கவித்துவம்

நெகிழ வைக்கும் கவிதைகள்

வரிசை 2

சுருங்கச் சொல்லி மனதைத் தொடுவதே கவிதைகள். ஒரு சில கவிதைகளே காலத்தையும் வென்றவை. அப்படி சில கவிதைகள் இங்கே

கிளிகள்

’பேசும் பார் என்கிளி’ என்றான்
கூண்டைக் காட்டி.
வாலில்லை
வீசிப் பறக்கச் சிறகில்லை
வானம் கைப்பட வழியில்லை
’பேசும், இப்போது பேசும்’’ என
மீண்டும் மீண்டும் அவன் சொல்ல
’பறவையென்றால்
பறப்பதெனும்
பாடம் முதலில் படியென்றேன்’’

கூண்டுக் கிளியின்
காதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி எதற்கு
வந்தன சிறகுகள்?
–  கல்யாண்ஜி

கோணம்

நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுவதை
தலைகீழாக புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வௌவால்

  •  சல்மா

முளைத்தல்

கிளை இடுக்கில்

சுவரில்

தொட்டியில்

நிலத்தில்

இப்படி எங்கே விழுந்தாலும்

,முளைத்துக் கற்றுக் கொடுக்கின்றன

வாழ்க்கைத் தத்துவத்தை

விதைகள். 

  • பூர்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *