்த வரை கமல்ஹாசனை அவமானப்படுத்துகிறாள் ஷைலஜா. இப்போது அவள் என்ன செய்தாலும் அதை கமல்ஹாசன் தவறாகப் பார்ப்பதே இல்லை.

ஒருவழியாக அவளுடைய நாட்டிய அரங்கேற்ற நாளில் கிளைமாக்ஸ் ஆரம்பமாகிறது. அந்த மேடைக்கு வீல்சேரில் வரும் கமல்ஹாசன், ஜெயப்ரதாவை தன்னை அடையாளம் கண்டுகொண்ட தேவதை என்றும் உள்ளத்தில் வைத்து பூஜிக்கும் கடவுள் என்றும் புகழ்ந்து வணங்குகிறான்.

அப்போதுதான் அவர்களுடைய புனிதமான உறவை புரிந்துகொள்கிறாள் ஷைலஜா. அதுவரை அவள் செய்த தவறுகளுக்கு வருந்துகிறாள். கமல்ஹாசனிடம் கொட்டிக்கிடக்கும் கலையை வாழவைப்பதற்காக அம்மா தன்னை பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருப்பதை உணர்கிறாள். தன் தவறுக்குப் பிராயசித்தம் போன்று உயிரைக் கொடுத்து நடனம் ஆடத் தொடங்கிறாள்.

’வேதம் அணுவிலும் ஒரு நாதம்… நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்…’ என்று இளையராஜாவின் ராக ஆலோபனையில் எல்லோருமே திரைக்குள்ளும் திரைக்கு வெளியிலும் புளகாங்கிதம் அடைகிறார்கள். ஷைலஜா அப்படியே கமல்ஹாசனாக மாறி ஆடுகிறாள். அவளுக்குக் கிடைக்கும் கை தட்டல்களைக் கேட்கிறான். தான் சின்ன வயதில் பார்த்த கமல்ஹாசன் நடனத்தை தன் மகள் நடனத்தில் கண்டு ரசிக்கிறாள் ஜெயப்ரதா. தன்னுடைய கலையை அடுத்தவருக்குக் கடத்திவிட்ட திருப்தியுடன், அந்த நடனத்தைப் பார்த்தபடி உயிர் விடுகிறான் பாலு.

அந்த நடனத்தைத் தொந்தரவு செய்யாமல் அப்படியே வீல் சேரை திருப்பிக்கொண்டு சரத்பாபு அரங்கத்தை விட்டு வெளியேறுகிறான். செத்துக்கிடக்கும் கமல் உடல் மீது திடீரென மழை பொழிகிறது. தன்னுடைய கைகளால் கமல் உடல் மீது மழை விழாமல் சரத்பாபு தடுக்கிறான். அப்போதும் குடை பிடித்து மீண்டும் தேவதையாக காட்சி தருகிறார் ஜெயப்ரதா.

கமல் உடலுடன் இருவரும் நகர்கிறார்கள். அவர்கள் மீது END என்று காட்டப்படும். முடிந்தது என்று நினைக்கும் முன், அடுத்து END எழுத்துக்கு மேலே, NO என்று வரும். பிறகு, NO END எழுத்துக்களுக்குக் கீழே FOR ANY ART என்று டைட்டில் வரும். அதாவது NO END FOR ANY ART என்கிற டைட்டிலுடன் முடியும்.

கலைஞர்கள் சாகலாம் கலை சாகாது என்பதை அற்புதமாகக் காட்டியிருப்பார் விஸ்வநாத். ரத்தமும் சதையும் கலையினால் ஊறிப்போன ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு தரமான படத்தை இயக்க முடியும். விஸ்வநாத்தின் கனவுக்கு இளையராஜா வர்ணம் தீட்டினார் என்றால் கமல்ஹாசனும் ஜெயப்ரதாவும் அதற்கு உயிர் கொடுத்து சிறப்பித்திருப்பார்கள். சினிமாவை காதலிக்கும் ஒவ்வொரு நபரும் பார்க்க வேண்டிய திரைப்படம். முழு படம் பார்க்க முடியவில்லை என்றாலும் கடைசி அரை மணி நேரம் கிளைமாக்ஸ் காட்சியை மட்டுமாவது பாருங்கள்.

ஒரு நல்ல படத்தை ரசித்த திருப்தி நீண்ட நாட்கள் ஞாபகத்தில் நிழலாடும்.

Leave a Comment