இளைஞர்களுக்கு ஸ்டாலின் தந்த வாக்குறுதி என்னாச்சு..?
அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சிகள்
வெளிநாடுகளில் இருந்து ஏகப்பட்ட முதலீடுகள் ஈர்த்துள்ளோம், ஏராளமான வேலை வாய்ப்பு வந்து சேரும் என்று கூறிவரும் ஸ்டாலின் குரூப் 4 தேர்வுக்கு குறைவான மாணவர்களை மட்டுமே தேர்வு செய்வதற்கு அறிவிப்பு செய்திருப்பது கடுமையான எதிர்ப்புகளை சம்பாதித்திருக்கிறது. அத்தனை எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்” என்றும் தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தொகுப்பில் 20000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான 6244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம் இத்தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், ‘’தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை. டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதித் தேர்வு இரு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான நான்காம் தொகுதி பணியாளர்கள் ஓய்வு பெற்று இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது வெறும் 7024 பணியிடங்களை மட்டும் நிரப்புவது நியாயமல்ல. ஒரு தேர்வை 16 லட்சம் பேர் எழுதுகிறார்கள் என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அரசு உயர்த்த வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
அடுத்து பா.ஜ.க.வும் இந்த விஷயத்தில் கடுமையான கண்டனம் செய்திருக்கிறது.