அச்சச்சோ குட்டிக் கதைகள்

Image

தொகுப்பு 2

சூப்பர் தண்டனை!

வங்கியைக் கொள்ளையடித்த கொள்ளையன் எதிரில் நின்ற ஒரு கஸ்டமரைக் கேட்டான்.

’’நான் கொள்ளையடித்ததை நீ பார்த்தாயா..?’’

’’ஆம்..’’ என்று அவன் தலையாட்டியதும் டுமீல் என்று அவனை சுட்டுவிட்டு எக்காளமாய்த் திரும்பி ‘‘வேற யாராவது பாத்தீங்களா..?’’ என்று கேட்டான்.

எல்லோரும் இல்லையென்று தலையாட்ட, ஒருவன் பக்கத்தில் நின்ற பெண்ணைக் காட்டிச் சொன்னான்.

’’என் மனைவி பார்த்தாள்..!’’

மந்திரவாதி

கொஞ்ச நாளைக்கு முன்னால எங்க ஊருப்பக்கம் ஒரு மந்திரவாதி இருந்தான். பயங்கர சித்துவேலை எல்லாம் செய்வான். ஊர் மக்களையெல்லாம் ரொம்ப மிரட்டி பயமுறுத்தி வெச்சிருந்தான்.  அதோட மட்டுமில்ல… அவன் மனைவியையும் ரொம்பக் கொடுமைப் படுத்துவான். அவ எந்நேரமும் அழுதிட்டேதான் இருப்பா. ஊர் மக்கள் எல்லாம் அவளுக்காக ரொம்ப பரிதாபப்படுவாங்க.

ஆனா, மந்திரவாதி எதப்பத்தியும் கவலைப்படமாட்டான்.  அவன் அடிக்கடி அவன் மனைவியைப் பாத்து, ‘‘நான் எப்படா சாவேன்னு பாத்துகிட்டு இருக்கியா.. நான் செத்தாலும் உன்னையும் இந்த ஊரையும் விடமாட்டேன்… புதைகுழியைத் தோண்டிக்கிட்டு வந்து உங்களப் பழிவாங்குவேன்…’’ என்று சொல்வான்.

நாங்க எல்லாம், ‘என்னடா இவன் செத்தும் கெடுப்பான் போல இருக்கேன்னு’ நெனச்சுகிட்டு இருக்கும் போதே அவன் ஒரு நாள் உண்மையிலே  செத்தும் போயிட்டான்.  எங்களுக்கெல்லாம் ஒரே பயம். இவனப் பொதச்சா எந்திரிச்சு வந்திடுவானோனு… எங்க ஊரு பழக்கம் எரிக்கவும் முடியாது.  என்ன பண்றதுனு தெரியாம அவன் மனைவி முடிவுக்கே விட்டுட்டோம். பயத்துல யாரும் சுடுகாட்டுக்கே போகல.

ஆனா, அவன் மனைவியோ, ‘விட்டதுடா…’னு பயங்கர சந்தோஷமா சுத்திகிட்டு இருந்தா. ஒரு யாரும் இல்லாத அன்னிக்கு அவளத் தனியாப் பாத்து, ‘‘உனக்கு மந்திரவாதி மேலா பயமா இல்லையா, புதைகுழியை தோண்டிட்டு வருவேன்னு சொன்னானே”ன்னு கேட்டேன்.

உடனே அவள், ‘‘தோண்டினா தோண்டட்டும்… நான் அவனத் தலைகீழாத்தான புதைச்சு வச்சிருக்கேன்…!’’ன்னு சொன்னாள்.

நட ராஜா!

கடற்கரையில் அந்த ஆண் நண்டைப் பார்த்ததுமே பெண் நண்டுக்கு காதல் உண்டாகிவிட்டது. அது மற்ற நண்டுகளைப் போல் சைடுவாக்கில் நடக்காமல் மனிதர்களைப் போல் நேராய் நடந்து கொண்டிருந்தது. பெண் நண்டு உடனே தன் காதலைச் சொல்லியும்விட்டது. ஆண் நண்டுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. பெண் நண்டு உடனே தன் பெற்றோர்களிடம் சொல்லி திருமண சம்மதமும் பெற்றுவிட்டது.

நல்ல நாளில் பெண் பார்க்கும் வைபவமும் ஏற்பாடாகியது. பிறகு திருமணம். பெண் நண்டு ஆண் நண்டிடம் போட்ட ஒரே கண்டிஷன் பெண் பார்க்கும்போதும், மாப்பிள்ளை அழைப்பின் போதும், திருமணத்தின் போதும் மற்ற நண்டுகளைப் போல் சைடுவாக்கில் நடக்காமல் நேராய் நடந்து வரவேண்டும் என்பதுதான். அதே போல் ஆண் நண்டும் நடந்து வர பெண் நண்டுக்கும் அதன் வீட்டாருக்கும் ஒரே பெருமை.

கல்யாணம் முடிந்தது. முதல் இரவு.  அறைக்குள் நுழைந்த ஆண் நண்டு மற்ற நண்டுகளைப் போலவே சைடாய் நடந்துவர பெண் நண்டு கேட்டது.

’’என்னங்க… உஙக ஸ்பெஷலே நேரா நடக்கறதுதான். அப்படி நடக்காம எல்லா நண்டுக மாதிரி சாதாரணமா நடந்து வர்றீங்களே..!’’

அதற்கு ஆண் நண்டு, ‘‘ங்கொய்யால… டெய்லி தண்ணீ அடிக்க டாஸ்மாக்ல ங்கொப்பனா வேலை பாக்கிறான்…’’ என்றது.

Leave a Comment