மருத்துவர்கள்

உங்கள் வீட்டு மசாலா பாக்கெட்டில் விஷம்…?

எச்சரிக்கிறார் டாக்டர் வீ.புகழேந்தி

ரெடிமேட் சாம்பார் மிக்ஸ், பிரியாணி மசாலா, ரெடிமேட் புளியோதரை என எல்லா சமையல் பொருட்களும் பாக்கெட்டாகத் தொங்குகின்றன. வேலை நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த பாக்கெட்களில் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்று எச்சரிக்கிறார் மருத்துவர்.

வீடுகளில் கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம் போன்ற மசாலாப் பொருட்கள் போடுவதற்கு என பிரத்யேகமாக அஞ்சறைப் பெட்டிகள் இருந்தன. அந்த இடத்தை இப்போது மசாலா பாக்கெட்கள் பிடித்துக்கொண்டன. மசாலா பொருட்களுக்கு என்று தனித்தனி பாக்கெட் இருப்பது போதாது என ரசம் மிக்ஸ், புளிக்குழம்பு மசாலா, சிக்கன் 65 மசாலா, மீன் ஃப்ரை என்று எல்லாமே பாக்கெட்களாக மாறிவிட்டன.

வேலை நேரம் குறைகிறது என்பதை மனதில் வைத்து, நம் இல்லத்தரசிகளும் இவற்றை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்கிறார்கள். மசாலாக்களில் என்னவெல்லாம் கலந்திருக்கிறது, கலப்படம் இருக்கிறதா, காலாவதி ஆனதா என்றெல்லாம் எதையும் யாரும் கவனிப்பதே இல்லை.

இந்த நிலையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மசாலாப் பொருட்களில் கலப்படம் இருப்பதாக சிங்கப்பூர், ஹாங்காங் அரசுகள் தடை செய்துள்ளன. பூகம்பமாக வெடிக்க வேண்டிய இந்த விவகாரம் இந்தியாவில் சிறு சலசலப்பைக் கூட ஏற்படுத்தவில்லை என்பது தான் ஆச்சர்யம்.

, ஹாங்காங் அரசின் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம், இந்திய மசாலாப் பொருட்களை பரிசோதித்ததில், அதில் புற்றுநோயை ஏற்படுத்தும், பூச்சிக்கொல்லி மருந்தான் எத்திலீன் ஆக்ஸைடு அதிகம் இருப்பதைக் கண்டரிந்துள்ளது. அதனாலே எவரெஸ்ட் நிறுவனத்தின் மசாலாப் பொருட்களை திரும்பப்பெற உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு,அதன் இறக்குமதியையும் தடை செய்திருக்கிறது.

சிங்கப்பூர் அரசின் உணவுத் துறை ஏஜென்சி மேற்கொண்ட பரிசோதனைக்குப் பிறகு, அதில் கலப்படம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே. இந்த சந்தையில் இருந்து திரும்பப்பெற உத்தரவிட்டது.

இதையடுத்தே இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் எவரெஸ்ட் மசாலா பொருட்களில் உண்மையிலே புற்றுநோயை எற்படுத்தும் பூச்சிக்கொல்லியின் அளவு அதிகமாக உள்ளதா என ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

உண்மையில் இது போன்ற பொருட்கள் சந்தைப்படுத்துவதற்கு முன்பே ஆய்வு செய்து பாதுகாப்பையும் தரத்தையும் உறுதிபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் இவை சந்தைக்கு வந்த பின்னர், அதுவும் அந்நிய நாட்டு தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் ஆய்வின் மூலம் கலப்படத்தை உறுதிபடுத்திய பின்பு, ஆராய்வது காலம் கடந்த நடவடிக்கையாகும்.

நமது நாட்டில் மருந்துகள் கூட முறையாக பரிசோதனை செய்யப்படுவதில்லை என்பது தான் சாபக்கேடு. கடந்த 2022 செப்டம்பர் மாதம் இந்தியாவின் மைதன் பார்மா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கலப்பட இருமல் சிரப்பை உட்கொண்டு, 70 காம்பிய சிறுகுழந்தைகள் பலியான துயர சம்பவம் அரங்கேறியது.

அதே போன்று இந்தியாவில்,நோய்டாவைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் சிரப்பிலும் கலப்படம் இருந்ததால், அதை உட்கொண்ட 68 உஸ்பெகிஸ்தான் சிறுகுழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள். இந்த இருமல் சிரப்புகளை உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து, அதில் அளவிற்கு அதிகமாக நச்சுத்தன்மை கொண்ட டைஎத்திலீன் மற்றும் எத்திலீன் கிளைக்கால் போன்ற வேதிப்பொருட்கள்  இருப்பதை உறுதிசெய்தது. இந்த இறப்புக்கு பொறுப்பேற்க வேண்டிய இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

.மருந்துகளின் நிலைமையே இப்படி இருக்கும்போது உணவுப் பொருட்களில் இந்திய தரக்கட்டுப்பாடு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை.

கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்காவின் ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேசன் எவரெஸ்ட் நிறுவனத்தின் சாம்பார் பொடியில் சால்மோனெல்லா (Salmonella) கிருமி இருந்ததை ஆய்வின் மூலம் உறுதிபடுத்தி, அவற்றை உடனடியாக திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது.

மசாலா, மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலையில் அதன் தரத்தை இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் உறுதிசெய்யாமல் அனுப்புவது இன்று வரை தொடர்கதையாகவே இருக்கின்றன. வேறு நாட்டினர் ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னர் கண் துடைப்புக்காக இங்கேயும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இந்திய நாட்டுக்கு உலக அளவில் அவமானமும் கெட்ட பெயரும் ஏற்படுகிறது என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.

இதன் தொடர்ச்சியாகவே இந்திய சந்தையில் விற்கப்படும் போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ் போன்ற பானங்களில் மற்ற நாடுகளில் விற்பனையாகும் சர்க்கரை அளவை விட 3 மடங்கு சர்க்கரை அதிகமிருப்பதும், அதனால் குழந்தைகளுக்கு உடல் பருமன், சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வெளிநாடுகளில் சரியான தரத்துடன் விற்பனையாகும் இந்த பொருட்களின் தரம் இந்தியாவில் மட்டும் கண்காணிக்கப்படுவதில்லை. அதனாலே இந்தியர்களின் உடல்நலப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் 2023ம் ஆண்டு ஆய்வின் படி 11% இந்தியர்கள் சர்க்கரைநோயினாலும் 35% இந்தியர்கள் உயர் ரத்த அழுத்த நோயினாலும் 40% இந்தியர்கள் வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்புப் பாதிபுடனும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரச்னைகளுக்கு மூல காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக சர்க்கரை, அதிக உப்பு, அதிக கொழுப்பு இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்தாலும், இந்த உணவுப் பொருட்களை கண்டறிந்து சந்தையில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இவற்றை பயன்படுத்துபவர்களே விழிப்புணர்வு அடைய வேண்டும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களின் நிலையே இத்தனை மோசமாக இருக்கிறது என்றால், நம் உள்நாட்டில் ஆயிரத்தெட்டு நிறுவனங்கள் விதவிதமாக பாக்கெட் மசாலா வெளியிடுகின்றன. இவை எதற்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது.

100 கிராம் மிளகை விட 100 கிராம் மிளகுத் தூள் விலை குறைவாக இருந்தாலும் அதையே வாங்கும் அளவுக்குத் தான் மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது. பாக்கெட் மசாலாப் பொருட்கள் குழந்தைகளை மட்டுமின்றி அத்தனை பேருடைய உடல் நலனிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்தை உண்டாக்கும். எனவே, மீண்டும் அஞ்சறைப்பெட்டியை கையில் எடுங்கள். அதுவே, ஆரோக்கியத்திற்கு நல்லது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *