சக்சஸ்

ரஜினியால் முடியும் என்றால் உங்களால் முடியாதா..?

சிம்பிள் சக்சஸ் ஃபார்முலா

மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது காலை?  மனிதர்களையும்தான்.  நேற்றுவரை நீங்கள் எந்த நேரத்தில் காலையில் கண் விழிக்கிறீர்கள் என்பது பிரச்னை இல்லை. இனிமேல், கொஞ்சம் சீக்கிரமா எழுந்தரித்துப் பாருங்கள். இதுவரை உங்கள் பழக்கத்தில் இருந்து ஒரே ஒரு மணி நேரம் முன்கூட்டி எழுந்துகொள்ளுங்கள்.

பெரிய பதவியில் இருப்பவர்கள், பெரிய கோடீஸ்வரர்கள், புகழ் வாய்ந்த எல்லோருக்குமே இந்தப் பழக்கம் இருப்பது பொதுவானது.  இந்த நல்ல பழக்கமும் அவர்களின் வெற்றிக்கு ஒருவகையில் காரணம் என்றும் சொல்லலாம். 


இதற்காக வேறு எந்த பிரபலத்தையும் நீங்கள் தேட வேண்டாம். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். சூட்டிங் இருக்கும் நாட்கள் தவிர, இவருக்கு காலையில் சீக்கிரம் எழுந்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், தினமும் அதிகாலை 5 மணிக்கு கண் விழிக்கும் பழக்கம் உடையவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு உடற்பயிற்சியின் மீது பெரிதாக ஆர்வமும் விருப்பமும் கிடையாது. ஆனாலும், தினமும் காலையில் எழுந்ததும் தியானம் செய்வதையும், யோகா செய்வதையும் பழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். அதனால்தான், தன்னால் சகல விஷயங்களையும் சிந்தித்து செயலாற்ற முடிகிறது என்று சொல்கிறார்.

எல்லோரும் சூப்பர்ஸ்டார் ரஜினியாக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சீக்கிரம் எழுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். சீக்கிரம் எழுந்தால் அதிகாலையை போன்ற அமைதி உங்களிடமும் ஒட்டிக் கொள்ளும். வாகன இயக்கம், ரேடியோ, டி.வி. இரைச்சல், பக்கத்து வீடுகளின் கூச்சல், குழந்தைகளின் அழுகுரல் என்று எதுவும் உங்களுக்குத் தொந்தரவு செய்யாது. எங்கும் அமைதி நிலவ நீங்கள் நிம்மதியாக செயல்படலாம். அதிகாலையை போன்ற அருமையான பொழுதை வேறு எப்போதும் அனுபவிக்கவே முடியாது. அந்த வேளைதான் சிந்திக்க, செயல்பட, படிக்க, சுவாசிக்க என பலவற்றுக்கும் ஏற்றது.

காலையில் படுக்கையில் இருந்து துள்ளிக்குதித்து எழுந்திருங்கள். சோம்பேறித்தனமாக எழுந்தால் அன்றைய தினமே சோம்பலாகத்தான் இருக்கும். அவசரம் அவசரமாக வேலைகளை செய்ய வேண்டிவரும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படும். பிறகு அலுவலகத்திற்கு கிளம்ப தாமதம் ஆகும். இப்படி அடுக்கடுக்கான சிரமங்கள் தொடர, நிம்மதியே போய்விடும். சீக்கிரமாக எழுந்துவிட்டால் பாதி வேலையை சூரியன் உதிக்கும் முன்பே முடித்துவிட்டு நிதானமாக இருக்கலாம். இதனால் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் நாள் இறுதிவரை இன்பமாகவே தொடரும்.

காலையில் சீக்கிரம் எழுந்திருந்தால் காலை உணவை நிதானமாக சமைத்து ருசித்து சாப்பிடலாம். காலை உணவு, நலமான வாழ்வுக்கு தினமும் சாப்பிடும் உற்சாக டானிக் போன்றது. சுறுசுறுப்புக்கும் உதவும். சோம்பேறித்தனமாக படுத்திருந்து காலை உணவை சாப்பிடும் நேரத்திற்கு எழுந்திருந்தால், பணிக்குச் செல்லும் அவசரத்தில் உணவை தவிர்க்கும் சூழல் கூட வரும். இதனால் எரிச்சலும், சோம்பலும் ஒட்டிக் கொள்ளும். காலையில் எழுந்து ‘ஹாயாக’ அமர்ந்து டீ குடித்துக் கொண்டே பேப்பர் படித்துவிட்டு பரபரப்பில்லாமல் காலை உணவைச் சாப்பிட்டால் கிடைக்கும் சுகமே சுகம்.

தேகபயிற்சி செய்ய உகந்ததும் காலை பொழுதுதான். மற்ற நேரங்களைவிட அதிகாலை வேளைதான் உடற்பயிற்சிக்கு ஏற்ற வேளை. நலமாக வாழ்வதற்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று உடற்பயிற்சி. அதனால் கிடைக்கும் பலன்களும் பலபல. காலையில் உடற்பயிற்சி செய்வதை எந்தக் காரணத்திற்காகவும் நிறுத்தாதீர்கள். காலை வேளையிலேயே எழுதுவது, மெயில் பார்பது போன்ற சின்னச் சின்ன வேலைகளை செய்து முடித்தால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். அந்த நேரத்தை குடும்பத்தினருடன் ஜாலியாகக் கழிக்கலாம்.

உங்கள் லட்சியத் திட்டங்கள் பற்றி அதிகாலையில் சிந்தியுங்கள். அப்போது குழப்பங்களுக்குக் கூட தெளிவான வழி கிடைக்கும். எழுந்தவுடன் அன்று முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். உடனே லட்சிய பயணத்தை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும். ஒவ்வொரு வேலையையும் சரியாகச் செய்து முடிக்க வேண்டுமானால் அதற்கு காலையில் எழுவதுதான் சரியான செயல். ஒரு வேலையில் தாமதமானாலும் அடுத்தடுத்த தாமதங்கள் உங்கள் மதிப்பை குறைப்பதோடு, வேலைகளையும் முடக்கும்.

சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. காலையில் எழுந்திருக்கத்தான் முடியவில்லை என்கிறீர்களா? அது ஒன்றும் பெரிய காரியமில்லை. முதலில் சில நாட்கள் அலாரம் வைத்து எழுந்திருக்கலாம். அலாரத்தை படுக்கையில் வைத்தால் மனம் அணைத்துவிட்டு தூங்கத்தான் சொல்லும். எனவே எழுந்து சென்று நிறுத்தும் தொலைவில் அலாரத்தை வையுங்கள். இரவில் 2 டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு படுத்தால் காலையில் தானாகவே எழுந்திருப்பீர்கள். எழுந்தவுடன் மீண்டும் படுக்காமல் வேலை செய்யத் தொடங்கிவிட்டால் சோம்பல் ஓடியே போகும்.

எல்லாவற்றையும்விட அதிகாலையில் எங்கோ கூவும் குயில் சத்தமும், பால்காரர்களின் மணியோசையும், அந்த நேரத்தில் கிடைக்கும் சுத்தமான காற்றையும் அனுபவித்துப் பாருங்கள்… அற்புதமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *