கன்னியாகுமரி திட்டத்துக்கு சீமான் முற்றுகைப் போராட்டம்..?
ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் நெருக்கடி.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் 1144 ஹெக்டேர் அளவில் கடற்தாது மணலில் இருந்து அணு ஆற்றல் உற்பத்திக்குத் தேவையானக் கதிர்வீச்சு ஏற்படுத்தக்கூடியக் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் திட்டத்தினை இந்திய அருமணல் நிறுவனம் (IREL) முன்மொழிந்துள்ளதற்கு நாம் தமிழர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
நாம் தமிழரின் சுற்றுச்சூழல் அணி, ‘’கடலோர மணலில் இருந்து தாதுப் பொருட்களைப் பிரித்து எடுத்த பிறகு கழிவு நீரையும் மணலையும் அதே பகுதியில் கொட்டுவதால் பல இடங்களில் கடல் நீரின் நிறமே சிவப்பாக மாறிவிடும். கடலையொட்டி அதிக அளவில் மணல் எடுக்கப்பட்டால் மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்படும். இத்திட்டதினால் ஏற்படும் நீண்டகால அபாயங்களை, நடந்து முடிந்த பிறகு எவ்வித சீரமைப்பு முயற்சிகளாலும் சரிசெய்ய முடியாது.
இத்திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும் முழுமையற்ற ஆய்வறிக்கையின் காரணமாகவும் இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு மறுத்திட வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய பாஜக அரசு எடுத்திட வேண்டும். மேலும், மாநில அரசு ஒன்றிய அரசினை இது தொடர்பாக வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின் கீழ் மாநில அரசு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது. நடப்பில் இருக்கூடிய அனுமதிகளையும் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை வலியுறுத்துகின்றது.
மேலும், வரும் அக்டோபர் 1ஆம் தேதி (01.10.2024) பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்கக் கூட்டத்தில் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கெடுத்து திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் இத்திட்டத்தில் இருக்கக்கூடிய பிழைகள் குறித்தும் எடுத்துரைத்து தங்கள் மக்களாட்சி கடமையை நிறைவேற்ற வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளது.
கடற்கரையில் பேனா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் ஆஜரானது போன்று, இதற்கும் சீமான் வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இயற்கையாகக் கதிரியக்கத் தாதுக்கள் நிறைந்த இப்பகுதியில் வழக்கமான பின்னணிக் கதிர்வீச்சை விட 10-100 மடங்கு அதிகம் என்பதால் இந்தக் கனிமங்களை பிரித்தெடுப்பதனால் ஏற்படக்கூடிய கதிரியக்கம் கடற்கரை காற்றின் வழி சுற்றுப்புற கிராமங்களில் பரவி மக்களுக்குப் பெரும்பாதிப்பை உருவாக்குகின்றன. இதனால் பொதுமக்கள் புற்றுநோய்க்கு ஆளாகும் ஆபத்து இருந்து வருகிறது என்று கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள சூழலில் இந்த கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு ஸ்டாலின் இன்னமும் தடை விதிக்காதது தி.மு.க.வினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.