ஸ்டாலினை மிரட்டும் திருமாவளவன்..?
மதுவிலக்கை சிறுத்தைகளே ஏத்துக்க மாட்டாங்க
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டுக்கு அ.தி.மு.க.வும் வரலாம் என்று அழைப்பு விடுத்திருக்கும் விவகாரம் அரசியல் சர்ச்சையாக மாறியிருக்கிறது. இது, தேர்தலில் சீட் அதிகம் கேட்கும் திருமாவளவனின் யுக்தி என்று கருதப்படுகிறது.
இது வரையிலும் திருமாவளவனுக்கு கூட்டணிக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. பா.ஜ.க. மற்றும் பா.ம.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி உறுதியாக இருந்த காரணத்தால் தி.மு.க.வுடன் இருக்கவேண்டிய சூழலுக்கு ஆளானார். ஆனால், இப்போது பா.ஜ.க. இல்லாத அ.தி.மு.க. இருக்கிறது. அதோடு விஜய்யும் அரசியல் களத்திற்கு வருகிறார்.
ஒன்றுக்கு இரண்டு ஆப்ஷன் இருக்கும் காரணத்தால், தி.மு.க.விடம் கூடுதல் சீட் கேட்டு நிர்ப்பந்தம் செய்வதற்காகவே மதுவிலக்கு விவகாரத்தை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திருமாவளவன் கையில் எடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், ‘’அரசியல் பகைவர்களைப் பழிவாங்க கஞ்சா வழக்குப் போடப்படுகிறதே ஒழிய, உண்மையாக கஞ்சாவைப் புழக்கத்திற்குள் கொண்டு வரும் மாபியா கும்பல் மீது நடவடிக்கை இல்லை… மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் போன்ற திட்டங்கள் டாஸ்மாக் வருமானத்தால் தான் செயல்படுத்தப்படுகிறது என்றால் அதை நிறுத்தினாலும் பரவாயில்லை மதுவிலக்கு கொண்டு வாருங்கள்’’ என்று திருமாவளவன் பேசியிருப்பது வேண்டுமென்றே சீண்டும் செயல் என்கிறார்கள்.
ஏனென்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 99 சதவீதம் பேர் குடிகாரர்களே இருக்கிறார்கள். முதலில் கட்சியை சுத்தப்படுத்திவிட்டு, நாட்டை சுத்தப்படுத்த வரட்டும் என்று தி.மு.க.வினர் கடுமையான எதிர்வினை ஆற்றுகிறார்கள்.
’’டாஸ்மாக் நிறுவன சீர்கேடுகளை ஒழுங்குபடுத்துவதும், முறையாக ரசீது வழங்குவதும், வழங்கப்படும் மதுவின் தரத்தை சரி செய்வதும்தான் தீர்வாக இருக்க முடியும். மாறாக முழு மதுவிலக்கு, மது ஒழிப்பு என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத முயற்சிகள்’’ என்று சாதாரண மக்கள் கருதுகிறார்கள்.