கவித்துவம்
சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
தனிமை
தனிமையில் ஒரு துயர் மலர்கிறது
எண்ணற்ற தனிமைகளில் அது வளர்கிறது
தனிமையில் ஓரிரவில் பின்பு உதிர்கிறது
தனிமையில் தனிமை மட்டும் எஞ்சுகிறது
தனிமையில் தனிமை மட்டும் எஞ்சுவது எவ்வளவு அழகு
தனிமையில் தனிமை மட்டும் எஞ்சுவது எவ்வளவு ஆறுதல்
- சேரவஞ்சி
வழிகள்
கண்கள் பாதையை
தொலைத்துவிட்டு
நிற்கும் போதெல்லாம்
கால்கள்
ஒரு புதிய பாதையைக்
கண்டுபிடித்துத் தரும்
- நரன்












