சிம்பிள் டிப்ஸ்
இன்றைய தலைமுறையை வாட்டி வதைக்கும் மிகக் கொடுமையான விஷயமாக மன அழுத்தம் மாறிவிட்டது. பெரும்பாலும் இன்றைய இளைஞர்கள் சின்னச்சின்ன விஷயங்களுக்கும் டென்ஷனாகி அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குழந்தைகளும் டென்ஷன் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள்.
உண்மையில் குழந்தைகளுக்கு மன அழுத்தம் படிப்பு தவிர வேறு விஷயங்களில் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், பெரியோர்கள் அடிக்கடி பேசுவதை வைத்தே டென்ஷன் என்று குழந்தைகளும் பேசுகிறார்கள். இதெல்லாம் டென்ஷனே இல்லை என்பதை அவர்களுக்குப் புரியவேண்டும் என்றால், பெரியவர்களுக்கு அதன் அர்த்தம் தெளிவாகப் புரிய வேண்டும்.
டென்ஷன் என்பது மன அழுத்தத்தை மட்டுமே குறிக்கும். ஆனால், கோபம் என்பது பிறர் உள்ளத்தையும் புண்படுத்தக்கூடியது. அதனால் மற்றவர்களின் மனத்தில் இறுக்கமும் அழுத்தமும் ஏற்பட்டு உடலும் பாதிக்கப்படும். எனவே, டென்ஷனைக் குறைப்பது நல்லது. ஏனெனில் அதிக டென்ஷன் எனும் மன அழுத்தம் உடையவர்களுக்கே மாரடைப்பும் இருதய நோயும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒருநாளைக்கு 20 நிமிடங்களை ஒதுக்கி, சில பயிற்சிகளைச் செய்தால் போதும். அடுத்த சில வாரங்களிலேயே மனஅழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும். அதோடு, அதைத் தூண்டும் ஹார்மோன்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்துவிடும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். டென்ஷன் குறைய சில ஈஸியான வழிகள் இதோ….
* டென்ஷனாக இருப்பதாக உணர்ந்தால் ஓரிடத்தில் அமைதியாக உட்காரலாம். அப்படி அமர்ந்தபடி தியானம் செய்யத் தெரிந்தால், தியானம் செய்யலாம். இல்லையெனில், ஒன்று இரண்டு மூன்று என நூறுவரை எண்ணலாம். இதனால் மனச் சிந்தனை வேறு பக்கம் செலுத்தப்பட்டு மன அழுத்தம் குறையும்.
* வீட்டில் இருந்து விலகி சற்று தூரம் எந்தச் சிந்தனையும் இல்லாமல் நடந்து செல்வதும் ஒரு பயிற்சியே. சற்று தூரம் மெல்ல நடந்து செல்லுங்கள். இதை உணர்ந்துசெய்யும்போது உங்களிடம் உள்ள டென்ஷன் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
* அடிக்கடி மன அழுத்தம் அடைபவர்கள் தியானத்தைப் பழகிக்கொண்டு தினசரி தியானம் செய்தல் அவசியம். நாம் இருக்கும் இடத்திலோ, நாம் பயணம் செய்யும்பொழுதோ தியானம் செய்யலாம்.
* தியானம் செய்ய விருப்பமில்லாதவர்கள், அவர்கள் மதக் கடவுளை நினைத்து வழிபட்டு உட்கார்ந்திருக்கலாம் அல்லது முன்நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையே ஓர் ஒளி இருப்பதாக கற்பனை செய்துகொண்டு அதன்மீது கவனம் செலுத்தியவாறு உட்கார்ந்திருக்கலாம்.
* டென்ஷனைக் குறைப்பதற்கு சிரிப்பு மிகச் சிறந்த மருந்து என்பதைப் புரிந்துகொள்ளுக்கள். இதற்காக காமெடி படங்கள், வீடியோக்களைப் பார்க்கலாம். தவிர, நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுடன் வயிறு வலிக்கும் அளவுக்கு உரையாடலாம்.
* மன அழுத்தம் உடையவர்கள் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். அதுபோல் ஆரோக்கியமான தூக்கமும் அவசியம். நல்ல காற்றோட்டமுள்ள சூரியனைப் பார்த்த அறையில் தூங்குவது அவசியம். முறையான மற்றும் சரியான நேரத்தில் தூங்கிப் பழக வேண்டும். உடல் உழைப்பு முறையான தூக்கத்தை உண்டாக்கும்.
* வீட்டுக்குள்ளேயே அறைக்குள் உங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பாடிப் பார்க்கலாம் அல்லது பிடித்த இசையைக் கேட்கலாம். அதுபோல் பிடித்த உணவுகளைச் சமைத்துப் பழகலாம் அல்லது பிடித்த நூல்களைப் படிக்கலாம். இதனால் மனம் லேசாகும். இன்றைய சூழ்நிலையில், சமூக வலைதளங்களும் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும் மிகச்சிறந்த ஒன்று என்பதை நினைவில்கொள்ளுங்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் உங்களுக்குப் பிடித்தவர்களுடன் உரையாடுங்கள்.
* எந்த செயல்பாட்டிலும் வேகத்தைத் தவிர்த்து விவேகமாகச் செயல்பட்டால் டென்ஷனைத் தவிர்க்கலாம். அதேநேரத்தில் இன்னும் ஆழமாய்ச் சிந்தித்து பொறுமையாகத் திட்டம் தீட்டி நேரம் ஒதுக்கி செயல்பாடுகளைச் செய்தால் மனம் அமைதிபெறும். டென்ஷன் ஏற்படாது.
* டென்ஷனுக்கு சாக்லேட் சாப்பிடலாம். சாக்லேட்டைச் சாப்பிடும்போது வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள்; அதன் ருசியை, இனிமையை அனுபவித்து ருசியுங்கள். இதுகூட ஒரு மனப்பயிற்சிதான். மன ஆரோக்கியம் காக்க சாக்லேட்டும் உதவும்.
* கிரீன் டீயில் உள்ள அமினோ அமிலம், தியானின் ஆகியவை மூளையை அமைதிப்படுத்தும் வல்லமை கொண்டவை; ரிலாக்ஸைத் தருபவை. ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து கிரீன் டீ குடித்தால், அது மனஅழுத்தத்துக்குக் காரணமாகும் கார்ட்டிசால் ஹார்மோன் சுரப்பைக் குறைக்கும் என்கிறது ஓர் ஆய்வு.