பேரண்டிங் டிப்ஸ்
குழந்தைகள் அறிவுபூர்வமாக விளங்குவதில் அவர்களுடைய மூளை வளர்ச்சியும் பெரும் பங்கு வகிக்கிறது. குழந்தைகள் தங்களின் 5 வயதை அடைவதற்குள் 90 சதவீத அளவுக்கு மூளை வளர்ச்சி பெற்றுவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வயதில் குழந்தைகளுக்கு மூளைக்கான பயிற்சிகளைக் கொடுத்து மேலும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கு, அவர்களுக்கு வெறும் படிப்பு மட்டும் போதாது. இன்னும் நிறைய நல்ல விஷயங்களையும் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்குக் காரணமாக இருக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிகேற்ற சில பயிற்சிகளையும் விளையாட்டுகளையும் அறிவோம்.
வார்த்தை விளையாட்டு:
இந்த விளையாட்டானது ஃப்ளாஷ் கார்டில் உள்ள வார்த்தைகளைப் பார்த்து, அதற்கேற்ற படத்துடன் பொருத்துவதாகும். சிங்கம், புலி, மான், மயில் என விலங்குகளின் பெயரை வைத்துப் படத்தை பொருத்துவது, படத்தை வைத்து பெயரைப் பொருத்துவது போன்றதாகும். இதன்மூலம் குழந்தைகளின் எழுத்துத் திறமை மேலோங்கும். நினைவு திறன் அதிகரிக்கும்.
கண்டுபிடி கண்டுபிடி:
ஏதாவது ஒரு பேப்பரில் பந்து என எழுதிவிட்டு, அதைக் குழந்தையிடம் காண்பிக்கவும். அந்தப் பந்தை வீட்டில் தேடிக் கண்டுபிடிக்கச் சொல்லலாம். இதுபோல வார்த்தைவைத்து பொருளை கண்டுபிடிக்கும் விளையாட்டால், குழந்தைகள் வார்த்தைகளையும் அதன் சொல் அமைப்பையும் நன்றாகவே கற்றுக் கொள்வார்கள்.
பாதையைக் கண்டுபிடி:
இடதா… வலதா?, யூ டர்னா?, திரும்ப வேண்டுமா?, முன்னே செல்ல வேண்டுமா எனப் பாதையைத் தேடிக் கண்டுபிடிக்கும் விளையாட்டே பாதையைக் கண்டுபிடி விளையாட்டாகும். இது, மூளைக்கானப் பயிற்சியை அளிக்கும் விளையாட்டு ஆகும். மேலும் இதன்மூலம் கற்பனைத்திறன், பிரச்னையை தீர்க்கும் திறன், சிந்திக்கும் திறன் மேலோங்கும். கண்களுக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும். பென்சில், பேனா பிடித்து வரைவதால் கை மற்றும் கண்கள் ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். கை விரல்களின் நுணுக்கத்தைக் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். குழந்தையுடன் பெற்றோரும் சேர்ந்து செய்தால், குழந்தைகள் இன்னும் எளிமையாக அனைத்தையும் கற்றுக்கொள்வர்.
ரோல் ப்ளே:
ஆசிரியர், டாக்டர், போலீஸ் என எதாவது ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அந்த கதாபாத்திரமாக நடித்து, அவர்கள் செய்வதைச் செய்து விளையாடும் விளையாட்டே ரோல் ப்ளே ஆகும். இதன்மூலம், கற்பனை திறன் வளரும். படைப்பாற்றல் திறன் பெருகும். டாக்டராக விளையாடி ஊசி போடுவது, மாத்திரை கொடுப்பது போன்ற செல்ல சேட்டைகளை குழந்தைகள் செய்து மகிழ்வார்கள்.
போர்ட் கேம்ஸ்:
பாம்பு – ஏணி, லூடோ, செஸ் போன்ற போர்டில் விளையாடும் விளையாட்டுகளே போர்ட் கேம்ஸ் என்று சொல்லப்படும். இந்த விளையாட்டுகளால் குழந்தைகளின் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். பிரச்னையை கையாளும் திறன் மேலோங்கும். பொறுமை, வெற்றி, தோல்வி ஆகியவற்றைப் புரிந்துகொள்வார்கள்.
ரைம்ஸ் பாடி ஆடுதல்:
பாடல்களைப் பாடியபடி ஆடுதலே ரைம்ஸ் பாடி ஆடுதல் விளையாட்டு ஆகும். டிவியிலோ அல்லது வேறு ஒலிபரப்பு சாதனங்களிலோ குழந்தைகளுக்குப் பிடித்த ரைம்ஸ் பாடல்களைப் போட்டு பாடிக்கொண்டே நடனமாடச் சொல்லலாம். குதிப்பது, இடுப்பு ஆட்டுவது, கைகளை அசைப்பது போன்ற உடல் தொடர்பான பயிற்சியாகவும் இது அமையும். அதேநேரத்தில், மகிழ்ச்சியான மனநிலையும் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
மறைந்து விளையாடுதல்:
குழந்தை ஒன்று ஓர் இடத்தில் மறைந்துகொண்டு, இன்னொரு குழந்தை மறைந்துகொண்டிருக்கும் குழந்தையைத் தேடிக் கண்டுபிடிப்பதே மறைந்து விளையாடுதல் (ஹைட் அண்ட் சீக்) ஆகும். இந்த விளையாட்டால் உடலுக்கு பயிற்சி கிடைக்கும். தேடிக் கண்டுபிடித்து விளையாட்டை முடிக்கும் நோக்கம் கிடைக்கும். ஆர்வம் அதிகரிக்கும். மூளைத் திறன் மேம்படும். தேடும்போது மூளைக்குப் பயிற்சி கிடைக்கும்.
எண் விளையாட்டு:
இசையை ஒலிக்க செய்துவிட்டு, 1 முதல் 100 வரை சொல்ல வேண்டும். பாட்டை நிறுத்திய உடனே எந்த எண்ணில் இருக்கிறார்களோ அந்த எண்ணை எழுதிக் காண்பிக்கலாம். ஒவ்வொரு முறை பாட்டை நிறுத்தும்போது ஒவ்வொரு குழந்தையும் எண்ணை மாற்றி மாற்றிச் சொல்லி கொண்டே இருப்பார்கள். இசை நிறுத்தியவுடன் எந்த எண்ணில் விட்டார்களோ, அந்த எண்ணை எழுதிக் காண்பிக்கலாம். இதனால், குழுவாக விளையாடும் திறன் மேலோங்கும். எண் பற்றிய அறிவு கிடைக்கும்.
மொழித் திறன்:
குழந்தைகள் பொதுவாக, தங்களது 3-5 வயதுக்குள்ளேயே 2-3 மொழிகளைக் கற்கும் திறன் கொண்டிருக்கும். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளை வீட்டில் பேசினால், இரண்டையுமே கற்றுக்கொள்ளும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என எந்த மொழியையும் சுலபமாக குழந்தைகளால் கற்க முடியும்.
உடற்பயிற்சி:
ஓடுதல், ஸ்கிப்பிங் விளையாடுதல், குதித்தல், ஓடிப் பிடித்து விளையாடுதல், பந்தைப் பிடித்தல், கோகோ விளையாடுதல் எனப் பல்வேறு விளையாட்டுகளால் பல்வேறு நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்கும். இத்தகைய விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி, மனபயிற்சி ஆகிய இரண்டும் கிடைக்கும்.
கலை கற்றல்:
பாடல், நடனம், இசை, ஓவியம் வரைதல் ஆகிய பல்வேறு கலைகளைக் குழந்தைகளால் கற்க முடியும். இவை அனைத்தும் விளையாட்டாக இருப்பின் எளிதில் குழந்தைகள் இதைக் கற்பர். கதை புத்தகம் வாசித்தல் அல்லது கதை சொல்லுதல் என நாள்தோறும் ஒரு கதையைச் சொல்லி குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தலாம். அவர்களையும் புத்தகம் பார்த்துக் கதை சொல்லச் சொல்லலாம். இதன்மூலம் அவர்களுக்கு கற்பனை திறன், பேசும் திறன், மொழித் திறன் ஆகியவை கிடைக்கும்.
பில்டிங் பிளாக்ஸ்:
1 வயது முடிந்த குழந்தைகளுக்கு தருகிற எளிமையான விளையாட்டு இது. வெவ்வேறு தோற்றத்தில், பல நிறங்களில் காணப்படும் இந்த பிளாக்ஸால் உருவத்தைக் கட்டமைக்க வேண்டும். தங்களின் சொந்த கற்பனையால், படைப்பாற்றல் திறமையால் குழந்தைகள் பில்டிங் பிளாக்ஸ் வைத்து ஏதோ ஓர் உருவத்தைச் செய்வார்கள். இது மூளைக்குச் சிறந்த பயிற்சியாகும். மூளை தூண்டப்படும்.
பசல்ஸ்:
கிச்சடி சமையலில் எவ்வளவு சத்துகள் நிரம்பியுள்ளதோ, அதுபோல இந்த பசல்ஸ் விளையாட்டில் மூளை தூண்டப்படும் காரணிகள் அமைந்து இருக்கும். அவர்கள் ஓர் உருவத்தை வரவைக்க சிந்தித்து, அதை, இதை என மாற்றி மாற்றி மூளைக்கு வேலை தருகிறார்கள். கண்களும் கைகளும் ஒருங்கிணைப்பாக வேலை செய்யும். இந்த பசல்ஸ் வெற்றிகரமாக விளையாடி முடித்தவுடன், குழந்தை வெற்றி பெற்றதற்கான மகிழ்ச்சியைப் பெறும். தன் மேல் நம்பிக்கை வரும்.
குழந்தைகளுக்கான மூளை வளர்ச்சி விளையாட்டைச் சொல்லிக்கொடுத்து அவர்களை முத்தாய் வளர்ப்போம்.