ஸ்டாலின் அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் பிரதிநிதித்துவதைக் குறைக்கும் செயலில் பா.ஜ.க. அரசு இறங்கியிருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கும் முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
அவரது அழைப்பில், ‘’தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.
ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்? ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை! கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன். நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோமம்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மார்ச் 5ம் தேதி நடக்கயிருக்கும் கூட்டத்தில் அத்தனை கட்சிகளும் கலந்துகொள்வார்களா..? தமிழகத்திற்கு ஒன்றாகக் குரல் கொடுப்பார்களா என்பது கேள்வி ஆகியிருக்கிறது. மக்கள் தொகையைக் குறைத்ததற்கு தண்டனை என்பதை ஏற்கவே கூடாது.