ஜெயலலிதா கொடுத்த சிறப்பு மரியாதை

என்ன செய்தார் சைதை துரைசாமி – 530

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்குத் தான் தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்பு என்று கருத்துக்கணிப்புகள் கூறிவந்தன. ஆனால், அம்மா உணவகம், தாலிக்குத் தங்கம் என்று மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்திருந்த நம்பிக்கையின் அடிப்படையில், எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் ஜெயலலிதா தனித்து நின்று தேர்தலை சந்தித்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒட்டுமொத்தமாக 37 தொகுதிகளை வென்று சாதனை படைத்தார். அதோடு, முதன்முறையாக சென்னையின் மூன்று நாடாளுமன்றத் தொகுதியையும் அதிமுக கைப்பற்றியது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற தினத்தில், அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதி என்று தெரியவந்ததும் ஏராளமான கட்சியினரும், அதிகாரிகளும், முக்கியப் பிரமுகர்களும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூற திரண்டு வந்தனர். ஒவ்வொரு நபர் கையிலும் விதவிதமாக மலர்க்கூடைகள் இருந்தன. அப்போது மேயராக இருந்த சைதை துரைசாமியும் வாழ்த்து தெரிவிக்க வந்திருந்தார்.

அவருக்கு முன்பாகவே கட்சியின் முன்னணிப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் வந்து காத்திருந்தனர். ஆகவே, யாரும் கவனிக்க முடியாத வகையில் பின் வரிசையில் இருந்தார் மேயர் சைதை துரைசாமி.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத அதிசயம் நடந்தது. ஆம், ஜெயலலிதா வீட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கு முன்னரே பாதுகாப்பு அதிகாரிகளிடம், ‘’மேயர் வந்துவிட்டாரா என்று பார்த்து, அவரை முதலில் அழைத்து வாருங்கள் …’’ என்று உத்தரவு போட்டார்.

இதையடுத்து பின்னே இருந்த மேயர் சைதை துரைசாமி உடனடியாக முன்னுக்குக் கொண்டுவரப்பட்டார். மேயர் சைதை துரைசாமியிடம் பொக்கே பெற்றுக்கொண்ட ஜெயலலிதா, ‘’இந்த வெற்றிக்கு உங்க அம்மா உணவகமும் ஒரு முக்கிய காரணம்’’ என்று பாராட்டியதுடன் அன்பாகப் பேசினார். இதை கண்ட அத்தனை அமைச்சர் பெருமக்களும் வாயடைத்துப் போனார்கள்.

அந்த அங்கீகாரம் மேயர் சைதை துரைசாமிக்கு மகிழ்ச்சி கொடுத்தது. அதாவது, அம்மா உணவகத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு ஒரு மேயராக சைதை துரைசாமி அடைந்த அத்தனை கஷ்டங்களுக்கும், கடும் உழைப்புக்கும் சரியான அங்கீகாரத்தை முதல்வர் கொடுத்துவிட்டதை எண்ணி நெகிழ்ந்தார் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment