அரசுப் பள்ளிகளுக்குப் பொலிவூட்டும் நடவடிக்கை
என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 138
சைதை துரைசாமி மேயராகப் பதவியேற்ற நேரத்தில், சென்னை மாநகராட்சிக்கு கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இந்த பள்ளிகளில் ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 86 ஆயிரம் மாணவ, மாணவிகள் மட்டுமே பயின்று வந்தனர். இவற்றைத் தாண்டி மொத்தமே 30 மழலையர் பள்ளிகள் மட்டுமே இயங்கிவந்தன.
அரசு பள்ளிகளுக்கு இனி மதிப்பும் மரியாதையும் கிடைக்கவே செய்யாது என்ற எண்ணத்தில் பொதுமக்கள் இருந்த நேரத்தில் தான், மேயர் பொறுப்புக்கு வந்த சைதை துரைசாமி, ஒவ்வொரு மாநகராட்சிப் பள்ளிக்கும் நேரடியாகச் சென்று ஆய்வுகள் நடத்தினார். இந்த ஆய்வுகள், அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களிடம் நடத்திய ஆலோசனைகள் மூலம் மேயர் சைதை துரைசாமி பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்வந்தார்.
அரசுப் பள்ளி என்றதும் பலரும் முகம் சுளிப்பதற்கு, அந்தப் பள்ளியின் வெளிப்புற தோற்றம் முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதை அறிந்துகொண்டார். வெள்ளை அடிக்காமல் பொலிவிழந்து கிடக்கும் கட்டிடங்கள், உடைந்த நிலையில் இருக்கும் கதவு, ஜன்னல்கள் மற்றும் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் போன்றவையே அரசுப் பள்ளிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தன.
அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளை உடனடியாக மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும், அவற்றை பொலிவூட்ட முடியும் என்பதால் அதற்கான முயற்சியில் சைதை துரைசாமி இறங்கினார். மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதும் மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் சுண்ணாம்பு அடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார். புதிதாக மாணவர்கள் பள்ளிக்கு வரும் நேரத்தில் பள்ளி புதிதாக பளீச்சென இருக்க வேண்டும் என்பதற்காக ஆண்டு தோறும் வெள்ளை அடிக்கும் நடைமுறையைக் கொண்டுவந்தார். இதையடுத்து அரசு பள்ளிகள் புதிய சட்டை மாட்டிக்கொண்டது போல் பொலிவு அடைந்ததைக் கண்டு பொதுமக்கள் ஆச்சர்யமானார்கள்.
- நாளை பார்க்கலாம்