ஞானகுரு பதில்கள்
கேள்வி ; பொருளாதாரச் சிக்கலில் மாட்டி துன்பப்படுகிறேன், மீள்வது எப்படி..?
- பி.கணேசமூர்த்தி, முத்தால்நகர்.
ஞானகுரு :
பொருளாதாரச் சிக்கல் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ப பொருளாதாரச் சிக்கலை உருவாக்கிக்கொண்டு அவஸ்தைப்படுகிறார்கள். மாத சம்பளத்துக்காரர் இ.எம்.ஐ. கட்டிவிட்டு மீதி நாட்களை ஓட்டுவதற்கு அல்லாடுகிறார். வியாபாரத்தை விஸ்தீரணம் செய்துவிட்டு வங்கி லோனுக்கு தொழிலதிபர்கள் அலைகிறார்கள். அம்பானி, அதானி என்றாலும் பொருளாதாரச் சிக்கல் இருக்கவே செய்யும். இந்த சிக்கலைத் தாண்டி விடலாம் என்று நினைத்தால் தைரியமாகப் போராடுங்கள். முடியாதது எதுவும் இல்லை.
கேள்வி : மனநிலை சரியில்லாத நேரத்தில் என்ன செய்ய வேண்டும்..?
- டி.முனீஸ்வரன், இந்திராநகர்.
ஞானகுரு :
மனசு சரியில்லை என்பதை ஒப்புக்கொள்வது தான், அதிலிருந்து மீள்வதற்கு மிகச்சரியான வழி. பதட்டம், அழுத்தம் மனதில் ஏற்பட்டதும், என்ன செயல் செய்துகொண்டு இருக்கிறீர்களோ, அதிலிருந்து கொஞ்ச நேரம் வெளியே வாருங்கள். மனதுக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள் என யாரிடமாவது மனம் விட்டுப் பேசுங்கள். யாருடைய ஆலோசனையும் அவசியமில்லை. மனதில் இருப்பதை பகிர்ந்துகொள்வது மட்டும் போதும்.
பிறரிடம் பேசுவதற்கு விருப்பம் இல்லையென்றால் ஒரு பேப்பர் அல்லது செல்போனில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னை குறித்து முழுமையாக எழுதுங்கள், அதற்கு என்னவெல்லாம் தீர்வு இருக்கிறது என்பதையும் எழுதுங்கள். இப்படி முழுமையாக எழுதும்போதே பாதி பிரச்னை தீர்ந்துவிடும்.
இசை அல்லது நகைச்சுவை என மனதுக்குப் பிடித்ததில் கொஞ்ச நேரம் செலவழியுங்கள். மனசு சரியில்லைன்னா ஒரு கட்டிங் போடலாம் என்று அழைக்கும் நண்பர்களுடன் சென்றுவிடாதீர்கள். அது, இப்போது இருப்பதை விட பெரிய சிக்கலுக்குக் கொண்டுபோய் நிறுத்திவிடும்.