10,000 மணி நேர தத்துவம்

Image

உங்கள் தனித்துவத்தைக் கண்டுபிடியுங்கள்.

வெற்றி அடைவதற்கு குறுக்கு வழிகள் கிடையாது, ஆனால் பல்வேறு சூத்திரங்கள் உண்டு. அதில் முதன்மையானது, தனித்தன்மை கண்டுபிடித்தல்.

இந்த உலகில் கோடானு கோடி மனிதர்கள் இருக்கிறார்கள். உடலும் உயிரும் எல்லோருக்கும் பொதுவானது. அதேநேரம், எல்லா மனிதரும் ஒன்றல்ல.  ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதத்தில் மாறுபட்டவர்கள். மனிதர்களின் உருவ அமைப்பு மட்டுமின்றி குணம், கொள்கை, ரசனை, ஆசை, எதிர்பார்ப்பு, லட்சியம் போன்றவை எல்லாமே வேறுபடுகிறது.

அதனால் தான் ஒருவருக்குப் பிடிக்கும் உடை வேறு ஒருவருக்குப் பிடிப்பதில்லை. ஒருவரைக் கவர்ந்த சினிமா வேறு ஒருவருக்கு மோசமாகத் தெரிகிறது. அத்தனை வகை மனிதர்களையும் திருப்திபடுத்தும் தேவை இருப்பதாலே ஐஸ் க்ரீம், சாக்லேட் போன்றவை ஏராளமான ஃப்ளேவர்களில் விதவிதமாக உருவாக்கப்படுகின்றன.

ஒருவருக்கொருவர் வேறுபாடு இருப்பது எத்தனை உண்மையோ அதே போன்று ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. தனித்தன்மை எது என்பதை ஒருவர் எத்தனை விரைவில் கண்டுபிடிக்கிறாரோ, அத்தனை விரைவில் வெற்றியைத் தொட்டுவிட முடியும். அப்படி என்னிடம் எந்த இல்லை என்று நிறைய பேர் மனம் வருந்துவதுண்டு. உண்மை என்னவென்றால், தனித்தன்மையைக் கண்டுபிடிக்க அவர்கள் முயற்சி எடுக்கவில்லை என்பது தான். எல்லோருக்கும் நிச்சயம் ஒரு தனித்தன்மை உண்டு.

தெருவுக்குத் தெரு டீ கடைகள் இருக்கின்றன. பெரும்பாலான கடைகளில் டீ மாஸ்டர்களின் செயல் ஒரே மாதிரி இருக்கும். ஆனால், ஒரு சிலர் மட்டும் வித்தியாசமாக, ஸ்டைலாக, டீ போடுவதைக் கண்டு வியந்திருப்பீர்கள். அந்த வித்தியாசமே அவரது தனித்தன்மை.

பொதுவாக யாரேனும் ஒருவர் ஒரு வேலையை 10 ஆயிரம் மணி நேரம் தொடர்ந்து செய்துவந்தால், அவர் அந்த வேலையில் தனித்திறன் பெற்றுவிடுகிறார் என்கிறது ஆய்வு. அதாவது ஒருவர் நாலைந்து ஆண்டுகள் ஒரே வேலையை செய்கிறார், அதுவும் ஆர்வமுடன் செயல்படுகிறார் என்றால், அந்த பணி அவருக்கு சுலபமாக கை கூடிவிடும். அந்த வேலையில் அவர் நிபுணத்துவம் பெற்று அவரது தனித்தன்மையாக மாறிவிடும்.  

10 ஆயிரம் மணி நேரம் வேலை செய்தும் ஒருவர் அதில் நிபுணத்துவம் பெறவில்லை என்றால், அது அவருக்குப் பிடிக்காத வேலை, கடமைக்காகப் பணியாற்றுகிறார் என்றே அர்த்தம். அந்த வேலையை உதறிவிட்டு மனதுக்குப் பிடித்த வேலை அல்லது தொழிலுக்கு மாறாத வரையிலும் அவருக்கு வெற்றி கிடைக்காது.

தனித்துவம் கண்டறிவதற்கு ஆர்வமும் கொஞ்சம் மெனக்கெடலும் இருந்தால் போதும். ஒருவர் 100 கிலோ எடையை எளிதாகத் தூக்குகிறார், மற்றவர் தடுமாறுகிறார் என்றால், முன்னவர் நிறைய பயிற்சி செய்திருக்கிறார் என்பதே காரணம். அந்த பயிற்சியே நிபுணத்துவம், தனித்தவம் கொண்டுவருகிறது. ஒரு குறிப்பிட்ட வேலை செய்கையில் பசி, தூக்கம் மறந்து ஈடுபடுகிறார் என்றால், அதுவே அவரது தனித்துவப் பணி.

தனித்துவம் எதுவென கண்டறிவது மட்டும் முக்கியமல்ல, அதில் தொடர்ந்து பயிற்சி பெற வேண்டும். புதிய புதிய தொழில்நுட்பங்களை அதில் சேர்க்க வேண்டும். கராத்தே கலையில் புரூஸ்லி புகழ் அடைந்தவுடன் நின்றுவிடவில்லை. அதன் பிறகும் தினமும் 6 மணி நேரம் பயிற்சிகள் எடுத்தார். குங்ஃபூ, மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியவற்றையும் கற்றுக்கொண்டு தன்னுடைய கலையில் அவற்றை புகுத்தினார். அதனாலே அவரது கராத்தே வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் ஜொலித்தது. மரணம் வரையிலும் அவர் புதுப்புது சண்டை முறைகளை கற்றுக்கொண்டே இருந்தார்.

அதே பாணியில் பிரபலமானவர் ஜாக்கிசான். அவரது தனித்தன்மையாக சண்டைக் காட்சிகளில் நகைச்சுவையைப் புகுத்தினார். ஆக்ரோஷமாக மட்டுமின்றி புத்திசாலித்தனத்துடனும் ஜாலியாகவும் சண்டை போட்டு ஜெயிக்க முடியும் என்று காட்டினார். ஜாக்கிசான் 60 வயது வரையிலும் தினமும் 8 மணி நேரம் பயிற்சிகள் எடுத்துக்கொண்டே இருந்தவர். எனவே, தனித்துவத்தைக் கண்டறிந்தால் மட்டும் போதாது. மேலும் மேலும் பயிற்சிகள் எடுத்து அந்த தனித்துவத்தை மெருகேற்ற வேண்டும்.

இந்த தனித்துவ தத்துவத்தை உறுதிபடுத்த மனோதத்துவ நிபுணர்கள் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் வயலின் வகுப்பு அறிமுகம் செய்தார்கள். அதாவது, ஒன்றாம் வகுப்பில் இருந்து எல்லா மாணவர்களும் தினமும் கண்டிப்பாக அரை மணி நேரம் வயலின் பயிற்சி எடுத்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அந்த பள்ளியில் படித்த எல்லோருக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டன. சுமார் 1,000 மாணவர்கள் படித்த அந்த பள்ளியில் 10ம் வகுப்பு முடிக்கையில் ஐந்து மாணவர்கள் மட்டும் வயலின் இசையில் நிபுணத்துவம் பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள்.

அவர்களுக்கு மட்டும் எப்படி நிபுணத்துவம் கிடைத்தது என்று ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் வீட்டிலும் வயலின் பிராக்டீஸ் செய்திருக்கிறார்கள். அதாவது இவர்கள் 5 பேரும் 10 ஆயிரம் மணி நேரத்தை விட அதிகமாக பயிற்சி எடுத்திருக்கிறார்கள், அதனாலே ஜெயித்திருக்கிறார்கள். ஆர்வமும், பயிற்சியும் அவர்களது தனித்தன்மையைக் கண்டறியவும் வெற்றியடையவும் வைத்திருக்கிறது.

வாழ்க்கையில் எதுவுமே சுலபமாகக் கிடைப்பதில்லை, அதேநேரம் தனித்துவம் பெற்றவர்களுக்கு எல்லாமே சுலபம்.

Leave a Comment