கேள்வி : கனவு எனக்கு ரொம்பவே பயமாக இருக்கிறது. குர் ஆன் ஓதிவிட்டுப் படுத்தாலும் தூக்கம் வருகிறதே..? – எஸ்.செய்யது அலி பாத்திமா, ராம்நாட்.
ஞானகுரு :
கனவு என்பது மனதின் குப்பைத் தொட்டி. அது நிரம்பி வழிவதே கனவு. அதேநேரம், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என்று எந்த மதப்பாகுபாடும் இல்லாமல் உலகில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் கனவுகள் வருகின்றன. எனவே, எந்தக் கடவுளாலும் கனவினை தடுத்து நிறுத்தமுடியாது. கனவைக் கண்டு பயப்படுகிறீர்கள் என்றால் நிறைய கனவுகள் வந்துகொண்டே இருக்கும். இதனை ஆராயத் தொடங்கினால் மேலும் அதிக கனவுகள் வரும்.
எனவே கனவு எனும் குப்பைத் தொட்டியை ஆராய ஆராய துர்நாற்றம் வீசும், அதீத பயம் வரும். எனவே இரவு நேரத்தில் முடிந்து போன கனவை பகலில் யோசிக்க வேண்டாம். தூங்கவே முடியாத அளவுக்கு கனவுகள் வருகிறது என்றால், அது உடல்நலக் குறையாகவும் இருக்கலாம். எனவே, ஜீரணத்தைக் கொஞ்சம் கவனியுங்கள். இரவு 7 மணிக்கு சாப்பிட்டு 11 மணிக்குள் தூங்கச் செல்லுங்கள்.
கனவு வரவே கூடாது என்று அச்சப்பட்டால் அதிகம் கனவுகள் வரும். எனவே, இன்று என்ன கனவு வருகிறது என்று பார்க்கலாம் என்று ஆவலுடன் தூங்கச் செல்லுங்கள். என்ன கனவு வந்தாலும் அதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள். எழுதி வையுங்கள். அடுத்த கனவுக்காகக் காத்திருங்கள். இப்படி கனவைத் தேடிப் போனால், அது காணாமல் போய்விடும். குர் ஆன் ஓதினாலும் ஓதாவிட்டாலும் உங்களுக்குப் பசிக்கும். அதே போல் குர் ஆனுக்கும் கனவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.