பணம்

பாதுகாப்பான முதலீடு… மாதம் தோறும் வட்டி

அஞ்சலகத்தில் புதிய திட்டம்

வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் போட வேண்டும் என்று விரும்பினால், அவர்களே, ‘மியூட்சுவல் பண்ட் முதலீடு சிறந்தது’ என்று மூளைச் சலவை செய்கிறார்கள். ஆனால், அது எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் கை கொடுப்பதில்லை. ஆகவே, பாதுகாப்பும் நிரந்தரமான வட்டியும் வேண்டும் என்றால், இப்போதைக்கு வங்கியை விட அஞ்சல் அலுவலகத்தில் நல்ல திட்டங்கள் இருக்கின்றன.

அதில் முதன்மையானது மாதாந்திர வருமானத் திட்டம். குறிப்பாக கையில் இருக்கும் பணத்தை அல்லது நிலம், தங்கம் போன்றவற்றை விற்றுவிட்டு கிடைக்கும் பணத்தைப் போட்டு மாதம் மாதம் செலவுக்கு பணம் வர வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு இதுவே நல்ல திட்டம்.

அஞ்சல் துறையை மத்திய அரசு நடத்துகிறது என்பதால் பாதுகாப்பு குறித்து யாருக்கும் சந்தேகம் தேவையில்லை. தைரியமாக முதலீடு செய்யலாம்.  மாதாந்திர வட்டி எதிர்பார்ப்பவர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

இந்த திட்டத்தில் பணத்தை 5 வருட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் பெறும் வருமானம் 5 வருட காலத்திற்கு வந்து கொண்டே இருக்கும். 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, நீங்கள் டெபாசிட் செய்த தொகை தபால் அலுவலகத்தால் திருப்பி அளிக்கப்படும்.

இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் உங்களுக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கிறது. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எந்தவொரு குடிமகனும் தங்கள் பணத்தை முதலீடு செய்து வட்டி மூலம் கை நிறைய சம்பாதிக்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் அஞ்சல் அலுவலகத்தில் கணக்கைத் திறக்க வேண்டும். கணக்கைத் திறக்கும் போது உங்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, நிரந்தரக் குடியுரிமைச் சான்றிதழ் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்க வேண்டும்.

மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்து மாதம் ரூ.9250 சம்பாதிக்க விரும்பினால் இந்தத் திட்டத்தில் ரூ.15 லட்சத்தை மொத்தமாக 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும், அப்போதுதான் ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்யும்போது, 7.4 சதவீத விகிதத்தைக் கணக்கிட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து தபால் நிலையத்திலிருந்து மாதம் ரூ.9250 கிடைக்கும். 5 வருடங்கள் முடிந்த பிறகு நீங்கள் முதலீடு செய்த தொகையை திரும்பப் பெறலாம்.

இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து பலன்களைப் பெறலாம். இது முதலீட்டுக்கு நல்ல திட்டம். தைரியமா பணம் போடுங்க. நிம்மதியா இருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *