என்ன செய்தார் சைதை துரைசாமி – 249
தமிழகமெங்கும் வாடகை சைக்கிள் கடைகள் இயங்கிவந்ததை இன்றைய தலைமுறை இளைஞர்கள் அறிய மாட்டார்கள். எத்தனை மணி நேரத்துக்கு சைக்கிள் தேவைப்படுமோ, அத்தனை மணி நேரத்துக்கு மட்டும் கடையில் இருந்து சைக்கிளை எடுத்துச்சென்று வேலை முடிந்ததும் சைக்கிளை மீண்டும் ஒப்படைப்பார்கள். சைக்கிள் அவர்களிடம் இருந்த நேரத்துக்கு மட்டும் வாடகை கொடுப்பார்கள். இதன் அடிப்படையில் மேயர் சைதை துரைசாமி சைக்கிள் சேரிங் சிஸ்டம் கொண்டுவருகிறார் என்பது சென்னை மக்களுக்கு மிகுந்த வியப்பாக இருந்தது.
பெருநகர சென்னைக்கு முதல் கட்டமாக 3,000 சைக்கிள்கள் வாங்குவதற்கு மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டார். மேயரின் எண்ணத்திற்கு முதல்வர் ஜெயலலிதாவும் அனுமதி கொடுத்தார். அதன்படி, சென்னையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஐந்து நிறுவனங்கள் முன்வந்தன. இந்த நிறுவனங்கள் அனைத்துமே இந்தத் துறையில் ஏற்கெனவே அனுபவம் உள்ள வெளிநாடு அல்லது வெளிநாட்டுடன் கூட்டு வைத்துள்ள இந்திய நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் செயல்படுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.
உலகத்தரத்திற்கு இணையாக சுமார் 3000 நவீன இருசக்கர மிதிவண்டிகள் சென்னைக்குத் திட்டமிடப்பட்டன. அதற்கேற்ப சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 200 இடங்களில் தலா 10 முதல் 20 சைக்கிள்கள் வரை நிறுத்தும் வசதி கொண்ட தானியங்கி சைக்கிள் நிறுத்தங்கள் நிறுவ வேண்டும். இதற்கான இடங்களை சென்னை மாநகராட்சி ஒதுக்கித்தரும்.
இந்த தானியங்கி நிறுத்தங்களில் சைக்கிள்களை எடுத்து பயன்படுத்த அடையாளச் சீட்டு போன்று ஸ்மார்ட் கார்டு பயன்படுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. அதோடு, இந்தத் திட்டத்திற்கு தனியாக இணையதளம் உருவாக்கவும் 200 நிறுத்தங்களுக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் விரைவாக இருக்கும் வகையில் தொலைத்தொடர்பு சாதனங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டன.
- நாளை பார்க்கலாம்.