ஞானகுரு

கோழி தவம் செய்தால் என்ன வரம் கொடுப்பீர்கள்..?

இம்புட்டுத் தான் ஆன்மிகம்  

நெற்றி நிறைய திருநீறு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை, கைகளில் பக்தி புத்தகங்களுடன் வந்துசேர்ந்தார் பக்தர் ஒருவர். ‘’குருவே… நிறைய சொத்து, சுகம் எல்லா இருக்குது. அதனால், மாதத்தில் ஒரு வாரம் ஏதேனும் ஊருக்குப் போய், அங்கிருக்கும் கோயிலில் தஞ்சமடைந்து விடுகிறேன். இதுவரை எத்தனையோ கோயிலுக்குப் போய்விட்டேன். ஆனால், எங்கேயும் எனக்கு முழு திருப்தி கிடைக்கவில்லை. இங்கு கடவுள் இருக்கிறார் என்பதை உணரவும் முடியவில்லை. அவரை நான் எங்கே கண்டுபிடிப்பது?’’ சோகமாகக் கேட்டார்.

‘’கடவுளை நீ எங்கே தொலைத்தாயோ… அங்கே போய் தேடு’’ என்றார் ஞானகுரு.

‘’என்ன சொல்கிறீர்கள்… நான் எங்கே கடவுளை தொலைத்தேன்..’’

‘’தொலைந்த ஒரு பொருளைத்தான் தேட முடியும். நீ தொலைக்காத ஒன்றை எப்படி கண்டுபிடிப்பாய்..? கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று ஏதோ ஓர் உருவத்தை மனதில் நினைத்துக்கொண்டு தேடுவதால் ஏமாந்துபோகிறாய். கடவுள்   இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற  உன்னுடைய கற்பனையாலே உன்னால் கடவுளைக்  கண்டுபிடிக்க முடியவில்லை, இனியும் கண்டுபிடிக்க முடியாது’’

‘’அப்படியென்றால் கடவுளை எப்படி தேடுவது..?’’

‘’நீ எதற்காக கடவுளை தேடுகிறாய்..? அவர் ஏன் உனக்கு காட்சி தர வேண்டும்..?  உனக்கு கடவுளிடம் என்ன வேண்டும்..? நீ கடவுளை பார்த்தவுடன் என்ன கேட்கப் போகிறாய்? நீ கேட்பதை அவர் எதற்கு உனக்குத் தரவேண்டும்..? என்றெல்லாம் யோசித்துப் பார்த்திருக்கிறாயா..?

நீ வீட்டில் ஒரு கோழி வளர்க்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். அது, தினமும் உன்னை கடவுளாக நினைத்து பூஜை செய்கிறது, உன்னை நினைத்து தவம் செய்கிறது என்று நினைத்துக்கொள். நீ என்ன செய்வாய். அந்த கோழியையும் மற்ற கோழியையும் ஒன்றாகத் தான் பார்ப்பாய். அந்த கோழியை விற்பனை செய்வாய் அல்லது கொன்று தின்று விடுவாய். அவ்வளவு தான். அந்த கோழிக்கு உன்னால் விமோசனம் தர முடியாது. ஏனென்றால், ஒரு கோழியின் தேவையை உன்னால் ஒரு போதும் புரிந்துகொள்ள முடியாது. அப்படித் தான் இங்கே கடவுள் என்பவரின் நிலைமையும். கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் நிச்சயம் ரொம்பவே மேம்பட்டவராக இருப்பார் என்பதால், மனிதனின் உணர்வுகளை அவரால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது.

இதுவரை மனித இனம் உருவாக்கியிருக்கும் கடவுளைத்தான் உன்னால் தேட முடியும். அது ஒரு கற்பனை. அதனால்தான் இதுவரை யாரும் கடவுளை நேரில் தரிசனம் கண்டதில்லை. கண்டதாக யாரேனும் சொல்கிறார்கள் என்றால், அது பொய் என்றே அர்த்தம்.

எனவே, இந்த வாழ்க்கையில் மனிதரால் ஒருபோதும் கடவுளை அறிய முடியாது. அது தேவையும் இல்லை. ஏனென்றால், நீ தேடும் கடவுளால் உன் வாழ்க்கையில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவது இல்லை.  எந்த ஒரு மனிதருக்கும் கடவுள் தேடி வந்து உதவி செய்தது இல்லை, எந்த ஒரு மனிதரின் நோயையும் தீர்த்தது இல்லை, யாருடைய மரணத்தையும் நிறுத்தியதில்லை.

ஆகவே, கடவுளை விட வேறு எந்த விஷயத்தில் உங்கள் மனம் எதில் ஆனந்தம் கொள்கிறது, எது பாதுகாப்பு எண்ணம் கொடுக்கிறது, எது நிம்மதி தருகிறது என்று தேடிப் பாருங்கள். கடவுளை விட்டுத்தள்ளுங்கள், அவர் எப்படியாவது பிழைத்துப்போகட்டும்’’ என்றார் ஞானகுரு

‘’கடவுளை கண்டுப்பிடிக்கவோ, அறியவோ முடியாது எனும்போது எதற்காக இத்தனை கோயில்கள், உங்களைப் போன்ற வழிகாட்டிகள்’’ கேள்வியில் பெருத்த ஏமாற்றம் இருந்தது.

‘’எதையாவது கண்டுபிடிக்க முடியும் என்று தான் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படுகின்றன. எல்லா ஆய்வுக் கூடங்களும் எல்லாவற்றையும் கண்டுபிடித்து விடுவதில்லை. அப்படித்தான் கடவுளைப் பற்றிய ஆராய்ச்சி நடக்கிறது. இன்னமும் முடிவு கிடைக்கவில்லை’’ என்று சிரித்தார் ஞானகுரு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *