தலைவாசல் விஜய் ஆரோக்கிய ரகசியம்
குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கெனத் தனியிடம் பிடித்திருப்பவர், நடிகர் தலைவாசல் விஜய். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என 30 ஆண்டுகளில் 300 படங்கள் நடித்திருக்கிறார். உடல் நலம் ஆரோக்கியம் சார்ந்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
ஆரோக்கிய ரகசியம் பற்றி தலைவாசல் விஜய், “எங்கள் குடும்ப மிகப்பெரியது. தாத்தா காலத்தில் பர்மா சென்றது குடும்பம். பர்மாவில் பிறந்த அம்மா அகதிகளின் கடைசிக் கப்பலில் இந்தியா வந்தார். எங்கள் குடும்பத்தில் 3 மாமாக்கள், 2 சித்திகள், தாத்தா, பாட்டி என்று நாங்கள் 11 பேர் இருந்தோம்.அப்போதெல்லாம் ரேஷன் அரிசி வாங்கித்தான் சாப்பிட்டோம். அளவோடு தான் சாப்பிட முடியும். காய்கறி துண்டங்கள் கூட எண்ணித்தான் கிடைக்கும். எனவே அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, இடையில் சாப்பிடுவதெல்லாம் இல்லை. அந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. உணவுகளுக்கிடையே இடையிடையே நொறுக்குத் தீனிகள் தின்கிற பழக்கம் எனக்குக் கிடையாது.

நான் எந்த உணவின் மீதும் மிக தீவிரமாக விருப்பம் கொண்டு சாப்பிடுபவன் அல்ல. நான் விரும்பி உண்ணுவது எளிமையான உணவுகள்தான். காய்கறிகளில் பெரிதாக இருக்கும் சேனைக்கிழங்கு, சிறிய உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், முருங்கைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவை பிடிக்கும். வாழைப்பூ வடை எனக்குப் பிரியமான ஒன்று.
சிறு உருளைக்கிழங்கில் ஆலிவ் ஆயில் போட்டு வறுத்து மிளகு, மஞ்சள் சேர்த்துச் சாப்பிடுவது பிடிக்கும். தயிர் சாதம் எனக்கு விருப்பமான உணவு. கீரைகள் விரும்பி சாப்பிடுவேன். கத்தரிக்காய் முருங்கைக்காய் சேர்த்த பொரியல் எனக்கு பிடித்த ஒன்று. காய்கறிகளில் பொதுவாக எதையும் நான் வெறுக்க மாட்டேன்.
அசைவ வகைகளில் மட்டன், சிக்கன், மீன் எல்லாமும் சாப்பிடுவேன். அசைவத்தில் மீனைத் தவிர மற்றவற்றை அளவோடு சாப்பிடுவேன்.
உணவு உண்ணும் முறையைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar’ என்று.அதாவது காலையில் ராஜாவைப் போல் வயிறு நிறைவாகவும், மதியம் ஒரு இளவரசன் போல் ஓரளவு நிறைவாகவும், இரவில் ஒரு பிச்சைக்காரன் போல் குறைந்த அளவிலும் சாப்பிட வேண்டும். இதை எப்போதும்இதை நான் கவனத்தில் கொள்வேன். எனவே, காலை உணவை சரியாகச் சாப்பிட்டு விடுவேன்.
இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு படப்பிடிப்புக்காக தேனி சென்றபோது ஒரு 80 வயதுக்கு மேல் உள்ள ஒரு முதியவர் தினசரிப் பத்திரிகையைக் கண்ணாடி போடாமல் படித்துக் கொண்டிருந்தார். அவரது பற்கள் வரிசையாக இருந்தன. அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, ‘கண்ணாடி போடாமல் இருக்கிறீர்களே எப்படி?” என்று கேட்டேன்.
“நான் ஏன் கண்ணாடி போட வேண்டும்?” என்றவர் ஒரு பாடலைச் சொல்லி அவர் தொடர்ந்து கடைபிடிக்கும் பழக்கத்தைக் கூறி ஆச்சர்யப்படுத்தினார்.
‘காலையில் இஞ்சி ,கடும்பகல் சுக்கு,
இரவில் கடுக்காய் மண்டலம் சாப்பிட
கோலூன்றி நடந்தவன்
கோலை வீசி நடப்பான் மிடுக்காய்’ என்பதே அந்த பாடல். காலையில் இஞ்சி, மதியம் சுக்கு இரவில் கடுக்காய் சேர்த்துக் கொண்டால் பல்வேறு பிரச்சினைகள் நம்மை அணுகாது என்றார். நான் இதைத் தொடர்ந்து வருகிறேன் .
காலை உணவு சாப்பிடுவதற்கு கால் மணி நேரம் முன்பாக 3 பூண்டு பல் அளவிற்கு இஞ்சியைத் தோலுரித்து சுவைத்து சாரத்தை விழுங்கி விட்டு சக்கையைத் துப்பி விடுவேன். மதியம் சுக்குப்பொடி அரை ஸ்பூன் அளவு சாப்பிடுவேன். இரவில் கடுக்காய் பொடி அரை ஸ்பூன் அளவு சாப்பிடுவேன். இதில் மதியம் சுக்குப் பொடியை மட்டும் என்னால் தொடர்ந்து பின்பற்ற முடியவில்லை. மற்ற இரண்டையும் தொடர்கிறேன். இஞ்சிச் சாறு குடித்த பிறகு ஒரு தேநீர் அருந்துவேன். முளைக்கட்டிய பயறு ஒரு கப்பில் சாப்பிடுவேன். பப்பாளி பழம் 100 கிராம் போல் துண்டுகளாக்கிச் சாப்பிடுவேன்.

காலையில் நடைப்பயிற்சி செல்வேன். நடைப்பயிற்சி இல்லாத நேரங்களில் எப்படியும் தினசரி ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்து விடுவேன். நடக்க வாய்ப்பு இல்லாதபோது வீட்டுக்குள்ளே சில பயிற்சிகளைச் செய்து விடுவதுண்டு.
மதியம் அரிசி சாதம் சாப்பிடுவேன். பருப்பு, சிக்கன், மட்டன் சிறிதளவு மீன் என்று மாறி மாறிச் சாப்பிடுவேன் எந்த உணவுகளும் எனக்குத் தடை இல்லை.
மாலை 5 மணி போல சமோசா அல்லது வடையுடன் ஒரு தேநீர் சாப்பிடுவேன்.
இரவில் மூன்று சப்பாத்திகள் சாப்பிடுவேன். 99 சதவீதம் அது தான் எனது இரவு உணவாக இருக்கும். அத்துடன் தயிரில் நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிடுவேன். அது மலச்சிக்கலைத் தடுக்கும். அதன் பிறகு கடுக்காய் பொடியைச் சாப்பிட்டு மிதமான வெந்நீர் குடிப்பேன். எனக்கு எந்த செரிமானக் கோளாறும், மலச்சிக்கல் பிரச்சினையும் வந்ததே கிடையாது. 20 ஆண்டுகளாக இதைத் தொடர்ந்து வருகிறேன்.
அந்த இஞ்சி, கடுக்காய்த்தூளை எந்த ஊர், எந்தநாடு சென்றாலும் எடுத்துச் செல்வேன். அதைச் சாப்பிட்டதன் விளைவை உடலால் நாம் உணர முடியும்.
எனது மகனையும் மகளையும் சிறு வயதிலிருந்து நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் செல்வேன். அதனால் காலையில் 4:30 மணிக்கு எழுந்து அவர்களை அழைத்துக் கொண்டு விடச் செல்லும் போது இந்த வாழ்க்கை முறைக்கு நான் பழகி இருந்தேன். இப்படி 20 ஆண்டுகளாகத் தொடர்கிறது. நான் இரவு ஒன்பதரை அல்லது பத்து மணிக்குள் உறங்கச் சென்று விடுவேன்.
வாய்ப்பு கிடைக்கும் போது டென்னிஸ் விளையாடுவேன். சில நேரம் ஷட்டில் விளையாடுவேன். எதுவும் அமையாதபோது ஸ்கிப்பிங் செய்வேன். எங்கு சென்றாலும் ஸ்கிப்பிங் ரோப்பை எடுத்துச் செல்வேன். அதில் 500 முறை கயிறு தாண்டி பயிற்சி செய்வேன். வீட்டிலேயே செய்வதற்கு தம்பிள்ஸ் போன்ற சில உபகரணங்களை வைத்திருக்கிறேன்.
கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் இஷ்டப்பட்டதை சாப்பிடுவது தான் நிறைவான வாழ்க்கை, மகிழ்ச்சியான வாழ்க்கை. கை நிறைய பணம், பெரிய வீடு, உயர்தரமான கார் என்று வசதியாக வாழ்ந்து கொண்டு சிறிது இனிப்பைக் கூட சாப்பிட முடியாத வாழ்க்கையில் என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது என்று நான் நினைப்பேன்.
எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆவதற்கும் உடம்பில் சேருவதற்கும் அதற்கான உடல் உழைப்பு வேண்டும். எனவே உரிய பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அது இப்போது தடைப்படுவதே பலருக்கும் பிரச்சினையாக இருக்கிறது. எனவே உடற்பயிற்சி என்பது ஏதாவது ஒரு வகையில் செய்து கொண்டே இருப்பேன்.
உடற்பயிற்சி செய்யும் போது வெளியூர்களில் இருந்தாலோ ஹோட்டலில் தங்கி இருந்தாலோ அங்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வேன் .அப்பொழுது எல்லாம் ஸ்கிப்பிங் ரோப் எனக்கு உதவும். ஸ்ட்ரெட்ச் கார்டு (Stretch Cord) என்று ஒன்றை எடுத்துச் செல்வேன். அதைக் கொண்டு சிறு இடத்திலேயே பயிற்சிகளைச் செய்ய முடியும்.
.எங்கள் பிள்ளைகள் இருவரும் நீச்சல் வீரர்கள். நானும் நீச்சல் அடிப்பேன் ஆனால் எனக்கு அதில் உள்ள நுணுக்கங்கள் தெரியாது. அதில் உள்ள நான்கு ஸ்ட்ரோக்குகள் செய்ய மாட்டேன். இரண்டு மட்டுமே என்னால் செய்ய முடியும்.
நமது மக்களிடம் உள்ள பிரச்சினை இட்லி, தோசை, ஊத்தப்பம் என்று கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் உண்பது தான். புரோட்டின் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். கார்போஹைட்ரேட் அதிகம் கூடாது. கேரளாவில் புட்டு, கடலை, அவித்த முட்டை என்று புரோட்டின் உணவுகள் கொண்ட பழக்கம் உள்ளது. மைதா மாவு உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பீப், மட்டன், சிக்கன் போன்றவற்றை மாலை நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சீரண சக்தி மாலையில் குறைவாக இருக்கும். இவற்றை உடல் உழைப்பு தொழிலாளர்கள் சாப்பிடலாம். சாப்பிடும் போது வயதையும் கணக்கில்கொண்டு கடின உணவுகளை மாலை நேரங்களில் தவிர்க்க வேண்டும். சரிவிகித உணவில் மீனுக்கு நல்ல இடம் உண்டு.

இந்த யூடியூப் காலத்தில் தான் சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஓரளவு விழிப்புணர்வு வந்துள்ளது. வயிறு நிறைய சாப்பிடுவது நிறைவானது என்று சிலர் நினைக்கிறார்கள். அதில் எந்தெந்த சத்து உள்ளது என்று பார்க்க வேண்டும். நமது நாட்டில் கீரைகள், மீன்கள், பழங்கள் போன்றவற்றைக் குறைவாகத்தான் சாப்பிடுகிறோம். அதற்கான விழிப்புணர்வு வந்த போதிலும் கூட இவற்றைப் போதிய அளவு எடுத்துக்கொள்வது இல்லை. மூன்று வேளை உணவுக்கு இடை இடையே நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதை நான் தவிர்த்து விடுவேன்.
படப்பிடிப்பில்லாத நாட்களில் காலை உணவுக்குப் பிறகு நேரம் கிடைக்கும் போது விளையாட்டுப் போட்டிகளை டிவியில் பார்ப்பேன். புத்தகம் படிப்பேன், தவறவிட்ட படங்களைப் பார்ப்பேன். மாலையில் சிறுநடை செல்வேன்.எவ்வளவு வேலைகள் இருந்தாலும் செல்போனை அணைத்துவிட்டு ஒன்பதரை முதல் பத்து மணிக்குள் உறங்கச் சென்று விடுவேன்.
நான் சிறுவயதில் இருந்த போது எங்கள் தாத்தா நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வழியே போகும் கூவம் ஆற்றில் மீன் பிடிக்கத் தூண்டில் எடுத்துக்கொண்டு செல்வார். நிறைய ஜிலேபி மீன் பிடித்து வருவார். இப்படி வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிடுவோம். குறுக்கே ஓடும் ஆற்றைக் கடப்பதற்கு அப்போது படகு சவாரி எல்லாம் உண்டு.
நாங்கள் பெரிய குடும்பமாக இருந்தபோது, குடும்பத்தில் வறுமை இருந்தது. அதிலும் ஒரு நிறைவு இருந்தது. ரேஷன் அரிசியில் இட்லி தோசை என்றாலும் ஆட்டுக்கல்லில் ஆளுக்கு ஒரு நாள் முறை வைத்து மாறி மாறி மாவு அரைக்க வேண்டும். நான் ஒரு நாள் சித்தி ஒரு நாள் என்று அரைப்போம்.
ஆளுக்கு மூன்று இட்லி கிடைக்கும். கருணைக்கிழங்கு இரண்டு துண்டுகள் தான் கிடைக்கும் .யாருக்கும் சலுகை கிடையாது. ஒரு பெரிய காட்பரீஸ் சாக்லேட் வந்தால் 11 துண்டுகளாகப் போட்டு ஆளுக்கு ஒரு துண்டு கிடைக்கும் .எனவே எனக்கு இப்போது முழு காட்பரீஸ் சாக்லேட் யாராவது கொடுத்தால் கூட அப்படியே சாப்பிடத் தயக்கமாகவும் குற்ற உணர்வாகவும் இருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்படிப்பட்ட குடும்பச் சூழ்நிலையிலிருந்து நான் வந்திருக்கிறேன்.
இப்போதெல்லாம் போன் செய்தால் எந்த உணவும் வீட்டுக்கு வருகிறது. ஆனால் பசியோடு சாப்பிடுவதில் ருசி அதிகமாக இருக்கும். ஏக்கத்தோடு இருந்தவர்களுக்கு கிடைக்கும் உணவும் பொருளும் மிகவும் மதிப்பு மிக்கதாகத் தெரியும். இப்போது பலருக்கும் பசி என்றால் என்ன என்பதே தெரிவதில்லை.
சிறு வயதில் நான் சாப்பிட்ட தேன் மிட்டாய், கொடுக்காப்புளி, மூக்குச் சளி பழம், கமர்கட் போன்றவை இப்போது நினைத்தாலும் இனிக்கின்றன. காலம் மாறி உள்ளது. மக்களின் பொருளாதார சூழல் இப்போது முன்னேறி உள்ளது.
எனக்கு களரி, சிலம்பம் தெரியும். 1987 ஆம் ஆண்டு நாங்கள் ரஷ்யாவுக்கு ஒரு கலாச்சார சுற்றுலா சென்றபோது அங்கே ‘பெஸ்டிவல் ஆஃப் இந்தியா ‘என்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். அப்போது அங்கே நான் களரி பயிற்சிகளைச் செய்து காண்பித்தேன். எனக்கு யோகாவிலும் ஆர்வம் உண்டு. வீட்டில் நேரம் கிடைக்கும் பொழுது சில ஆசனங்களைச் செய்வேன் .இன்றும் என்னால் சிரசாசனம் செய்ய முடிகிறது.
எனக்கு முதுகு வலி 1993.ல் வந்தது. அலோபதி மருத்துவரிடம் சரியான பலன் கிடைக்கவில்லை என்றதும் ஆயுர்வேதம் சென்றேன். டாக்டர் சேஷாத்ரி என்ற ஆயுர்வேத மருத்துவரைப் பார்த்தேன். அவர் ஆயுர்வேதம் படித்து சிகிச்சை செய்பவர். அவர் ஒரு மருந்துப் பொடி கொடுத்து சில கட்டுப்பாடுகளைச் சொன்னார்.
அப்போது எந்த கிழங்கும் சாப்பிடக்கூடாது, மட்டன், சிக்கன் கூடாது, கீரை, பழம் மட்டும் சாப்பிடலாம். .மதியம் தூங்கக் கூடாது இவற்றைப் பின்பற்றி வந்தால் 21ஆம் நாள் என்னுடன் நீங்கள் ஷட்டில் ஆடலாம் என்றார். அதே மாதிரி நான் பின்பற்றி அந்த பிரச்சினையிலிருந்து வெளியே வந்தேன். எனது நண்பர்களாக இருக்கும் நடிகர்கள் ராதாரவி, அஜித் போன்றவர்களுக்கெல்லாம் நான் ஆயுர்வேத சிகிச்சையைச் சிபாரிசு செய்தேன்.
இப்போதெல்லாம் 40 வயதில் இருந்து ஏதாவது மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். என் 63 வயதில் இப்போது நான் எந்த மாத்திரையும் சாப்பிடுவதில்லை. நினைத்துப் பார்த்தால் நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த மாத்திரையுமே எடுத்துக் கொண்டதில்லை.
நமது வாழ்க்கைச் சூழல் நமது பழக்கத்தைத் தீர்மானிக்கக் கூடியது. பிள்ளைகளுக்காக ஏற்பட்ட பழக்கம் அதிகாலை 4.30க்கு எழுவது. இன்றும் அதைத் தொடர்வது எனக்கு வசதியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது.
குடும்ப வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால் என்னைப் புரிந்து கொண்ட மனைவி ராஜேஸ்வரி எனக்குப் பெரிய பலம். எனது மகன் ஜெய்வந்த் ஐடியில் வேலை பார்க்கிறார் .மருமகள் சுசித்ரா தேவி, பேத்தி ஷானவி ஆகியோர் பெங்களூரில் வசிக்கிறார்கள்..மகள் ஜெயவீணா நியூட்ரீஷியன் மற்றும் டயட்டீஷியன் முதுகலை படித்தவர். கிரிக்கெட் வீரர்களுக்கு ஊட்டச்சத்து ஆலோசகராக இருக்கிறார். மருமகன் பாபா அபரஜித் கிரிக்கெட் வீரர். TNPL ல் சென்னை அணியின் கேப்டன். இப்படி மகிழ்ச்சியான குடும்ப உறவுகள்.
எனது ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன என்று கேட்டால், எளிய உணவுகள், தொடர்ந்து சீரான உடற்பயிற்சி, அளவோடு சாப்பிடுவது, வேளை தவறாமல் சாப்பிடுவது போன்றவைதான் என்பேன். மற்றபடி மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது தேவையற்ற கவலைகளை மனதில் ஏற்றிக் கொள்ளாததும் கூட நான் பின்பற்றி வரும் நல்ல பழக்கம்” என்று சொல்லி முடித்தார்.
சந்திப்பு : அருள்செல்வன்