சிரிப்பு

சூப்பர் குட் குட்டிக் கதைகள்

ஜாலியா படிங்க… சிரிங்க

காசு குடுத்து வாங்கலாமா?

ஒரு பணக்காரரும் ஏழையும் சந்தித்துக் கொண்டார்கள்.​ பணக்காரரிடம் நூறு தங்கக் காசுகள் இருந்தன.​

‘’நான் இதில் உனக்கு இருபது காசுகள் கொடுத்தால் நீ என்னைப் புகழ்வாயா?” என்று கேட்டார் பணக்காரர்.

“அது எப்படி?​ எனக்கு நூற்றில் இருபதுதானே கொடுக்கிறீர்கள்?​ சமமாகப் பகிர்ந்து ​கொள்ளவில்லையே?” என்றான் ஏழை.

“சரி!​ ஆளுக்கு ஐம்பது என்று வைத்துக் கொள்ளுவோம்.”

“”சமநிலையில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் புகழுவதில்லை!”

“அப்படியானால் நூறு காசுகளையும் உமக்கே கொடுத்து விட்டால்?”

“அப்புறம் நான் உங்களைப் புகழ வேண்டிய அவசியமே இல்லை” என்றான் ஏழை.

ஏமாற்றம்!

-ஆஸ்திரேலியா நாட்டு பஞ்சவர்ணக் கிளியொன்றை வளர்த்தவன் திடீரென கம்பெனி வேலையாக ஆஸ்திரேலியா கிளம்பினான்.​ தான் வளர்த்துக் கொண்டிருந்த கிளியைப் பார்த்து, “உன்னுடைய சொந்த நாட்டுக்குப் போறேன்.​ உன் ஜோடிக் கிளிக்கு ஏதாவது தகவல் சொல்லணுமா?” என்றான்.

“நான் அழகான கூண்டில் அடைபட்டிருப்பதாகச் சொன்னால் போதும்..”என்றது கிளி.

ஆஸ்திரேலியா சென்றவன் வேலை முடிந்ததும் காட்டில் தேடி அலைந்து ஜோடிக் கிளியை கண்டுபிடித்து, சேதியைச் சொன்னான். அதைக் கேட்டதும் ஜோடிக்கிளி மயங்கி கீழே விழுந்தது.

திடுக்கிட்டவன் திரும்ப ஊருக்கு வந்து நடந்ததைச் சொன்னான்.​ அதைக் கேட்டு கூண்டுக் கிளியும் மயங்கி கீழே விழுந்தது.​ அவன் வருத்தத்துடன் கிளியை வெளியே வீசி எறிந்தான்.

சட்டெனக் கிளி எழுந்து பறந்தபடி சொன்னது,​ “என் ஜோடி கிளியும் சாகவில்லை.​ நான் தப்பிக்க உன் மூலமாக வழிமுறையைச் சொல்லி அனுப்பியது.​அவ்வளவுதான் நண்பா,​வரட்டுமா!” என்று கூறிச் சென்றது.

என் ஆசை மைனா

ஒரு சிறுவன் ஆசை ஆசையாக மைனா ஒன்று வளர்த்தான். உண்பதும் அதனோடுதான், உறங்குவதும் அதனோடுதான். படிக்கும்போதும் அதனோடுதான், விளையாடும்போதும் அதனோடுதான். அத்தனை ஆசையாக அன்பாக அதனோடு இருந்தான். பள்ளிக்குச் செல்லும்போது மட்டும் மைனா வீட்டில் இருக்கும் போலும்.

ஒருநாள் அவன் பள்ளி சென்றிருக்கும்பொழுது மைனா இறந்து விட்டது. அச்சிறுவனின் அம்மாவிற்கோ ஒரே கவலை, இந்த அதிர்ச்சியை மகன் எப்படித் தாங்கிக் கொள்ளப்போகிறான் என்று. மாலையில் பள்ளிவிட்டு வந்தவுடனேயே வாசலில் நிற்கவைத்து, “கண்ணா, உன் மைனா செத்துப் போயிடுச்சுடா” என்று சொன்னாள். சிறுவனும், “சரிம்மா நான் போய் விளையாடிட்டு வரேன்” என்று கிளம்பிவிட்டான். தாய்க்கோ ஒரே ஆச்சர்யம் மற்றும் சந்தோஷம். மகன் இதனை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்வான் என்று நினைக்கவேயில்லை.

விளையாடிவிட்டு வந்த சிறுவன் அம்மாவிடம் கேட்டான், “அம்மா, என் மைனா எங்கேம்மா?”

அம்மா, “என்னடா கண்ணா, சாயங்காலமே சொன்னேனே, மைனா செத்துப்போச்சுன்னு…?”

மகன், “அய்யோ அது நைனா-ன்னு நெனச்சேன்மா….” என்று அழுது ஊரையே கூட்டிவிட்டான்.

மூச், சத்தம் போடக்கூடாது.

ஊர் சுற்றிப் பார்க்க வந்த கிராமத்து தம்பதியினர் ஜெயிண்ட்வீல் ராடினத்தைப் பார்த்து அதிசயித்தனர். மனைவி அதில் ஏற ஆசைப்பட்டாள். ஆனால் பணம் அதிகம் என்பதால் வேண்டாமென்று தட்டிக் கழித்தான் கணவன். இதைப் பார்த்த ஜெயிண்ட் வீல் இயக்குபவன், “பரவாயில்லை. இலவசமாக இதில் சுற்றலாம். ஆனால் இடையே யாராவது கத்தினால் 100 ரூபாய் கொடுத்துவிட வேண்டும்” என்றான்.

தம்பதிகள் சம்மதித்தனர்.

ஜெயிண்ட் வீலை இயக்குபவன் வேண்டுமென்றே வேகமாகச் சுற்ற ஆரம்பித்தான். எவ்வளவு சுற்றியும் யாரும் கத்தவில்லை. வேறு வழியில்லாமல் சுற்றுவதை நிறுத்தினான். “”பரவாயில்லையே.. கத்தாமல் சமாளித்துவிட்டீர்களே?” என்றான்.

கணவன், “இடையில் ஒரு தரம் கத்தலாம் என்று நினைத்தேன். பிறகு கட்டுப்படுத்திக் கொண்டேன்” என்றான்.

“எப்போது?”

“என் மனைவி தவறி கீழே கூவத்தில் விழுந்தபோது” என்றான்.

வீண் பெருமை!

கோயில் கருவறையில் உள்ள கடவுளுக்கு அர்ச்சகர் ரோஜா மாலையைக் கழுத்தில் சார்த்தி தாமரை மலரைத் தலையிலும் வைத்து பூசை செய்தார். ரோஜாவுக்கும் தாமரைக்கும் கர்வம் ஏற்பட்டது. ரோஜாவைப் பார்த்து தாமரை சொன்னது.

“சேற்றில் முளைத்தாலும் இறைவன் தலை மீது அமர்ந்திருக்கிறேனே, நான்தான் பெரியவன்!” என்றது.

பதிலுக்கு ரோஜா சொன்னது, “முள்ளில் மலர்ந்தாலும் ஆண்டவன் கழுத்தில் மாலையாகத் தொங்குகிறேன். நான்தான் பெரியவன்!” என்றது.

மறுநாள் பூசை செய்ய வந்த அர்ச்சகர் எல்லா பூக்களையும் எடுத்து குப்பையில் போட்டார். “வீண் பெருமையால் பயனில்லை’ என்பதை மலர்கள் புரிந்து கொண்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *