தொட்டாலே உடையும் எலும்புகள்
உலகம் முழுவதும் சமீபகாலமாக அதிக அளவில் மனிதர்களைத் தாக்கும் நோய் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்ற எலும்பு மெலிதல் நோய் அல்லது எலும்புப்புரை நோய். எலும்பு மெலிதல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக, வருடந்தோறும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ‘உலக எலும்பு மெலிதல் நோய்’ தினமாக அனுசரிக்கபடுகிறது.
இந்தியாவில் 50 வயதை கடந்த பெண்களில் 50% பேருக்கும் 30 வயதை கடந்த பெண்களில் 4ல் ஒருவருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இது அந்தப் பெண்களுக்கே தெரியாது என்பது தான் வேதனை. மாறிவரும் வாழ்க்கைச் சூழல் காரணமாக இன்னும் 10 ஆண்டுகளில் ஆண்களும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை செய்கிறது ஐ.நா. சுகாதார அமைப்பு
அதென்ன ஆஸ்டியோபோரோசிஸ்..?
எலும்பு என்றாலே கடினமானது என்ற நிலை மாறி மென்மையானதாக மாறுவதே ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புப்புரை நோய். எலும்புகள் மிகவும் பலவீனம் அடையும் என்பதால் லேசாக கீழே தடுமாறி விழுந்தால், கைகளைப் பலமாக ஊன்றி எழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படலாம். பொதுவாக மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் உண்டாகிறது.
என்ன காரணம்?
உடலில் வைட்டமின் டி நார்மல் லெவல் 30க்கு மேல் இருக்க வேண்டும். இதில் குறை ஏற்படுவது முக்கிய காரணமாக இருக்கிறது. 30 வயதுக்கு மேல் அனைவருக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் மற்றும் 40 வயதுக்கு மேல் உருவாகும் கால்சியம் குறைபாடு காரணமாகவும் இந்த நோய் உருவாகலாம். தண்டுவடம் மற்றும் இடுப்பு மூட்டுகளில் பாதிப்பு அதிகம் தென்படுகிறது.
புகை, மது, உடலுக்குத் தேவையான அளவு கால்சியம் எடுத்துக் கொள்ளதவர்கள், சூரிய ஒளி உடலில் படாமல் குளிர்சாதன வசதி அறைகளில் முடங்கிக் கிடப்பவர்கள், கர்ப்பிணிகளுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கு வாய்ப்பு அதிகம். குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால் பரம்பரை வழியாகவும் வரலாம்
40 வயதுக்கு மேல் அல்லது மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு படிப்படியாகக் குறைய ஆரம்பித்து ஒரு கட்டத்தில் நின்று போகிறது. அதனாலே பெண்கள் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு எளிதில் இலக்காகிறார்கள். வீட்டுக்குள் முடங்கியிருக்கும் பெண்களுக்கு வெயிலில் இருந்து வைட்டமின் டி கிடைப்பதில்லை என்பதாலும் பாதிப்பு வருகிறது.
குழந்தைக்குப் பால் கொடுக்கும் காலத்தில் பெண்களுக்கு கால்சியம் சத்து இருமடங்காகத் தேவைப்படும். இதை ஈடுகட்டும் அளவுக்கு கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் இந்த பாதிப்பு உருவாகலாம். ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களை விடக் குறைவு என்பதாலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அறிகுறிகள்
காரணம் இல்லாமல் உடல் வலி, மூட்டுவலி, எலும்புகளில் வலி, எளிதில் எலும்பு முறிவு போன்றவை இதற்கான அறிகுறிகளாக இருக்கின்றன. எலும்பின் அடர்த்தித் தன்மை அறிவதற்கு என ‘டெக்சா’ (DEXA) என்றொரு மருத்துவப் பரிசோதனை இருக்கிறது. டெக்சா பரிசோதனை முடிவில் ஒருவரின் எலும்பின் அடர்த்தித் தன்மை எவ்வளவு, வருங்காலத்தில் அவருக்கு ஆடியோபோரோசிஸ் நோய் வருமா எனக் கண்டறிய முடியும்.
தீர்வுகள்
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடையாது. ஆனால் வலியைக் குறைப்பதற்கு மருந்துகள் உள்ளன. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான உழைப்பு, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. எடைகளைத் தூக்கக் கூடாது. கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைத்த அளவு தினமும் உண்ண வேண்டும். தினமும் சூரிய ஒளி உடலில் படுமாறு 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
உணவில் கீரைகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறீர்களா என்பதைப் பரிசோதிக்கும் பி.எம்.ஐ மதிப்பில் 25 என்பதைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடையில் மட்டுமே இருக்க வேண்டும்.
குழந்தைப் பருவத்திலிருந்து முதுமை வரை பெண்கள் உடற்பயிற்சி செய்வதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் அதிகாலை 15 நிமிடங்கள் வெயிலில் இருப்பது நல்லது. 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்றால் சத்துக்கான மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். மது மற்றும் புகைப்பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். எலும்பின் திடத்தன்மையை அறிந்து கொள்ளும் பரிசோதனையை மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு தடவை செய்து கொள்ள வேண்டும்.