கேள்வி : நான் கருப்பு நிறமாக இருப்பதால் நிறைய பேர் கிண்டல் செய்கிறார்கள். இந்த கேலியில் இருந்து தப்பவே முடியாதா?
ஞானகுரு :
ஐஸ்வர்யா ராய்க்கு அழகியாகும் தகுதி இல்லை என்று கிண்டல் செய்த உலகம் இது. நடிகர் விஜய் முகம் தகர டப்பா மாதிரி இருக்கிறது என்று கேலி செய்த உலகம் இது. ஸ்டாலின் ஜாதகத்தில் அமைச்சராகும் யோகமே இல்லை என்று ஆருடம் சொன்ன உலகம் இது. அவர்கள் விமர்சனத்தைக் கண்டுகொள்ளாமல் தான் முன்னேறினார்கள். இந்த உலகம் ஏதேனும் சொல்லிக்கொண்டே தான் இருக்கும். உங்களால் மாற்ற முடியாத விஷயங்களில் நீங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை. கருப்பு நிறத்துக்காக நீங்கள் கவலைப்பட்டால் ஆப்பிரிக்கப் பெண்களை என்ன செய்வது? எனவே, நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வேறு எந்த மனிதரும் முடிவெடுக்க அனுமதிக்காதீர்கள்.
மனிதர்கள் தானே உங்களை குறை சொல்கிறார்கள். உங்கள் மீது மழை பொழியவில்லையா? உங்களுக்கு மட்டும் தென்றல் வீசவில்லையா..? வெள்ளை நிறத்தவர், கருப்பானவர் என்றெல்லாம் பார்க்காமல் இயற்கை இயற்கை சமமான வாய்ப்புகளையே வழங்குகிறது. ரயில் பயணத்தில் யார் யாரோ ஏறுவார்கள், இறங்குவார்கள். அவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல், நீங்கள் செல்லும் பயணத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் நிறம் என்பது உங்கள் தனித்துவம். இதை யாருக்காகவும் மாற்ற நினைக்காதீர்கள்.