விசித்திரமான கவுன்சிலிங் கதை
’’நான் பேசுவது ரொம்பவும் ரகசியம். என் பெயர், அடையாளம் எதுவும் கேட்காதீர்கள். என்று ரொம்பவே பீடிகையுடன் பேசத் தொடங்கினர் ஒருவர்.
அவரை நிதானத்துக்குக் கொண்டுவந்து சமாதானப்படுத்தி பேச வைத்தேன். ’’திருமணமாகி எனக்கு ஒரு வருடம் ஆகிறது. நான் தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு ஐ.டி. பணிக்காக வந்தவன். சென்னையைச் சேர்ந்த சுகுணாவை திருமணம் செய்துகொண்டேன். அவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
என்னுடய பெற்றோர் எப்போதாவது சென்னைக்கு வந்து சில நாட்கள் தங்கிவிட்டுப் போவார்கள். அவருடைய பெற்றோரும் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வருவார்கள், நாங்களும் அவர் பெற்றோர் வீட்டுக்குப் போய் வருவோம். அடுத்த வருடம் குழந்தை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்திருக்கிறோம். எங்களுடைய திருமண வாழ்க்கை ரொம்பவே நன்றாக போகிறது.
கடந்த மாதம் என்னிடம் ஒரு பெண் போனில் பேசினார். ‘சுகுணாவை பற்றி சில உண்மை சொல்கிறேன். அவர் தன் பாலின ஈர்ப்பாளர். அவருக்கு பெண்களைத் தான் ரொம்பவும் பிடிக்கும். இதை எப்படி உறுதியாகச் சொல்கிறேன் என்றால், என்னையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

அவருக்கு என்னைப் போன்று நிறைய பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அவர் உங்களுக்கு உண்மையாக இருக்க மாட்டார். உங்களுக்கு குழந்தை பிறக்கவும் வாய்ப்பு இல்லை. நீங்கள் ரொம்பவும் நல்லவராக இருக்கிறீர்கள். அதனால் தான் உண்மையைச் சொல்கிறேன். அவரை விவாகரத்து செய்துவிட்டு ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்துகொள்ளுங்கள்…’ என்று சொன்னார்.
எனக்கு திடீரென அப்படியொரு செய்தி கேட்டதும் கிடுகிடுவென நடுங்கிவிட்டேன். என்னால் யாருடனும் எதுவும் பேசவும் முடியவில்லை. அடுத்து என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. அதனால் சாமிக்கு வேண்டுதல் என்று சொல்லிவிட்டு சில நாட்கள் திருச்செந்தூர் போய்விட்டுத் திரும்பினேன்.
அந்த பெண் யார் என்பதை அறிந்துகொள்வதற்கும், மேலும் சில தகவல்கள் அறியவும் அந்த நம்பருக்குப் பேசினேன். ஆனால், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது.
சுகுணாவிடம் இது குறித்து பேசுவதற்கு எனக்கு தயக்கமாகவும் பயமாகவும் இருக்கிறது. அவரது நடவடிக்கைகளை இந்த ஒரு மாதம் முழுமையாகக் கவனித்தேன். அவர் பெண் தோழிகளிடம் ரொம்பவே கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறார்.
எனக்கு அவரிடம் பேசுவதற்கே பிடிக்கவில்லை. வேலை டென்ஷன் என்று சொல்லி சமாளித்துவருகிறேன். அவரும் என்னை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
எனக்கு அவர் துரோகம் செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன். எங்கள் குடும்பத்துக்கு இந்த விஷயம் தெரியவந்தால் ரொம்பவே அவமானமாகிவிடும். அதன்பிறகு என்னால் வெளியே தலை காட்ட முடியாமல் தற்கொலை செய்ய வேண்டிவரும். அதனால் இப்போதே ஏதாவது காரணம் காட்டி விவாகரத்து செய்துவிடலாம் என்று நினைக்கிறேன். இந்த விஷயத்தில் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்’’ என்று பேசி முடித்தார்.
‘’உங்களுக்கும் சுகுணாவுக்கும் தாம்பத்திய உறவு எப்படியிருக்கிறது..?’’
‘’நான் விருப்பப்படும் நேரத்தில் இணங்குவார். ஆனால், இது வரையிலும் அவராக ஒரு முறை கூட விருப்பத்தைத் தெரிவித்தது இல்லை. நானும் முன்பு அதை யோசித்தது இல்லை. இப்போது தான் அவருக்கு ஆண் மீது விருப்பம் இல்லாதது தான் அவரது அமைதிக்குக் காரணம் என்று தெரிகிறது…’’
‘’நீங்கள் விருப்பம் தெரிவித்து அவர் மறுத்திருக்கிறாரா..?’’
‘’அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால், அவர் அத்தனை ஆர்வம் காட்டவில்லை என்பது இப்போது எனக்குத் தெரிகிறது. அவர் தோழிகளிடம் சிரித்துப் பேசுவது போல் என்னிடம் அவர் பேசியது இல்லை…’’
‘’வீட்டுக்குத் தோழிகள் வருகிறார்களா..?’’
‘’அக்கம்பக்கத்துப் பெண்கள் வருவதுண்டு. அவரது அலுவலகத் தோழிகள் வருவார்கள். எல்லோரிடமும் நன்றாக சிரித்துப் பேசுவார்…’’
‘’இரவு தோழிகள் தங்குவது உண்டா..?’’
‘’இல்லை, எந்த தோழியும் தங்கியது இல்லை. ஆனால், அவரது பெற்றோர் வீட்டில் சில தோழிகளுடன் நைட் பார்ட்டி கொண்டாடியதாக அவர் தெரிவித்திருக்கிறார். அவர் கண்டிப்பாக தன் பாலின சேர்க்கையாளர் என்பதை இப்போது நான் நம்புகிறேன்…’’
‘’குழந்தை பற்றி அவரது கருத்து என்ன?’’
‘’இரண்டு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. அவர் எல்லா நேரத்திலும் ஒரு குழந்தை போதும் என்று சொல்வார். நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை…’’
‘’மனைவியாக உங்களுக்கு அவர் ஏதேனும் குறை வைத்திருக்கிறாரா..?’’
‘’இதுவரை உண்மை தெரியாமல் நான் அப்பாவியாக இருந்திருக்கிறேன். அவர் தன்பாலின விருப்பம் உடையவர் என்பதை என்னிடம் மறைத்திருக்கிறார். இனிமேல் அவருடன் என்னால் எப்படி குடும்பம் நடத்த முடியும்? அவரை நேருக்கு நேர் பார்க்கவே எனக்கு கசப்பாக இருக்கிறது. இந்த விஷயத்தை அவருடைய பெற்றோரிடமே பேசி, சுமுகமாக பிரிவதற்கு வழிவகை செய்யலாம் என்று நினைக்கிறேன்…’’
சரி, சுகுணா என்ன குற்றம் செய்திருக்கிறார்….’’
‘’என்ன இப்படி கேட்கிறீர்கள்..? அவர் தன்பாலின ஆர்வலர் என்பதே குற்றம். அதை என்னிடம் மறைத்து நல்லவர் போன்று நடிப்பது இன்னொரு குற்றம்…’’
‘’நல்லவர் போன்று நடித்திருக்கிறார் என்றால் தன்பாலின ஆர்வலர்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்று சொல்கிறீர்களா..?’’
‘’இயற்கைக்கு மாறாக உறவு கொள்வதே தவறு தானே. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்..’’
’’சரி, நீங்கள் முழுமையான ஆணா..?’’
‘’என்ன கேட்கிறீர்கள்… எனக்கு ஆண்மை இல்லாத காரணத்தால் சுகுணா வேறு பெண்களுடன் உறவு வைத்துக்கொள்கிறார் என்கிறீர்களா..?’’
‘’நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை. உங்களிடம் ஆண் குணம் மட்டுமே இருக்கிறதா அல்லது பெண் குணமும் கலந்திருக்கிறதா..?’’
‘’இன்னமும் நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லை..’’
‘’பெண்ணிடம் இருந்து ஆண் பிறக்கிறான். ஒரு ஆணால் பெண் கருவுற்று குழந்தை பெறுகிறாள். ஒரு பேட்டரியில் பிளஸ், மைனஸ் இருப்பது போன்று எல்லா ஆண்களிடமும் கொஞ்சம் பெண்மை இருக்கும். எல்லா பெண்களிடமும் கொஞ்சம் ஆண்மை இருக்கும்.
சுகுணா தன்பாலின ஆர்வலர் தானா என்பதை முதலில் நீங்கள் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அது உண்மை என்றால் அதனை உங்களிடம் மறைத்தது நிச்சயம் குற்றம். ஆனால், நிறைய பேர் வாழ்க்கையில் அவ்வப்போது பருவக் கோளாறு காரணமாக சில தவறுகள் செய்வதுண்டு. கல்லூரி ஹாஸ்டலில் படிக்கும் நேரத்தில் வலுக்கட்டாயமாக சிலர் தவறு செய்ய வைக்கலாம். அதேபோல் மாணவர்கள் ஹாஸ்டலில், சிறையில், ராணுவத்தில், கப்பல் பணியில் நடப்பதுண்டு. இதற்கு அர்த்தம் அவர்கள் தன்பாலின ஆர்வலர் என்பது அல்ல. சூழ்நிலைக்கு ஏற்ப இணங்குதல் அல்லது ஏற்றுக்கொள்தல். அதன் பிறகு அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்கள். எப்போதேனும் அரிதாக பழைய தோழியர், தோழனைக் கண்டால் அந்த ஆர்வம் வரலாம். வராமலும் போகலாம்.
தன்பாலின ஆர்வலராக இருப்பது தவறு அல்ல. ஆனால், அதை மறைத்து வேறு ஒருவர் வாழ்க்கையை சிக்கலாக்குவது நிச்சயம் குற்றம். அந்த பெண் என்ன காரணத்துக்காக இந்த விஷயத்தைச் சொன்னார் என்பது புரியவில்லை. அந்த பெண் சொல்லவில்லை என்றால் நீங்கள் சுகுணாவுடன் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள். ஆகவே, முதலில் தன்பாலின ஈர்ப்பு குறித்து உங்கள் மனதில் இருக்கும் வெறுப்பு, கோபத்தை விட்டுத் தள்ளுங்கள்.
தன்பாலின ஈர்ப்பாளர் என்றால் சுகுணாவை உங்களால் மாற்றிவிட முடியாது. அவரும் மாறுவதற்கு விரும்ப மாட்டார். மேலும் அவரால் உங்களுக்கு முழு திருப்தி கொடுக்க முடியாது என்பதை அவரும் நிச்சயம் ஒப்புக்கொள்வார். ஆனால், நீங்கள் இது வரையிலும் தாம்பத்திய உறவில் திருப்தியாகவே இருக்கிறீர்கள். ஆகவே, அவர் முழுமையான தன்பாலின ஈர்ப்பாளரா அல்லது சூழ்நிலைக் கைதியா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
இந்த விஷயத்தை அவரது பெற்றோரிடம் நீங்கள் பேசுவது சரியல்ல. ஏனென்றால், உங்களைப் போலவே அவர்களுக்கும் இந்த விஷயம் தெரியாமல் இருக்கலாம். மூன்றாவது நபருக்கு இந்த விஷயம் தெரியவேண்டிய அவசியம் இல்லை. எனவே, சுகுணாவிடம் பேசி அவரது விளக்கத்தைக் கேளுங்கள். அதன்பிறகு என்ன முடிவு எடுப்பது என்று யோசிக்கலாம். ஒரு பாறையை உங்கள் தலையில் சுமப்பது போன்று இதை சுமக்க வேண்டியதில்லை. உங்கள் சந்தேகத்தைக் கேளுங்கள். அதை விளக்க வேண்டிய கடமையும் கட்டாயமும் அவருக்கு இருக்கிறது…’’
‘’எனக்கு அவரிடம் நேரில் இது குறித்து பேசுவதற்கு விருப்பமில்லை….’’
‘’பரவாயில்லை, என்னிடம் அல்லது வேறு ஏதேனும் ஒரு கவுன்சிலிங் சென்டருக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர் நிச்சயம் பேசுவார். அதற்கும் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், ஒரு கடிதத்தில் உங்கள் மனதில் இருக்கும் அத்தனை சந்தேகத்தையும் முழுமையாக எழுதி சுகுணாவிடம் கொடுங்கள். அவர் தெளிவுபடுத்தட்டும். உங்களுக்கு வயசு இருக்கிறது, சம்பாத்தியம் இருக்கிறது. எனவே, தைரியமாக முன்னேறுங்கள்…’’
‘’என்னை ஏமாற்றியது குற்றம் தானே…’’
‘’கண்டிப்பாக குற்றம் தான். ஆனால், அவர் திட்டமிட்டு ஏமாற்றினாரா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்..’’ என்று சொல்லி அனுப்பினேன்.
அதன் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கழித்துப் பேசினார் அந்த நபர்.
‘’நீங்கள் சுகுணாவிடம் பேசுங்கள் என்று சொன்ன பிறகும் எனக்கு பேசுவதற்கு தைரியம் வரவில்லை. ஆகவே, சுகுணாவின் தந்தையிடம் இந்த விஷயத்தைப் பேசினேன். அவர் மகளிடம் பேசுவதாகச் சொன்னார்.
சுகுணாவிடம் அவரது தந்தை சாதாரணமாகத் தான் கேட்டிருக்கிறார். ஆனால், சுகுணா ரொம்பவே கோபமாகிவிட்டார். என்னிடம் எதுவும் சொல்லாமல் வீட்டில் இருந்து துணி, நகைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அவரது அம்மா வீட்டுக்குப் போய்விட்டார். நான் அவரது தந்தையிடம் பேசினேன்.
‘நம்பிக்கை இல்லாத ஒருவருடன் என்னால் வாழ முடியாது’ என்று உறுதியாக சொல்லிவிட்டாராம். என்னிடம் சுகுணா பேசுவதற்கு விரும்பவில்லை. விவாகரத்து பத்திரம் அனுப்பி வைக்கிறேன். கையெழுத்துப் போடுங்கள் என்று கேட்டிருக்கிறார். இப்போது நான் என்ன செய்வது என்றே புரியவில்லை. சுகுணா குற்றவாளியா இல்லை நான் குற்றவாளியா?’’ என்று கேட்டார்.
‘’சுகுணா குற்றவாளியா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு மனைவியிடம் பேச வேண்டிய விஷயத்தை அவரது தந்தையிடம் பேசிய நீங்கள் நிச்சயம் ஒரு குற்றவாளி…’’ என்றேன்.
‘’நான் சுகுணா எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமா?’’
‘’எப்படி இருந்தாலும் ஏற்க வேண்டியது இல்லை. அவர் முழுமையான தன்பாலின ஆர்வலர், குழந்தை பெற விருப்பம் இல்லாதவர் என்றால் நிச்சயம் ஏற்க வேண்டியது இல்லை. ஆனால், யாரோ ஒரு பெண் சொன்னதை நீங்கள் நம்பி கோபப்பட்டிருக்கத் தேவையில்லை. எதுவாக இருந்தாலும் மீண்டும் சுகுணாவிடம் நேரடியாகப் பேசுவதற்கு முயற்சி செய்யுங்கள்….’’ என்று சொல்லி அனுப்பினேன்.
அதன் பிறகு அவர் பேசவே இல்லை. விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்ட தகவலே பின்னர் தெரியவந்தது.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
பின்குறிப்பு :
இந்த கட்டுரை வெளியாகியிருக்கும் ஞானகுரு மகிழ்ச்சி ஜூன் மாத இதழ் முழுமையாகப் படிப்பதற்கு இந்த லிங்க் தொட்டுச் செல்லுங்கள். அட்டையைத் தொட்டால் இதழ் விரியும். படியுங்கள் பரப்புங்கள்.