ஏமாற்றிவந்த கேபிள் இணைப்புகள்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 277

சென்னை மாநகராட்சியை அழகுபடுத்த வேண்டும் என்பதற்கு மேயர் சைதை துரைசாமி சாலை அமைப்பு, சாலையோர மரங்கள், தெரு விளக்குகள் என்று அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொண்டார். அந்த நேரத்தில் தான் கேபிள் வயர்கள் ஆங்காங்கே அறுந்து தொங்குவதும், மாநகராட்சியின் கம்பங்களில் ஒழுங்குமுறையற்ற வகையில் கட்டப்பட்டிருப்பதையும் கவனித்தார்.

காலம் காலமாக இப்படித்தான் கேபிள்கள் கட்டப்பட்டு வருகின்றன என்றாலும், அதை கவனித்து நடவடிக்கை எடுத்த முதல் மேயர் சைதை துரைசாமி மட்டும் தான். இப்படி கட்டப்படும் கேபிள் வயர்கள் குறித்து ஆய்வுகள் நடத்தினார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து சாலைகள்  மற்றும்  உட்பற சாலைகளில்  கேபிள் டி.வி.,  இன்டர்நெட்  மற்றும் காப்பர் வயர்கள் மாநகராட்சிக்குச்  சொந்தமான  தெருவிளக்கு  கம்பங்களில் ஒழுங்கற்ற முறையில் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தன.  ஏர்டெல்,  டாடா டெலி சர்வீஸ், கல் கேபிள்ஸ், மைக்ரோநோவ் நிறுவனம், டாடா கம்யூனிகேஷன் மற்றும் ஏ.சி.டி. போன்ற ஓ.எப்.சி. நிறுவனங்கள், ஹாத்வே,  ஜே.ஏ.கே நிறுவனம், தமிழக கேபிள் டிவி நிறுவனம், அரசு கேபிள் டிவி நிறுவனம் என எக்கச்சக்க வயர்கள் மின் கம்பங்கள் வழியே சென்றன.

இது குறித்து ஆலோசனை நடத்தினார் மேயர் சைதை துரைசாமி. அப்போது தான் இந்த கேபிள் வயர்களுக்கு முறையான கணக்குவழக்கு எதுவுமே பராமரிக்கப்படவில்லை என்பதை அறிந்தார். அதோடு, கேபிள் கட்டுவதற்கு என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்த மாநகராட்சி கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதும், பல வருடங்களாக இந்த கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதும் மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. இவற்றைக் கவனிப்பதும், வசூல் செய்வதும் தங்கள் பணியில்லை என்பது போலவே அதிகாரிகள் அசட்டை காட்டினார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment