அரசியல்

அம்மா உணவகத்தை ரகசியமாக மூடுகிறார் ஸ்டாலின்..?

எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டு

அவ்வப்போது அம்மா உணவகத்தின் பக்கம் எட்டிப் பார்த்து, ‘சிறப்பாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறி வரும் நிலையில், ‘ரகசியமாக அம்மா உணவகத்திற்கு மூடு விழா நடத்தப்படுகிறது’ என்று எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவந்த விடியா திமுக அரசு, தொடர்ந்து நாங்கள் ஏழை, எளிய, தொழிலாளர்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களை மூடக்கூடாது என்றும், எங்கள் ஆட்சியில் வழங்கியதைப் போன்று தரமான உணவுகளை அம்மா உணவகங்களில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில், இன்று சென்னை ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடகச் செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அரசு பிரதிநிதிகள் தமிழகத்திற்கு வருகை தந்து அம்மா உணவகங்கள் இயங்குவதையும், தங்களது மாநிலங்களிலும், நாடுகளிலும் உடனடியாக அம்மா உணவகங்களை திறப்போம் என்று சொல்லி வரும் நிலையில், வெளி நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கும் விடியா திமுக முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிடவும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்…’’ என்று வலியுறுத்தியிருக்கிறார்.

சென்னை பெருவெள்ளத்திலும் கொரானோ காலத்திலும் மக்களைக் காப்பாற்றிய அம்மா உணவகத்தை மூடிவிடக் கூடாது என்பதே மக்களின் விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *