அழகு

டீன் ஏஜ் வயதினருக்கு அழகு நோய்

எளிது எளிது தீர்வு எளிது

ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு நபருக்கும் சில பிரச்னைகள் ரொம்பவும் முக்கியமாகவும் பெரிதாகவும் தெரியும். அதற்காக ரொம்பவே கவலைப்படுவார்கள். பின்னர் நினைத்துப் பார்க்கும் நேரத்தில், இதற்காகவே இத்தனை கவலைப்பட்டோம் என்று தங்களைத் தாங்களே நொந்துகொள்வார்கள்.

அப்படியொரு பிரச்னையே, அழகு நோய்.

ஆம், இன்று டீன் வயதினருக்கு இருக்கும் மிகப்பெரும் கவலை அழகுக் குறை. தாங்கள் எத்தனை அழகாக இருந்தாலும் தங்கள் உடலில் ஏதேனும் ஒரு குறை இருப்பதாகவே நினைப்பார்கள். அதாவது, இன்னும் கொஞ்சம் உயரமாக வளர்ந்திருக்கலாம், இன்னும் கொஞ்சம் கலராக பிறந்திருக்கலாம், மூக்கு கொஞ்சம் நீளமாக இருக்கலாம், முடி கொஞ்சம் சுருட்டையாக இருக்கலாம், கன்னத்தில் சின்ன குழி விழிந்திருக்கலாம், பற்கள் சீராக இருக்கலாம், முகப்பரு வராமல் இருக்கலாம் என்றெல்லாம் யோசிப்பார்கள்.

இந்த அதீத யோசனை ஒரு கட்டத்தில் கவலையாக மாறி, வீட்டுக்குள் அடைந்துகிடக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையை இழந்துவிடுவதுண்டு. இதனால் படிப்பு, எதிர்காலம் போன்ற பல்வேறு பிரச்னைகளுடன் உடல்நலக் குறையும் உண்டாகி, நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

பருவ வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பெற்றோர் முன்கூட்டியே பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம். அதாவது சின்ன வயதிலிருந்தே இந்த மாற்றம் குறித்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக அழகு என்பதை விட ஆரோக்கியமும் தன்னம்பிக்கையும் முக்கியம் என்பதை மனதில் பதிய வைக்கும் அளவுக்குப் புரியவைக்க வேண்டும்.

உடல் அமைப்பு, நிறம் போன்றவை எல்லோருக்கும் தனித்துவமானவை. எல்லா உடலும் அழகு, எப்படியிருந்தாலும் அது அழகு என்பதை ஆழமாக விதைக்க வேண்டும். எல்லா மலரும் அழகு, எல்லா பறவையும் அழகு என்பது போல் எல்லா மனிதரும் ஒவ்வொரு வகையில் அழகானவர்களே. பிறரை ஒப்பிட்டுப் பார்ப்பது அசட்டுத்தனம் என்பதை முக்கியமாகப் புரிய வைக்க வேண்டும்.

தங்கள் அழகு குறித்து பிள்ளை அதிக கவலைப்படுவது தெரிந்தால், இது தொடர்பான புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து படிக்க வைத்தல், சரியான நபர்களை சந்திக்க வைத்து ஆலோசனை வழங்குதல் அவசியம். சரியான நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆலோசனை மிகுந்த நம்பிக்கை தருகிறது.

அதோடு, ஆரோக்கியமாக வாழ்வதே அழகு என்பதை அழுத்தம்திருத்தமாக சொல்லித்தர வேண்டும். ஏனென்றால், பெரும்பாலான நபர்கள் சினிமா கலைஞர்களையே அழகுக்கு இலக்கணமாக வைத்துக்கொள்கிறார்கள். ஆகவே, நடிகைகள் போன்று ஒல்லியாக, கவர்ச்சியாக இருப்பதையே அழகு என்று நினைக்கிறார்கள். நாயகன் ஓன்று உடம்பை வலிமையாக வைத்திருப்பதே அழகு என்று நினைக்கிறார்கள்.

இதற்காக தங்கள் உணவுப் பழக்கத்தை பிள்ளைகள் மாற்றி அமைக்கிறார்கள். நிறைய பிள்ளைகள் காலை உணவு, மதிய உணவு போன்றவற்றைத் தவிர்க்கிறார்கள். ஒல்லியாக இருப்பதே அழகு என்று நினைத்து உணவை ஒதுக்குவதால் ரத்தசோகை ஏற்பட்டு பல்வேறு அவயங்கள் பாதிக்கப்படுகிறது.

உயரமாக வளர்வதற்கு ஊட்டச்சத்து பானங்கள் குடிப்பதும், வெள்ளையாக மாறுவதற்கு பல்வேறு க்ரீம்களை வாங்கிக் குவிப்பதும் சரியில்லை என்பதை பிள்ளைகளுக்குத் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். ஊட்டச்சத்து பானங்களால் உயரமாக வளர முடியும் என்றால், இந்த உலகில் யாருமே குட்டையாக இருக்க மாட்டார்கள், அழகு க்ரீம் பயன்படும் என்றால் யாருமே கருப்பாக இருக்க மாட்டார்கள் என்பதை எல்லாம் சொல்லித்தந்து தெளிவுபடுத்த வேண்டும்.

அரிதாக சிலருக்கு டீன் வயதில் ஹார்மோன் குளறுபடி ஏற்படுவதற்கும், இதனால் உடல் பருமன் ஆவதும் முகத்தில் முடி, பருக்கள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்படுவதும் தொடர் கண்காணிப்பும் முக்கியம்.

இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி என்று கருதப்படும் தியாமின் சத்துக் குறைபாடு நிறைய டீன் வயதினரிடம் காணப்ப்படுகிறது. உடல் தேவையை விட குறைவான அளவில் உணவு எடுத்துக்கொண்டால் இரும்புச்சத்து, கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும். 

பொதுவாக மாதவிலக்கு சமயத்தில் பெண் பிள்ளைகளுக்கு இரும்புச்சத்தின் தேவை இரட்டிப்பாக உயரும். கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டால் வாழ்வின் பிற்பகுதியில் எலும்பின் வலிமை குறைந்துபோகும். அது, உடலின் எடையை தாங்க முடியாமல் பிரச்சினை ஏற்படலாம். எனவே உடலில், இரும்புச்சத்து, கால்சியம் போதிய அளவுக்கு இருக்கிறதா என்பதை அவ்வப்போது கண்காணிப்பது முக்கியம்.

டீன் ஏஜ் வயதினருக்கு வரும் நிறைய பிரச்னைகளுக்குக் காரணமாக இருப்பது அவர்களுடைய உணவுப் பழக்கமே. காலை உணவை தவிர்ப்பது, சிப்ஸ், இனிப்புகள், எண்ணெய் உணவுகள், பொரித்த உணவுகள், பாட்டில் குளிர்பானங்கள், சிகரெட், மது போன்றவை பிடித்தமானவையாக இருக்கும் அளவுக்கு காய்கறிகள், பழங்கள், தானியங்களை அதிகமாக சாப்பிடுவது இல்லை.

டீன் ஏஜ் பெண்கள் பல நேரங்களில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமுக ரீதியாகவும் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். இதற்கும் உணவு மூலமே தீர்வு காணப்பட வேண்டும். பொதுவாக மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ள காய்கறிகள் சத்தான உணவு என்ற அடிப்படையில் 5 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

1. கீரை மற்றும் பச்சை இலை காய்கறிகள்.
2. வேரில் விளையும் கேரட், பீட்ருட், முள்ளங்கி, வெங்காயம் போன்றவை
3. உருளைக் கிழங்கு போன்ற உணவுகள்.
4. நார்ச்சத்து மிகுந்த வெள்ளரி, கொத்தவரங்காய் போன்றவை
5. பீன்ஸ் போன்ற பயறு வகைகள்

இந்த ஐந்து வகை உணவுகளையும் டீன் வயதினர் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக புரோட்டின் நிறைந்த பயறுகள், பயறு காய்கள், அவரை வகைகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவத்தில் கறி, மீன் மற்றும் முட்டை என ஏதேனும் ஒன்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். சைவ உணவு உட்கொள்பவர்கள் என்றால் முந்திரி, பாதாம், அக்ரூட், நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால், உடலுக்குப் போதிய சத்துக்கள் கிடைக்கிறது. இதனால் மேனி பளபளப்பு கிடைப்பதுடன் சுறுசுறுப்பும் நம்பிக்கையும் கூடுதலாக அழகும் கிடைக்கிறது. அதோடு தினமும் போதிய தண்ணீர் குடிக்கும் பழக்கமும் போதிய அளவுக்குத் தூக்கமும் அவசியம்.

உணவு, தண்ணீர், தூக்கம் ஆகியவற்றுடன் உடற்பயிற்சிகளும் ஒன்றிணையும்போது அந்த உடல் இயற்கையாகவே அழகுடன் மின்னத் தொடங்கும். இந்த அடிப்படையை டீன் வயதிலே புரிந்துகொண்டால், அவர்கள் தேவையில்லாமல் தாழ்வு மனப்பான்மையில் தவிக்க மாட்டார்கள்.

நோய் உருவாகக் காரணமாக இருக்கும் பிரச்னைகளை உணவு மூலமே தீர்க்கும் கலையை டீன் வயதிலேயே கற்றுக்கொள்வதே அழகுக் கலையின் முதல் பாடம். இதனை முறையாகப் பின்பற்றினால் அழகுநிலையம் செல்வதற்கு அவசியம் இல்லை.

அழகு இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. இயற்கையே அழகு. அழகு தான் இயற்கை என்பதை ஒவ்வொரு டீன் வயதினருக்கும் சொல்லிக்கொடுங்கள். அவர்கள் அழகாக மாறிவிடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *