யார் அந்த சார் உண்மையோ உண்மை
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், ‘யார் அந்த சார்?’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதுடன் நில்லாமல் தமிழகம் முழுக்க போஸ்டர் ஒட்டி பரபரப்பு கிளப்பினார். அப்போது தி.மு.க.வினர், ‘’பொய்யான கேள்வி’’ என்று கண்டிப்பு காட்டினார்கள்.
ஆனால், அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி, சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையின் போது, ஞானசேகரனுக்கு அன்றிரவு சொல்போன் அழைப்பு வந்ததாக உறுதி செய்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.
கடந்த 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மற்றொரு மாணவியிடமும் ஞானசேகரன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர் மீது கொள்ளை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
ஞானசேகரனின் செல்போனை ஆய்வு செய்ததில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதில் மேலும் மூன்று மாணவிகள் வீடியோ அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவி அளித்த புகாரின் எஃப்ஐஆர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக மாணவி குறிப்பிட்டு இருந்தது மேலும் அதிர்ச்சியை கூட்டியது.
இதையடுத்து பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் யார் அந்த சார் என்பதை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்த விசாரித்தது. அப்போது பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த குழு தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தியது. அப்போது மாணவி ஞானசேகரன் செல்போனில் சார் ஒருவரிடம் பேசியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஞானசேகரனுக்கு அப்போது தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார். ஞானசேகரன் சார் ஒருவரிடம் பேசியதாக மாணவி உறுதி செய்திருப்பது பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது. முன்னதாக ஞானசேகரன், மாணவியை மிரட்டுவதற்காக செல்போனில் சார் ஒருவரிடம் பேசியது போல் நாடகமாடியதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மாணவி செல்போன் வந்ததை உறுதி செய்திருப்பதால், ‘அந்த சார்’ யார் என்பதையும் அவரை கைது செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
அப்படி யாரும் சார் இல்லை என்று சொன்ன போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும்.