மாற்றப்பட்ட சாலை ஒப்பந்த விதிகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 217

உலக அளவில் சாலை விபத்து மரணங்கள் குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதிகரித்து வருவதாக ஐ.நா. பாதுகாப்பு  அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் தொழில்நுட்ப ரீதியாகவும், பாதுகாப்பாகவும் சாலைகள் அமைக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறது. மேலும், நம் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 53 விபத்துகளும் நாளொன்றுக்கு 462 உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. அதோடு உயிர் இழப்போரில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்றும் கூறியிருக்கிறது. ஆகவே, சாலைகள் பாதுகாப்பாகவும் தொலைநுட்பப் பார்வையுடனும் அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார் மேயர் சைதை துரைசாமி.

அதன் அடிப்படையில் கடந்த காலங்களில் சாலைகள் எப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன என்றும் பழைய ஃபைல்களில் ஆய்வுகள் செய்தார். பொதுவாக ஒரு சாலை அமைக்கப்பட்ட பிறகு, மூன்று ஆண்டு காலம் அந்த சாலை பராமரிப்புப் பணிகளை, அந்த ஒப்பந்ததாரரே செய்துதர வேண்டும் என்பதுதான் விதியாக இருந்துவந்தது. ஆனால், இந்த விதி மாற்றப்பட்டிருந்தது. அதாவது, ஓர் ஆண்டு காலம் மட்டும் ஒப்பந்ததாரர் சாலை பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டால் போதும் என்று மாற்றப்பட்டிருந்த காரணத்தாலே சென்னை நகரின் சாலைகள் பள்ளமும், மேடும் நிறைந்த சந்திர மண்டலம் போன்று காட்சி அளிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்.

ஆகவே, இந்த விதியை மாற்ற வேண்டிய அவசியம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு மேயர் சைதை துரைசாமி கொண்டுசென்றார். மேயர் என்ன செய்வது என்றாலும் மக்களின் நன்மைக்காகவே இருக்கும் என்பதால் உடனடியாக விதிகள் மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டார். அதன்படி மேயர் சைதை துரைசாமி காலத்தில் செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலும், ‘’சாலைகளில்  மூன்று ஆண்டுகளுக்குள்  பழுது ஏற்பட்டால்,  அதை ஒப்பந்ததாரர்  நிவர்த்தி செய்து தர வேண்டும்’’ என்ற விதி அழுத்தமாக எழுதப்பட்டது. இது மாநகராட்சி வரலாற்றில் மிக முக்கிய மாற்றங்களில் குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஆகும்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment