இவற்றை கடைப்பிடித்தால் போதுங்க.
இந்த உலகிலேயே அதிக நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயாளிகள் இந்தியாவில்தான் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவிக்கிறது. இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் நீரிழிவு சோதனை நடத்தினால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனப்படுகிறது.
சர்க்கரை கட்டுப்பாட்டை காலையில் சாப்பிடும் முன்னும், பிறகு சாப்பிட்டு ஒன்றரை மணிநேரம் கழித்தும் இரத்தப் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம். சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால் – சாப்பிடும் முன் இரத்தத்தில் சர்க்கரை அளவு 80 – 120மிலி, சாப்பிட்டு ஒன்றரை மணிநேரம் கழித்து 120 – 160மிலி இருக்க வேண்டும்.
சாப்பிடும் முன் 140க்கு மேலும், சாப்பிட்ட பின் 200க்கு மேலும் இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லையென்று பொருள்.
சர்க்கரை நோய் சிகிச்சையில் ஐந்து முக்கியக் கோட்பாடுகள் உள்ளன.
1. உணவு
2. உடற்பயிற்சி
3. மருந்துகள்
4. பரிசோதனை
5. சர்க்கரை நோய் கல்வி
சர்க்கரை நோய் சிகிச்சை என்பது மேற்கண்ட 5 கோட்பாடுகளும் இணைந்த ஒரு கூட்டு சிகிச்சை. இதில் உணவு முறையை மட்டுமே கடைப்பிடித்தால் சரியாகிவிடும் என்றோ, உடற்பயிற்சி செய்தால் மட்டுமே சரியாகிவிடும் என்றோ, இன்சுலின் அல்லது மாத்திரை சாப்பிட்டால் மட்டும் போதும் என்றோ எண்ண முடியாது. இவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்துதான் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். எனவே, இதில் ஒன்று மாறினாலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இந்த ஐந்தையும் முறைப்படி கடைப்பிடித்தால் கட்டுப்பாடுடன் சர்க்கரை நோயுடன் வாழ்வாங்கு வாழலாம்.












