ஆகாயத் தாமரை அழிப்புக்கு நவீன யுக்தி
என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 96
பெருநகர சென்னை நீர்நிலைகளில் படர்ந்து வளர்ந்திருக்கும் ஆகாயத் தாமரைகளை முழுமையாக அகற்றினால் மட்டுமே கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. எனவே, ஆகாயத் தாமரை குறித்து தொடர்ந்து பல ஆய்வுகளும் ஆலோசனைகளும் நடத்தினார்.
அசுத்தமான நீர் நிலைகளிலே ஆகாயத் தாமரை அதிகம் வளர்வது தெரியவந்தது. ஆகவே, முதல் கட்டமாக சுகாதாரமான நீர் நிலைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கை எடுத்தார். அதன்படி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் சுகாதாரமான நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கும் வகையில், நீர் சுத்திகரித்து அனுப்பப்பட்டது. இதன்மூலம் சுகாதாரமான நீரில் ஆகாயத்தாமரை வளராமல் ஆரம்ப கட்டத்தில் தடுக்கப்பட்டது.
பார்த்தீனியம் செடி போன்று ஆகாயத் தாமரையை எளிதில் அழித்துவிட முடியாது என்ற உண்மை சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. தரையில் வளரும் பார்த்தீனியம் செடியை சில மனிதர்கள் ஒன்று சேர்ந்து பணியாற்றினாலே அழித்துவிட முடியும். மேற்கொண்டு வளராமல் தடுத்துவிடவும் முடியும். ஆனால், ஆகாயத் தாமரையை மனித சக்தி கொண்டு அகற்றுவது முழு பயன் அளிப்பதில்லை என்பதை உணர்ந்தார்.
மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வரும் முன்பு மனிதர்களைக் கொண்டு ஆகாயத் தாமரையை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதும், அதற்காக கோடிகளில் பணம் செலவழிக்கப்பட்டதையும் அறிந்தார். கோடிகளில் பணம் செலவழித்தும் ஆகாயத் தாமரை ஒழிப்புக்குரிய ரிசல்ட் கிடைக்கவில்லை என்பது புரிந்தது. எனவே, கடமைக்காக வழக்கம்போல் ஆகாயத் தாமரையை அழிப்பதற்கு மனிதர்களை பயன்படுத்தாமல், நவீன இயந்திரங்களைப் பயன்படுத்த முடியுமா என்று தேடத் தொடங்கினார்.
- நாளை பார்க்கலாம்.