மருத்துவர்கள்

காதுக்குள் அலை ஓசை, விசில் சத்தம் கேட்கிறதா..?

எச்சரிக்கிறார் டாக்டர் எம்.என்.சங்கர்.

காது, மூக்கு, தொண்டை நிபுணரான டாக்டர் எம்.என்.சங்கர் அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இத்துறையில் கால் நூற்றாண்டு காலம் கடந்த அனுபவம் பெற்ற டாக்டர் சங்கர் தற்போது சென்னை அடையாறு போர்டிஸ் மலர் மருத்துவமனையில் சேவையாற்றுகிறார். அவரிடம் பேசினோம்.

கேள்வி : மருத்துவத்தில் காது, மூக்கு, தொண்டையை ஒரு தொகுதியாக இணைத்திருப்பது ஏன்..?

டாக்டர் : சுமார் 150 வருடங்களுக்கு முன்பு கண், காது, மூக்கு, தொண்டை எல்லாம் ஒரே மருத்துவர் தான் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு தான் கண்ணைத் தனியாகப் பிரித்துக் கொண்டு போனார்கள். காது, மூக்கு, தொண்டை சார்ந்த பிரச்சினைகள் ஒன்றுக்கொன்று சுலபமாகப் பரவக்கூடியதாக இருப்பதால் அவற்றை ஒன்றாகக் கருதுகிறோம். கண்கள் அருகில் இருந்தாலும், அது வேறு விதமான இயல்புகளும் செயல்பாடுகளும் கொண்டது.

இப்போது இவை மூன்றும் ஒன்றாக இருக்கக் காரணம் இவை எல்லாம் உருவாக்கக்கூடிய foregut எனப்படும் திசு ஒரே தன்மையில் இருப்பதால்தான். மூக்கில் ஏதாவது பிரச்சினை இருந்தால் காது வலிக்கும். சளி அதிகமாகப் பிடித்திருந்தால் தொண்டை வலிக்கும் ,காது வலிக்கும். அதனால்தான் ஒன்றாக வைத்திருக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால் நுரையீரல் வரையிலும் நாங்கள் தான் பார்த்துக் கொண்டிருந்தோம் .இப்போதும் நாங்கள் தான் பார்க்கிறோம். அதே போல் உணவுக் குழாயில் ஏதாவது அடைத்திருந்தாலும் எங்களிடம் தான் வருவார்கள். அதற்கான ஸ்பெஷலிஸ்ட்கள் இருந்தாலும் நாங்கள் தான் எடுப்போம். அதற்கான கருவிகள் அதற்கான பயிற்சியும் அனுபவமும் எங்களிடம் தான் உள்ளன.

கேள்வி : இந்த மூன்றில் எது எதன் மீது  ஆதிக்கம் செலுத்துகிறது?

டாக்டர் : மூக்குதான் பிரதானம். அதிலிருந்தே மற்றவற்றிற்குத் தாக்கம் ஏற்படும். நம் உடலில் இயற்கையான துவாரங்கள் என்று எடுத்துக் கொண்டால் தொண்டை அதாவது வாய், மூக்கு, ஆசனவாய், பிறப்புறுப்பு போன்றவை தான். காதுகள் மூடப்பட்டுள்ளன. அதாவது காதுக்குள் இருக்கும் செவிப்பறை அடைபட்டு உள்ளதால் அதற்குள் நோய்வர வாய்ப்பே இல்லை .மூக்கு, தொண்டை தான் முக்கியமான துவாரங்கள். மூக்கு வழியாக வந்தால் தொண்டைக்குப் போகலாம். காதுக்கும் போகலாம் தொண்டை வழியாக வந்தால் வயிற்றுக்கும் காதுக்கும் போகலாம். எனவே இதன் வழியாகத்தான் வியாதிகள் உள்ளே வருகின்றன. மிகவும் அரிதாக தோல் வழியாக வரலாம். மூக்கையும் தொண்டையையும் பாதுகாத்துக் கொண்டாலே அனேக நோய்கள் வராமல் தடுக்கலாம்.

கேள்வி : காது, மூக்கு, தொண்டையில் பொதுவாக வரும் பிரச்சினைகள் என்ன?

டாக்டர் : சாதாரணப் பிரச்சினை என்றால் அது சளித்தொல்லைதான். இப்போது எங்களிடம் வருவதில் சளித்தொல்லைகள் மூக்கு சார்ந்த பிரச்சினைகள் தான் 70% வருகின்றன. 20% தொண்டை சார்ந்தும், 10% காது சார்ந்தும்  பிரச்சினைகள் வருகின்றன.

சளித்தொல்லைகளுக்கு முக்கியக் காரணம் ஏசி. காரில் ஏசி ,வீட்டுக்குள் ஏசி என்று இருப்பவர்களுக்கு சின்ன வெயிலைக் கூட தாங்க முடியவில்லை. நம் நாடு பாலைவனம் கிடையாது. இப்படி எல்லாவற்றுக்கும் ஏசி என்பதைக் குறைத்துக் கொண்டால் இந்தப் பிரச்சினை எல்லாம் வராது

எப்போதும் வசதியான சௌகரியமான சூழலில் நம் உடம்பை வைத்திருந்தால் அசெளகரியமான சூழலில் அது வேலை செய்யாது. வீடு கட்டும் தொழிலாளர்கள் தூசு, மண், புழுதி என்ற சூழலில் இருந்தாலும், அவர்களுக்கு இருமல், தும்மல் வருவதில்லை. எந்த ஒவ்வாமையும் வருவதில்லை. ஏனென்றால் அவர்களது உடம்பு அதற்கு ஒத்துப் போகிறது.

மனித உடம்புக்கு சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் குணம் இருக்கிறது. ஆனால் நம் வசதிகளால் அதை அழித்து, ஒவ்வாமையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். முன்பெல்லாம் சின்ன வயதில் சாலையில் ஓடுவார்கள், மரத்தில் தாவி ஏறுவார்கள் ,மைதானத்தில் ஓடியாடி விளையாடுவார்கள். இப்போது பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே போவதில்லை. அதனால் புறச் சூழலில் என்ன இருக்கிறது என்று உடலுக்குத் தெரியாமல் இருப்பதாலே வெளியே சின்ன தூசு பட்டாலும்  ஒவ்வாமை வந்து விடுகிறது.

இதற்குத் தீர்வாக மேலை நாடுகளில், பத்து வயது வரை பிள்ளைகளை வெளியே விளையாடச் சொல்கிறார்கள். சேறு, மண், புழுதியில் விளையாடட்டும். அப்போது தான் அவர்கள் உடலுக்கு எதிர்ப்பு சக்தி வரும், ஒவ்வாமை வராது என்றும் வலியுறுத்துகிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒவ்வாமை பிரச்சினை வந்ததில்லை. இப்போது பிள்ளைகளை வெளியில் விடுவதில்லை, வெயிலில் காட்டுவதில்லை என்பதாலே வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படுகிறது..

அண்மைக் காலமாக காது சார்ந்த பிரச்சினைகள் அதிகமாகி வருகின்றன. ஏனென்றால் செல்போன் பயன்பாடு ஹெட்போன் போன்றவற்றால் பிரச்சினைகள் வருகின்றன. எப்போதும் காதில் மாட்டிக் கொண்டு ஏதாவது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் .காதுக்கு நிறைய வேலை கொடுப்பதால் இன்னும் 10 ஆண்டுகளில் காது கேளாதவர்கள் சதவீதம் அதிகமாகிவிடும் அபாயம் உள்ளது.

கேள்வி : பருவ காலம் (Seasonal) தொடர்பான பிரச்சினைகள் என்ன?

டாக்டர் : கோடைக்காலத்தில் நிறைய பேர் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்கள். தொண்டையில் உள்ள டான்சில் என்று உறுப்பில் நோய்த் தொற்று ஏற்பட்டு சளித்தொல்லை உருவாகும். கோடைக்காலம் ஏசி பயன்படுத்துவதாலும் சளித் தொல்லைகள் வரும். ஏசி அறையில் 20 டிகிரி வெப்பத்தில் இருந்து விட்டு, வெளியே 30 டிகிரி என்று வரும்போது உடல் சமநிலை இழப்பதால் அதனால் பிரச்சினை வரும். இடைப்பட்ட அந்த வெப்பத்தை நம் உடம்பு தாங்காது.அதனால அதனால் பிரச்சினை வருவதுண்டு. கோடைக்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதனாலும் சளித்தொல்லைகள் வரும்.

சுற்றுச்சூழல் உலர்வாக இருப்பதால் தூசு அதிகம் பரவி ஒவ்வாமை ஏற்பட்டுச் சுவாசக் கோளாறுகள், அது சார்ந்த பிரச்சினைகள் வரும். காது, மூக்கு, தொண்டையில் ஒவ்வாமையில் அதிகம் பாதிக்கப்படுவது மூக்கு தான். தொண்டையிலும் வருவதுண்டு என்றாலும், அதற்குக் காரணமாக இருப்பது பெரும்பாலும் உணவுதான். காய்கறிகளில் கத்தரிக்காய், தக்காளியும் மீன் வகைகளில் நண்டு, இறால் போன்றவை ஒவ்வாமை தரக்கூடியவை.

கேள்வி : ஆசிட் ரிப்ளக்ஸ் எனப்படும் நெஞ்செரிச்சல் தொண்டையைப் பாதிக்குமா?

டாக்டர் : இப்போது பொது மக்களிடம் பரவலாக காணக்கூடிய ஒரு பிரச்சினையாக  நெஞ்செரிச்சல் இருக்கிறது. முன்பெல்லாம் வீட்டில் தான் பெரும்பாலும் சாப்பிடுவார்கள் .இப்போது வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக வெளியில் சாப்பிடுவது என்கிற போக்கு அதிகரித்துள்ளது. அங்கே சரியான பொருள்களைச் சாப்பிடுவதும் கிடையாது.

மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களால் பிரச்சினைகள் வரும். பெரிய ஓட்டலில் இருந்து சின்ன ஓட்டலுக்குப் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்கள் வருகின்றன. ஒரு கிலோ எண்ணெய் 200 கிராமாக சுண்டிப் போகிற வரைக்கும் பயன்படுத்துகிறார்கள். எண்ணெய் சுண்டிய பிறகு அதில் உள்ள புரதச்சத்து எல்லாம் போய் வெறும் கொழுப்பு மட்டுமே உள்ளது. இதைத்தான் மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக உணவில் ருசிக்காகவும் வாசனைக்காகவும் தேவையற்ற செயற்கை  நிறமூட்டிகள், மணமூட்டிகளை சேர்க்கிறார்கள். இதுவும் வயிற்றுக்கு ஆபத்து. அதிக காரம், நேரம் கெட்ட நேரங்களில் சாப்பிடுவது, சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் வேலை செய்வதும் ஆபத்து. நள்ளிரவில் 12 மணிக்கு பிரியாணி, அதிகாலை 3 மணிக்கும் பிரியாணி சாப்பிடுகிறார்கள். நாம் காலம் காலமாக காலை, மதியம் ,இரவு என்று மூன்று வேளை மட்டும் சாப்பிட்ட  பழக்கம் மாறிவிட்டது. இவற்றோடு மன உளைச்சலும் ஒரு காரணமாகிறது. இதெல்லாம் நல்லதல்ல

கேள்வி : காது இரைச்சல் பொதுவான பிரச்சினையா?

டாக்டர் : நூறு பேரில் 10 பேருக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. சிலர் இதை கண்டுகொள்வதே இல்லை, சிலர் சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்கள்.  சிலருக்கு இரவில் அது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஏனென்றால் அமைதியாக இருக்கும் போது தான் அப்படி காதில் சத்தம் வருகிறது. சிலருக்கு அலையின் ஓசை, சிலருக்கு விசில் அடிப்பது போல் கேட்கும் .சிலருக்கு ரத்த நாளங்கள் துடிப்பது போல் கேட்கும். இதையே நினைத்துக் கொண்டிருந்தால் மன உளைச்சல் வரும். எனவே இவர்களை கருணையோடு அணுகியே காரணத்தை அறிய முடியும்.

கேள்வி : கண் மங்குவது போல் காதின் திறன் மங்குமா?

டாக்டர் : நிச்சயமாக செவித்திறனும் குறையும். பொதுவாக முதுமையின் காரணமாக கண் பார்வை மங்குவது போல் செவித்திறனும் குறைய ஆரம்பிக்கும். ஆனால் இப்போதெல்லாம் சிறு வயதிலேயே இந்த பிரச்சினை வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் செல்போன். சிலர் தினமும் 5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை செல்போன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த குறையைக் கண்டறிவதற்கு ஆண்டு தோறும் உடம்பை சோதனை செய்து கொள்வது போல் செவித்திறனையும் சோதனை செய்துகொள்ள வேண்டும். செல்போனை காதில் வைத்து பேசுவதைத் தவிர்த்து ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்த வேண்டும் .அதுவும் பிரச்சினை என்றால் ஸ்பீக்கர் வைத்து பேச வேண்டும்.

செல்போன் மூலம் வருகிற கதிர்வீச்சினால் காது நரம்புகளில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றாலும், இது முறையாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஏனென்றால் செல்போன் பயன்பாடு இந்த பத்து ஆண்டுகளில் தான் அதிகமாக இருக்கிறது. போகப்போகத்தான் அது பற்றிய விளைவுகளைச் சரியாகக் கணிக்க முடியும். சிலருக்குக் காது சூடாகிறது. காதில் தோல் பிரச்சினை வருகிறது. மன அழுத்தம் வருகிறது. ரத்த அழுத்தம் கோபம் வந்து செயல்பாடுகள் மாறிப்போகிறது. வாகனங்கள் ஓட்டும் போது கவனக்குறைவால் ஆபத்தான சூழல் வருகிறது. ஓட்டுனர்கள் செல்போன் பேசுவதால் பயணிகளுக்கும் ஆபத்து வருகிறது.

கேள்வி : ஒருவருக்கு செவித்திறன் குறையக் காரணம் என்ன?

டாக்டர் : செவிக்குச் செல்லும் ரத்தநாளம் தலை முடியை விட மெல்லியது. பொதுவாக வயதாகும்போது ரத்த ஓட்டம் குறைவதால் திறன் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள் மற்றும் வலிபோக்கும் மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு செவித்திறன் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே மருத்துவரிடம் பரிசோதனை செய்து அதற்குரிய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

கேள்வி : வாய் துர்நாற்றம் தவிர்க்கக்கூடியதா? வேறு ஏதாவது நோயின் அறிகுறியா?

டாக்டர் : வாய் துர்நாற்றத்துக்கு முக்கிய காரணம் வயிற்றுப் பிரச்சினை தான். இது வாய் பிரச்சினை அல்ல. சரியான நேரத்தில் சாப்பிடாததால் ரிப்ளெக்ஸ் நிறைய பேருக்கு வருகிறது. பல் சொத்தை, பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். மூன்றாவது தொண்டை டான்சிலில் நீர் கோர்த்திருந்தாலும் துர்நாற்றம் வரும். சில மாதங்களில் கட்டுப்படாத துர்நாற்றம் இருந்தால் அது புற்றுநோய் அறிகுறியாகவும் இருக்கலாம்.

கேள்வி : காதுக்குள் இரைச்சல் வருவது ஏன்? மன நோயாளிகளுக்கு இரைச்சல் வருவதாக உணரும்போது உண்மையில் காதில் பாதிப்பு ஏற்பட்டு இருக்குமா?

டாக்டர் : இது ஒரு சிக்கலான கேள்வி. மனநோயாளிகளுக்கு காதில் இரைச்சல் வருவதற்கு டிஷோபேனியா என்ற பெயர். மது அடிமையாக இருக்கும் மன நோயாளிகளுக்கு காதில் இரைச்சல் வருவது போல், யாரோ பேசுவது போல் இருக்கும். இதையே மனநோயாளிகள், ‘என்னிடம் யாரோ பேசுகிறார்கள் என்னை ஏதோ செய்யச் சொல்கிறார்கள்’ என்பார்கள். அப்படிப்பட்ட மன நோயாளிகள் கொலை கூட செய்வார்கள்.

குடிகாரர்கள் மது அருந்துபவர்களுக்கும் இந்த ஆடிட்டரி ஃபேக் வருவதுண்டு. சாதாரண நோயாளிகளுக்கு காதில் இப்படி இரைச்சல் வருவதற்குக் காரணம் காது நரம்பு பாதிப்பாக இருக்கலாம். நரம்பு பலவீனத்தால் அதன் சக்தி குறையும் போது இரைச்சல் வருவதற்கு வாய்ப்பு உண்டு. சில இரைச்சல் அவர்களுக்கு மட்டும் . கேட்கும். சில நேரத்தில் பரிசோதிக்கிற டாக்டருக்கும் கேட்கும.

டாக்டருக்கும் கேட்கும் பிரச்சினை என்றால் அது அனேகமாக ரத்த நாளத்தினால் வருவது. எனவே, அறுவை சிகிச்சையால் அதைச் சரி செய்ய முடியும். நோயாளிக்கு மட்டும் தான் கேட்கிறது என்றால் அது வேறு விதமான பிரச்சினை, மனப்பாதிப்பு. குறிப்பாகத் தனிமையில் அமைதியில்தான் இந்த இரைச்சல் கேட்கும் என்பது தான் பெரிய பிரச்சினையாக இருக்கும்.

கேள்வி : காது கருவிகள் எந்த அளவிற்குப் பலன் தருகின்றன?

டாக்டர் : காது கருவிகளின் தரம் முன்பை விட இப்போது நன்றாக மேம்பட்டு இருக்கிறது. முன்பு மைக் போல இருக்கும் அளவில் பெரிதாக இருக்கும். இப்போது டிஜிட்டல் மேம்பாடு அடைந்துள்ளது. மனிதர்கள் பேசும் ஒலியை மட்டும் வடிகட்டி பிரித்துக் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டது. அதனால், நாய் குரைக்கும் சத்தமோ லாரி ஓடும் சத்தமோ அதில் குறைவாகக் கேட்கும். மனிதர்கள் பேசுவது மட்டும் தெளிவாகக் கேட்கும்.

கேள்வி : ஹெட் போன் பயன்படுத்துவது செவித்திறனைப் பாதிக்குமா?

டாக்டர் : ஹெட்போன் பயன்படுத்துவதால் செவித்திறன் குறைவது மட்டுமல்ல மன அழுத்தமும், ரத்த அழுத்தம் அதிகமாகும், அதனால் கோபம் அதிகமாகும். தலைவலி வரும், காதைச் சுற்றிலும் சூடாகும் வாய்ப்பும் உள்ளது.

  • அபூர்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *