ஞானகுரு பதில்கள்
கேள்வி : கோயில் நிர்வாகம் அரசிடம் இருக்கவேண்டுமா அல்லது தனியாரிடமா..?
- ஏ.மணிகண்டன், அல்லம்பட்டி
ஞானகுரு :
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36,861 கோயில்கள் உள்ளன. கோயிலில் சிற்பங்கள், சித்திரங்கள், நகைகள், சொத்துக்கள் போன்றவற்றுடன் வருமானத்தை பாதுகாக்கிறது அறநிலையத்துறை. பணியாளர் சம்பளம், சொத்து வரி, குடிநீர் வரி, பூஜை, வழிபாட்டு வழிகள், மராமத்து பணிகள், பொது சுகாதாரம், மின் சாதனங்கள், சிசிடிவி, ஜெனரேட்டர் செலவு, அன்னதானம் உள்ளிட்ட செலவுகளை முறைப்படுத்துகிறது. அறநிலையத்துறை செயல்பாடுகளில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு.
அதேநேரம் தனி நபர்கள் அல்லது டிரஸ்டிகள் கையில் நிர்வாகத்தை ஒப்படைப்பது மிகவும் மோசமான ஆலோசனை. பக்திமான் வேடம் போடும் மனிதர்கள் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிப்பார்கள். தங்கள் அதிகாரத்திமிரைக் காட்டுவதற்கு எந்த எல்லைக்கும் போவார்கள். ஆதினங்கள் கையில் இருக்கும் கோயில் நிர்வாகத்தைப் பார்த்தாலே இந்த உண்மை புரியும்.
கேள்வி : மாரடைப்பால் மரணம் அடைவது அதிகரிக்கிறதே, அறியாமையா… ?
- என்.முகுந்தராஜன், சூலக்கரை மேடு.
ஞானகுரு :
மருந்தாக உணவு எடுத்துக்கொண்டாலும், போதிய உடற்பயிற்சிகள் செய்தாலும் ஏதேனும் நோயினால் மனிதர்கள் தாக்கப்படுவதும், மரணம் அடைவதும் நடக்கவே செய்யும். முன்பு காரணம் தெரியாத மரணங்களுக்கு பேய் அடித்தது, செய்வினை என்று சொல்லிவிடுவார்கள். இப்போது மருத்துவக் காரணம் தெரிவதால் மாரடைப்பு என்கிறார்கள். இரவில் தூங்கும் நேரம் குறைவதும், சீரற்ற உணவு பழக்கமும் மாரடைப்பு ஏற்படுவதற்கான பல்வேறு காரணிகளில் முக்கியமானவை.












