மகிழ்ச்சி

மின்சாரத்தை  மிச்சம்  பிடிப்போம்..!

பர்ஸுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது..

இந்த நாடு நமக்கு என்னென்னவோ தருகிறது. இந்த நாட்டுக்கு நாம் என்ன செய்கிறோம்? இப்படி ஒரு கேள்வி எழுப்பினால், என்னால் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்பதுதான் பெரும்பாலோர் பதிலாக இருக்கும்.

பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். பூமியை வாகனப் புகையால், சிகரெட் புகையால் அசுத்தம் செய்ய வேண்டாம். பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டாம். இன்றும் பலருக்கு போதுமான அளவுக்குக் கிடைக்காத தண்ணீர், மின்சாரம், காற்று போன்றவற்றை தேவையின்றி பயன்படுத்த வேண்டாம். இவற்றை செய்தாலே, நாட்டுக்கு நன்மை செய்தவராக மாறிவிடலாம்.

மிக முக்கியமாக மின்சாரக் கட்டணம் எகிறி வரும் நேரத்தில், மின்சாரத்தை எப்படி மிச்சப்படுத்துவது என்பதைப் பார்க்கலாம்..

வீட்டில் அதிக மின்சாரம் இழுப்பதில் முக்கிய இடம் வகிப்பது ஃபிரிட்ஜ். உங்களுக்கொரு விஷயம் தெரியுமா? நார்மல் ஃபிரிட்ஜின் ஆயுட் காலம் 15  வருடங்கள்தான். அதற்குப்பின் அதை இயக்க செலவிடும் தொகை ஃப்ரிட்ஜை வாங்கும்போது தந்த பணத்தை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். அதனால் சும்மா கிடைக்கிறதே என்றுகூட பழைய ஃப்ரிட்ஜை வாங்கி விடாதீர்கள். அதேபோல் அளவில் சிறிய ஃபிரிட்ஜிக்குத் தேவையான கரண்ட், அளவில் பெரிய ஃபிரிட்ஜிக்குத் தேவையான கரண்ட்டை விட குறைவுதான். எனவே உங்கள் குடும்பத்தின் தேவைக்கு ஏற்ற அளவில் ஃபிரிட்ஜை தேர்ந்தெடுத்தால் கரண்ட்டை மிச்சப்படுத்தலாம்.

* ஃபிரிட்ஜ் வாங்கும்போது, அதனுடைய ஃபிரீசர் ஃபிரிட்ஜின் பக்கவாட்டில் இருப்பதற்குப் பதில் மேலே அல்லது கீழே இருப்பது நல்லது. ஏனென்றால், பக்கவாட்டில் இருக்கும் ஃபிரீசர் 12% அதிகமாக கரண்ட்டை வீணடித்துவிடும்.  அதேபோல ஃபிரீசரில் ஐஸ்கட்டியோ ஃப்ரிட்ஜில் தண்ணீ­ரோ வைத்தாலும் கூட உங்கள் வீட்டு கரண்ட் பில் அதிகமாகும்.

* நீங்கள் புதிதாக ஃபிரிட்ஜ் வாங்கப் போகிறீர்கள் என்றால் விலை சற்றுக்கூடுதலாக இருந்தாலும் கூட 5 ஸ்டார் உள்ள ஃபிரிட்ஜ்களையே வாங்குங்கள். இது எடுத்துக்கொள்ளும் மின்சாரத்தின் அளவு குறைவு என்பதால், இதை வாங்கும்போது கொடுத்த விலையை வெறும் நாலே வருடத்தில் ஈடுகட்டிவிடலாம்.

* ஃபிரிட்ஜை சுவரில் இருந்து 30 செ.மீ தள்ளியும் வெப்பத்தை வெளியிடும் கருவிகளுக்கு அருகில் இல்லாதவாறும் பொருத்தப்பட வேண்டும்.  ஃப்ரிட்ஜில் நிறைவாக பொருட்கள் வைக்கப்பட வேண்டும். பொருட்களிடையே போதிய காற்றோட்டம் இருக்கும் வகையிலும் வைக்கப்பட வேண்டும்.

* எந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்த பின்புதான் ஃபிரிட்ஜின் கதவைத் திறந்திட வேண்டும்.  மிகவும் சூடான மற்றும் வெதுவெதுப்பான உணவுப் பொருட்களை அறையின் வெப்பநிலைக்குக் கொண்டுவந்து அவற்றை நன்கு மூடி ஃபிரிட்ஜூக்குள் வைத்திட வேண்டும். அவ்வாறு செய்யப்படுவதன் மூலம் மின்சக்தி குறைந்த அளவு பயன்படுத்தப்படுவதோடு அந்தப் பொருள் குளிரூட்டப்படும் நேரமும் குறைகிறது.

* ஃபிரிட்ஜ் கதவின் சீல் பிசிறின்றியும் இறுக்கமானதாகவும் இருக்க வேண்டும்.  ஃப்ரீசரின் உறைபனி அவ்வப்போது நீக்கப்பட வேண்டும்.  ஐஸ்கிரீம் மற்றும் ஐஸ் கட்டி தேவைப்படும் நேரங்களில் மட்டும் ஃபிரிட்ஜை அதிக குளிர்நிலையில் பயன்படுத்தப்பட வேண்டும். பிற சமயங்களில் குறைந்த அல்லது நடுத்தர குளிர்நிலையில் பயன்படுத்தினாலே போதும்.

* கேஸ் அடுப்பு, வெயில் படும் இடங்கள் போன்றவைகளில் ஃப்ரிட்ஜ் அருகில் இருக்கக் கூடாது.  உணவு பரிமாறும் இடத்தில் வைத்திடலாம்.

வாட்டர் ஹீட்டரில் மின்சக்தி சேமிப்பு:

* வெப்ப இழப்பினைத் தவிர்த்திட சுடுநீர் செல்லும் குழாய்களுக்கு குறிப்பாக குளிர்ந்த பகுதிகளில் செல்லும்போது தகுந்த வெப்ப பாதுகாப்பு உறை  போடப்பட வேண்டும்.  குளிப்பதற்காக சூடேற்றப்படும் நீரினை அளவுக்கு அதிகமாக சூடேற்றுவதற்கு பதிலாக மிதமாக சூடேற்றினால் கணிசமான அளவு மின்சக்தியினை சேமித்திடலாம்.சாதாரண ஹீட்டருக்குப் பதிலாக சூரியசக்தி வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தினால் இன்னும் செலவு மிச்சம்!

கம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிப்பு:

* பயன்பாடு இல்லையெனில் வீடு மற்றும் அலுவலக கம்ப்யூட்டர்களின் இயக்கத்தினை நிறுத்த வேண்டும். 24 மணி நேரம் ஒரு கம்ப்யூட்டர் இயங்கினால், அது ஒரு ஃபிரிட்ஜை விட அதிக மின்சக்தியை வீணடிக்கிறது.

* குறிப்பாக, கம்ப்யூட்டரின் மானிட்டரை தேவைக்குப்பின் நிறுத்த வேண்டும். ஏனெனில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின்சக்தியில் பாதி அளவினை அது செலவழிக்கிறது.  கம்ப்யூட்டரின் திரைகளை பாதுகாக்க மட்டுமே ஸ்கிரீன் சேவர்ஸ் பயன்படுகின்றன. அவை மின்சக்தியினை சேமித்திட உதவுவதில்லை.

ஏ.ஸி.யில் மின் சக்தி சேமிப்பு:

* கோடை வெப்பத்திலிருந்து விடுபட முதலில் சீலிங் ஃபேன் அல்லது டேபிள் ஃபேன் பயன்படுத்தலாம். ஃபேனை பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்திற்கு முப்பது பைசாக்கள் செலவாகும். ஏ.சி. பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய்.

* குறைந்த அளவு மட்டுமே சூரிய ஒளி உட்புகும் வகையில் ஏ.சி. அறை இருக்க வேண்டும்.  மின் செலவினைக் குறைத்திட 25 டிகிரி சென்டிகிரேடு அளவில் இருக்கலாம்.

* ஏ.சி. அறையில் மின் விசிறியையும் பயன்படுத்தும்போது, குளிர்ந்த காற்றோட்டம் அறை முழுவதும் ஏற்படுவதால் அறை முழுக்க குளிர்ச்சி தர குறைந்த மின்சாரத்தையே ஏ.சி. எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.

* ஒரு அறையை ஏ.சி. 30 நிமிடத்திற்குள் குளிர்ச்சியாக்கி பின் ஈரத்தன்மையற்றதாக்குகிறது. எனவே தகுந்த நேரக்கட்டுப்பாட்டுக் கருவியினை குளிர்சாதனப் பெட்டிக்கு அமைப்பதன் மூலம் அதன் மின்னோட்டத்தை சிறிது நேரத்திற்குத் தடை செய்து சேமித்திடலாம்.

* ஸ்டெபிலைசர், யு.பி.எஸ்., ஜெராக்ஸ் மிஷின், “இன்வர்டர்” போன்ற வெப்பத்தினை தரும் கருவிகள் ஏ.சி. அறைக்கு வெளியே நிறுவப்பட வேண்டும்.

* மின் அடுப்பு, காபி தயாரிக்கும் கருவி, வாட்டர் கூலர், ஃபிரிட்ஜ், இஸ்திரிப் பெட்டி போன்ற வெப்பத்தை வெளியிடும் மின் கருவிகளையும் ஏ.சி. செய்யப்பட்ட அறைகளில் பயன்படுத்தக் கூடாது.

* ஏ.சி. உள்ள அறையின் மேற்கூரை வெப்ப காப்பீடு அமைப்பு (மிஸீsuறீணீtமீ) செய்யப்பட வேண்டும்.  ஏ.சி. அறையின் ஜன்னல் வழியாக வெளிச்சம் வராதபடி சன் ஃபிலிம் மற்றும் விண்ட் ஷீல்டு போன்ற ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்!

* அறையின் மேற்கூரைக்கு அமைக்கப்படும் பொய்க்கூரை  மேற்கூரையிலிருந்து வெளிப்படும் வெப்பக் கதிர் வீச்சினை குறைப்பதோடு குளிரூட்டப்படும் அறையின் பரப்பளவையும் குறைத்திடுகிறது.

* குளிர்சாதனப் பெட்டியின் “கம்ப்ரஸரை” அறையின் வெளிப்பக்கம் குளிர்ச்சியான நிழல் படிந்துள்ள இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.  ஏ.ஸி. அறையை விட்டுச் செல்லும்போது அரை மணி நேரத்திற்கு முன்பாகவே  ஏ.ஸியை நிறுத்த வேண்டும்.   ஏனெனில், அறையின் குளிர்நிலை சிறிது நேரத்திற்கு மேல் நீடிக்கும் என்பதால் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுகின்றது.

* ஏ.சி.யை வடிகட்டும் அமைப்பு  மாதந்தோறும் சுத்தம் செய்யப்பட வேண்டும். அழுக்கடைந்த வடிகட்டும் அமைப்பு காற்றோட்டத்தினை குறைப்பதோடு ஏ.சி.யையும் பழுதாக்கிவிடும்.  பழுது பார்க்கப்பட வேண்டிய நிலையிலுள்ள ஏ.ஸி. மெஷின் குறைந்த அளவு திறனையே வழங்கும். தவிர அதிக செலவும் இழுத்துவிட்டுவிடும்.

மின் விளக்கு மூலம் மின்சக்தி சேமிப்பு:

* தேவையற்று எரிந்து கொண்டிருக்கும் லைட் மற்றும் மின் கருவிகளை நிறுத்துவதே மின் சேமிப்பில் சிறந்த வழி.  தூசிபடிந்த பல்புகள், ட்யூப் லைட்டுகள் குறைந்த அளவு வெளிச்சத்தையே வழங்குகின்றன.

* சாதாரண குமிழ் விளக்குகளுக்குப் பதிலாக கச்சிதமான சி.எஃப்.எல். விளக்குகளை பயன்படுத்துங்கள். உதாரணமாக ஒரு 15 வாட்ஸ் சி.எஃப்.எல். விளக்கு, 60 வாட்ஸ் குமிழ் விளக்கு வழங்கும் அதே அளவு ஒளியைத் தருகிறது.

* வழக்கமான அலுமினிய சோக்குகளுக்கு பதிலாக மின்னணு சோக்குகளைப் பயன்படுத்தலாம்.  வெளிச்சத்தை அதிகரித்துக்காட்ட வீட்டின் சுவர்களுக்கு லைட் கலரில் வண்ணம் பூசப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *