காமராஜர் நினைவலைகள் – 1
காமராஜர் எல்லா காலத்திலும் மக்கள் முதல்வராக இருந்தார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றது.
1955ம் வருடம் டிசம்பர் மாதம் காமராஜர் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர்.
அப்போது முதல்வர் காமராஜர் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார். ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டது, வெளி தொடர்பே அற்றுப்போனது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர். அதைக் கேள்விப்பட்ட காமராஜ், அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார்.
அந்த கிராமத்திற்குச் செல்லும் பாலம் உடைந்துபோயிருந்தது. அதனால் அதிகாரிகள் காமரஜிடம், “அய்யா இதற்கு மேல் கார் செல்லாது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்” என்றார்கள்.
ஆனால் காமராஜரோ, “அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிப்பது என்றால் நான் கோட்டையிலிருந்தே உத்தரவு போடலாமே. மக்கள் கஷ்டத்தை நான் நேரடியாப் பாக்கணும். தேவையானா நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யனும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதனால்தான் நானே வந்தேன்” என்று சொல்லியபடியே வேட்டியை மடித்துக்கட்டி கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார்.
சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்குச் சென்றார். முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. மறுநாளும் காமராஜ் திட்டமிட்டபடியே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
பெருந்தலைவரின் இந்த சேவையைப் பாராட்டி பேரறிஞர் அண்ணா திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
“சேரிகள் பாட்டாளிகளின் குடிசைகள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை. ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசத்துக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார்.
கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம்.” என்று பாராட்டினார்.
இப்படியும் ஒரு முதல்வர் இருந்தார்.
