கிருஷ்ணர் வாக்கு இது
மனித குலம் உருவான காலத்திலிருந்தே, கடவுள் நம்பிக்கை குறித்த சந்தேகங்களும் இருக்கின்றன. ’கடவுள் நம்பிக்கை இருப்பதாலே இந்த உலகில் குற்றங்கள் குறைவாக நடக்கின்றன. சொர்க்கம், நரகம் போன்ற அச்சுறுத்தல் காரணமாகவே மனிதன் தவறு செய்ய அஞ்சுகிறான்’ என்று ஆன்மிகவாதிகள் சொல்கிறார்கள்.
இது உண்மையா..?
நமது இதிகாசங்கள் உண்மையா அல்லது பொய்யா என்று அலசி ஆராயாமல், இந்த கருத்துக்கு பதில் சொல்லும், ஒரு சம்பவத்தை மகாபாரதத்தில் காணலாம்.
குழந்தைப் பருவத்தில் இருந்தே கிருஷ்ணருக்கு பணிவிடைகள் செய்து, தேரோட்டியாக பணியாற்றி, அவருடைய அத்தனை லீலைகளையும் நேரில் தரிசித்து மகிழ்ந்தவர் உத்தவர். துவாபர யுகத்தில் கிருஷ்ணரின் அவதாரப்பணி நிறைவடைய இருந்த தருணத்தில், தன்னுடைய சந்தேகங்களை எல்லாம் கிருஷ்ணரிடம் கேட்டு பதில் பெற்றார்.
அந்த கேள்விகளில் முக்கியமான ஒன்று.
‘’கண்ணா…!! ஆபாத்து என்று கூப்பிட்டால் தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா?”
“உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக் கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்” என்றார்.
“நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, மனிதர்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகள் தொடர்ந்து, பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவிக்க வேண்டும். அப்படித்தானே? தர்மன் சூதாடுவதற்கு முன்னரே, அது தவறு என்று தடுத்து நிறுத்தியிருந்தால் இத்தனை பெரிய போர் தேவை இல்லையே..”
“உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நான் இருப்பதை மறந்து விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து விடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும். நான் எப்போதும், எங்கேயும் இருக்கிறேன் என்று நினைப்பவர்களால் ஒரு போதும் தவறுகள் செய்ய முடியாது. என் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் தவறுகள் செய்கிறார்கள்” என்றார் கிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து நின்றார்.
தவறு செய்யும் அத்தனை மனிதர்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று கிருஷ்ணர் சொல்வதை ஏற்றுக்கொள்கிறீர்களா..?
.